சத்துணவு பணியாளர் பாப்பாளுக்கு குரல் கொடுக்கும் இயக்குனர்!
சென்னை: இயக்குனர் நவீன் சத்துணவு பணியாளர் பாப்பாள் பிரச்சனை குறித்து ட்வீட் செய்துள்ளார்.
மூடர் கூடம் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான நவீன் இப்போது அலாவுதீனின் அற்புத கேமரா என்ற படத்தை இயக்கி வருகிறார்.

திருப்பூர் மாவட்டம் அவினாசி அடுத்துள்ள திருமலைக்கவுண்டம்பாளைய அரசு உயர்நிலைப் பள்ளியில் பாப்பாள் என்பவர் சமையலராக பணியாற்றி வருகிறார். இவர் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர் என்பதால் சமையல் வேலையில் ஈடுபடக்கூடாது என சில மாணவர்களின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
அதன்பிறகு, பாப்பாளை சாதியின் பெயரைச் சொல்லி திட்டுதல், பணி செய்ய விடாமல் தடுத்தல், வன்கொடுமை சட்டம் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் 89பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த நிலையில், ஆகஸ்ட் 7ஆம் தேதி அவர் சமைத்த உணவில் பல்லி விழுந்ததாகவும், அதனால் மாணவிகளுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டதாகவும் கூறி மாணவிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மேலும், பாப்பாள் கவனக்குறைவாக இருந்ததால் தான் உணவில் பல்லி விழுந்தது என தலைமை ஆசிரியை சசிகலா அவினாசி காவல் நிலையத்தில் புகாரளித்தார்.
அதை மறுத்துள்ள பாப்பாள், பவித்ரா என்ற மாணவி மதிய உணவை வாங்கி வைத்துவிட்டு கழிப்பறைக்கு சென்றதாகவும். அதன்பிறகு தலைமை ஆசிரியை சசிகலா வந்து, மாணவியின் தட்டிலிருந்து பல்லியை எடுத்துக்காட்டி உணவில் பல்லி விழுந்துவிட்டது சாப்பிட வேண்டாமென்று கூறி செல்போனில் போட்டோ எடுத்துக்கொண்டார் எனவும், பிறகு ஆம்புலன்ஸுக்கு தகவல் கொடுத்தார் எனவும் விளக்கமளித்துள்ளார்.
தீண்டாமைக்கொடுமை குறித்து பாப்பாள் ஏற்கனவே புகாரளித்து அது தொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது. அதனால், சமைத்த உணவை கொஞ்சம் சாப்பிட்டுவிட்டு சிறிதளவு தனியாக எடுத்து வைத்துக்கொள்வதை வழக்கமாகக் கொண்டுள்ளாராம்.
மேலாதிக்க குரூர எண்ணத்தோடு, இறந்த பல்லியை மறைத்துவைத்து பழிசுமத்துவதாக பாப்பாள் புகார் அளித்துள்ளார்.
ட்விட்டரில் அந்த புகார் மனு ஒருவரால் பகிரப்பட்டுள்ளது. அதை ரீட்வீட் செய்துள்ள நவீன், "நூற்றாண்டுகள் கடந்தும் உங்களுக்கு அடிமைகளாகவே இருக்கவேண்டும். அடிப்படை மனித வாழ்வை கூட வாழ்ந்து பார்த்திட கூடாது. அப்படித்தானே?" எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.


Click it and Unblock the Notifications











