GOAT: சினேகாதான் சரியான ஜோடி.. புகழ்ந்து தள்ளிய லேடி சூப்பர் ஸ்டார் - வெங்கட் பிரபு ஓபன்
சென்னை: இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் கடந்த 5ஆம் தேதி வெளியான படம் தி கோட். இந்தப் படத்தில் நடிகர் விஜய் இரட்டை வேடங்களில் நடித்துள்ளார். மேலும் இந்தப் படத்தில், பிரபுதேவா, பிரசாந்த், அஜ்மல், ஜெய்ராம், சினேகா, மீனாட்சி சௌத்ரி, பிரேம்ஜி, மைக் மோகன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படம் வெளியாகி முதல் நாளே ரூபாய் 126.32 கோடிகளை வசூல் செய்தது. இதுமட்டும் இல்லாமல், படம் முதல் நான்கு நாட்களில் ரூபாய் 288 கோடி வசூல் செய்தது.
இந்தத் தகவலை படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஏ.ஜி.எஸ்., நிறுவனமே அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இது விஜய் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தது. இந்நிலையில் படத்தின் இயக்குநர் வெங்கட் பிரபு, சமீபத்தில் அளித்த பேட்டியில் படம் குறித்து பல சுவாரஸ்யமான தகவல்களைப் பகிர்ந்துள்ளார். அது குறித்து இந்தத் தொகுப்பில் காணலாம்.

இயக்குநர் வெங்கட் பிரபு , தமிழ் சினிமாவில் தனக்கென தனிபாணியை உருவாக்கி, அதில் சிம்மசொப்பனம் அமைத்து அமர்ந்துள்ளார் என்றே கூறவேண்டும். லோ-பட்ஜெட்டில் ஒரு படம் எடுக்க வேண்டும் என்றால் இவரது இயக்கத்தில், சென்னை -28, சரோஜா, கோவா போன்ற படங்களை பட்டியலிடலாம். அதுவே ஒரு மாஸ் ஹீரோவுக்கான தரமான படங்கள் என்றால், அஜித் நடிப்பில் வெளியான மங்காத்தா, சிம்பு நடிப்பில் வெளியான மாநாடு ஆகிய படங்களைக் கூறலாம். அதேபோல் ஹை பட்ஜெட்டில் டெக்னிக்கலாக ஒரு படத்தை கை காட்டவேண்டும் என்றால், விஜய் நடிப்பில் வெளியான தி கோட் படத்தினைக் கூறலாம்.

இப்படி, கமர்ஷியல் எலமெண்ட்ஸ்களை எப்போது மற்ற இயக்குநர்களைவிட, தனக்கான சினிமாவாக உருவாக்கியவர் இயக்குநர் வெங்கட் பிரபு. இவரது இயக்கத்தில் வெளியாகியுள்ள தி கோட் படம், விஜய் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. இது மட்டும் இல்லாமல், படத்தினைப் பார்த்த மற்ற நடிகர்களின் ரசிகர்களும் படத்தைக் கொண்டாடி தீர்த்தனர். குறிப்பாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமல்ஹாசன், சியான் விக்ரம், அஜித் உள்ளிட்ட நடிகர்களின் ரசிகர்களும் இந்தப் படத்தினைக் கொண்டாடும் வகையில் காட்சிகளை அமைத்திருந்தார் வெங்கட்.

ரசிகர்கள் மகிழ்ச்சி: இதுமட்டும் இல்லாமல், படத்தில் நடிகர் விஜயகாந்த் ஏ.ஐ., தொழில்நுட்பட்தை பயன்படுத்தி, படத்தில் நடித்துள்ளதைப்போல், காட்சி உருவாக்கப்பட்டது. கேப்டன் விஜயகாந்த் வரும் காட்சிதான் படத்தின் முதல் காட்சி என்பதால், கேப்டன் ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இதுமட்டும் இல்லாமல், படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் கேமியோ கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இது அவரது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது.

வெங்கட் பிரபு: இந்நிலையில் வெங்கட் பிரபு சமீபத்தில் அளித்த பேட்டியில், "கோட் படத்தில் சினேகா கதாபாத்திரத்திற்கு முதலில் நாங்கள் நயன்தாராவைத்தான் தேர்வு செய்தோம். ஆனால் படம் பார்த்த பின்னர் நயன்தாரா எனக்கு போன் செய்து, இந்தக் கதாபாத்திரத்திற்கு சினேகாதான் கச்சிதமானவர். அந்த கதாபாத்திரத்தை சிறப்பாக நடித்துள்ளார் எனக் கூறியதாக கூறியுள்ளார். மேலும் முதலில் நாங்கள் தேர்வு செய்த நயன்தாராவே, இவ்வாறு கூறியிருப்பது, மகிழ்ச்சியாக உள்ளது.

நயன் - சினேகா: படம் பார்த்த ரசிகர்கள்தான் ஏதேதேதோ பேசிக்கொண்டு உள்ளார்கள். ஆனால் நயன்தாரா மிகச் சிறப்பாக கூறியுள்ளார். நான், படத்தில் வைத்திருந்த மருத்துவமனைக் காட்சியில், சினேகாவும் விஜய்யும் சிறப்பாக நடித்திருந்தார்கள். குறிப்பாக மகன் இறந்துவிட்டான் எனக் கூறாமல், தங்களது நடிப்பின் மூலமே வெளிப்படுத்தியிருப்பார்கள்.

இந்தக் காட்சி இவர்கள் இருவருக்குமான காட்சிகளில் சிறப்பான காட்சி. நயன்தாரா எனக்கு போன் செய்து சினேகாவை பாராட்டியதை நான் இன்னும் சினேகாவுக்கே சொல்லவில்லை. இந்த பேட்டியின் மூலம் சொல்லிக் கொள்கின்றேன்" எனக் கூறினார்.


Click it and Unblock the Notifications











