Nelson Dilipkumar: தயாரிப்பாளராக களமிறங்கும் டைரக்டர் நெல்சன்.. யாரு ஹீரோ தெரியுமா?
சென்னை: இயக்குநர் நெல்சன் திலீப்குமார் கோலமாவு கோகிலா படத்தில் துவங்கிய தன்னுடைய பயணத்தை தற்போது ஜெயிலர் படம் மூலம் சிறப்பாக்கியுள்ளார்.
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த மாதத்தில் நெல்சன் இயக்கத்தில் வெளியான ஜெயிலர் படம் சர்வதேச பாக்ஸ் ஆபீசில் வசூல் சாதனை படைத்துள்ளது.
இந்தப் படத்தை தொடர்ந்து நெல்சனின் அடுத்தப்படம் குறித்து அறிந்துக் கொள்ள ரசிகர்கள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர்.

படம் தயாரிக்கும் இயக்குநர் நெல்சன் திலீப்குமார்: நடிகர் ரஜினிகாந்த், சிவராஜ்குமார், மோகன்லால், சுனில், ஜாக்கி ஷெராப், ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, மிர்ணா, வினாயகன் என நட்சத்திரப் பட்டாளத்தையே கூட்டணி அமைத்துக் கொண்டு ஜெயிலர் படத்தில் களமிறங்கினார் இயக்குநர் நெல்சன் திலீப்குமார். படத்தில் சிறப்பான ஸ்கிரிப்ட், கதைக்களம், காட்சி அமைப்புகள் என அவரின் சிறப்பான பங்களிப்பையடுத்து ஜெயிலர் படம் சர்வதேச அளவில் அதிகமான ரசிகர்களை சென்றடைந்தது.
இதையடுத்து ஜெயிலர் படம் ரசிகர்களிடையே அதிகமான வரவேற்பையும் வசூலையும் பெற்றுள்ளது. சர்வதேச அளவில் இந்தப் படம் 700 கோடி ரூபாய் கலெக்ஷனை கடந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. முன்னதாக விஜய்யின் பீஸ்ட் படத்தை இயக்கியிருந்த நெல்சன் கலவையான விமர்சனங்களை பெற்றார். இதையடுத்து வெளியான ஜெயிலர் படம் அவரை மீண்டும் முன்னணி இயக்குநர்கள் வரிசையில் இடம்பெற செய்துள்ளது.
ஜெயிலர் படத்தின் அதிரிபுதிரி வெற்றியை தொடர்ந்து இந்திய அளவில் கவனம் பெற்றுள்ள நெல்சன் திலீப்குமார் அடுத்ததாக யாரை இயக்குவார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்துள்ளது. இதனிடையே தற்போது அவர் தயாரிப்பாளராகவும் அவதாரம் எடுத்துள்ளார். நெல்சனின் உதவி இயக்குநர் சிவபாலன் இயக்கவுள்ள படத்தை தயாரிக்கவுள்ளார் நெல்சன். இந்தப் படத்தில் கவின் ஹீரோவாக கமிட்டாகியுள்ளார்.
இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. கவினுக்கு பிரியங்கா மோகன் ஜோடியாக நடிக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் சூட்டிங் அடுத்த ஆண்டில் துவங்கவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. சமீபத்தில் கவின் நடிப்பில் வெளியான டாடா மிகப்பெரிய வெற்றியை கொடுத்துள்ளது. இதையடுத்து அவருக்கு பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. அடுத்ததாக விஜய்யின் மகன் சஞ்சய் இயக்கத்திலும் இவர் கமிட்டாகவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் நெல்சன் திலீப்குமாரின் முதல் தயாரிப்பிலும் கவின் இணைந்துள்ளது அவரது ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. வெற்றிப் பட இயக்குநர்கள் அட்லீ போன்றவர்கள் தயாரிப்பிலும் இறங்கிவரும் நிலையில், தற்போது அந்த வரிசையில் நெல்சன் திலீப்குமாரும் இணைந்துள்ளார். இந்தப் படத்தின் நாயகன், நாயகி கன்பார்ம் ஆன நிலையில், அடுத்ததாக படத்தின் மற்ற நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பும் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











