Rajinikanth: ரஜினியை இயக்குவது சவாலையும் குழப்பத்தையும் கொடுத்தது.. வெளிப்படுத்திய நெல்சன்!
சென்னை: நடிகர் ரஜினிகாந்தின் ஜெயிலர் படத்தை இயக்கி படத்தை சூப்பர் டூப்பர் ஹிட்டாக்கியுள்ளார் இயக்குநர் நெல்சன்.
இந்தப் படத்தில் ரஜினிகாந்த், ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, மோகன்லால், ஜாக்கி ஷெராப், சுனில், சிவராஜ்குமார் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் லீட் கேரக்டர்களில் நடித்திருந்தனர்.

ஒவ்வொரு மொழியிலும் முன்னணி நடிகர்களை ஜெயிலர் படத்தில் நடிக்க வைத்து அவர்கள் அனைவரும் சமமான கேரக்டர்களை கொடுத்திருந்தார் நெல்சன் திலீப்குமார்.
இயக்குநர் நெல்சன் திலீப்குமார்: நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்தின் ஜெயிலர் படம் சமீபத்தில் வெளியாகி மாஸ் ஹிட் கொடுத்துள்ளது. இந்தப் படத்தில் ரிடையர்ட் ஜெயிலராக நடித்து ரசிகர்களை அதிகமாக கவர்ந்திருந்தார் ரஜினி. படத்தின் துவக்கத்தில் சாதுவாக காட்டப்படும் ரஜினி, தன்னுடைய மகன் கொல்லப்பட்டதாக நினைத்து அதிரடியாக மாறுவதாக இந்தப் படத்தின் கதைக்களம் அமைந்தது. ஒருகட்டத்தில் தன்னுடைய மகனே குற்றவாளியாக நிற்கும்நிலையில் ரஜினியின் நிலைப்பாட்டையும் இந்தப் படம் எடுத்துக் காட்டியது.
வசூல்மழை பொழிந்த ஜெயிலர்: இந்தப் படம் சர்வதேச அளவில் அனைத்து ரசிகர்களையும் கவர்ந்து நல்ல விமர்சனங்களையும் அதிகமான வசூலையும் பெற்றுள்ளது. இந்தப் படத்தின் வெற்றியை ரஜினி, நெல்சன், அனிருத்துடன் கொண்டாடி மகிழ்ந்தது சன் பிக்சர்ஸ். மேலும் படத்தில் வேலை செய்த அனைவரும் கௌரவப்படுத்தப்பட்டனர். ரஜினி மற்றும் நெல்சனுக்கு விலையுயர்ந்த கார் மட்டுமில்லாமல் செக்கும் கொடுக்கப்பட்டது. இசையமைப்பாளர் அனிருத்திற்கு விலையுயர்ந்த கார் பரிசளிக்கப்பட்டது.
சொதப்பிய பீஸ்ட்: இந்தப் படத்திற்கு முன்னதாக நெல்சன் இயக்கத்தில் வெளியான பீஸ்ட் படம் மிகப்பெரிய சொதப்பலாக அமைந்தது. விஜய் லீட் கேரக்டரில் நடித்திருந்த இந்தப் படம் அதிகமான விமர்சனத்திற்குள்ளானது. இதனால் முன்னதாக கமிட்டாகியிருந்த ரஜினியின் படம் நெல்சனுக்கு கேள்விக்குறியானது. இருந்தபோதிலும் அவர்மீது நம்பிக்கை வைத்து தயாரிப்புத்தரப்பு மற்றும் ரஜினி இந்தப் படத்தை இயக்கும் வாய்ப்பை கொடுத்தனர். அவர்களது நம்பிக்கையை நெல்சன் வீணாக்கவில்லை.
குழப்பத்தை ஏற்படுத்திய ஜெயிலர் படம்: படம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்து இந்த ஆண்டின் வெற்றிப்பட வரிசையில் முன்னணி இடம் பிடித்துள்ளது. இந்நிலையில் இந்தப்படத்தை டைரக்ட் செய்தபோது தனக்கு மிகப்பெரிய சவாலும் குழப்பமும் ஏற்பட்டதாக இயக்குநர் நெல்சன் தனது சமீபத்திய பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். ரஜினியிசம்தான் இந்தப் படத்தின் முதுகெலும்பாக இருந்ததாகவும் இதையொட்டியே தான் கதைக்களத்தை உருவாக்கியதாகவும் அவர் கூறியுள்ளார்.
குழப்பத்திற்கான காரணம்: இந்தப் படத்தை பார்க்க அதிகமான ரசிகர்களை திரையரங்குகளுக்கு வரவழைக்க வேண்டும் என்பதை இலக்காக வைத்து தான் படத்தை உருவாக்கியதாகவும் நெல்சன் குறிப்பிட்டுள்ளார். ரஜினியின் ரசிகர்கள் குறித்து தெரிந்து வைத்திருந்ததாகவும் கடந்த 50 ஆண்டுகளாக அவரின் படங்கள் ஏற்படுத்திய தாக்கத்தையும் தான் அறிந்திருந்ததாகவும் நெல்சன் கூறியுள்ளார். அதனால் அவரது ரசிகர்களை திருப்தி படுத்த முடியுமா என்ற குழப்பம் ஏற்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











