இறப்பதற்கு ஒரு வாரத்துக்கு முன்னாடிதான் எச்சரித்தேன்.. மயில்சாமி குறித்து மனம் திறந்த பி.வாசு
சென்னை: மயில்சாமி குறித்து தமிழ் சினிமாவின் மூத்த இயக்குநர்களில் ஒருவரான பி.வாசு மனம் திறந்து பேசியிருக்கிறார்.
மயில்சாமி தமிழ் சினிமாவின் சிறந்த நகைச்சுவை நடிகர் ஆவார். வடிவேலு, விவேக் என்று இரண்டு ஜாம்பவான்களுடன் அவர் இணைந்து செய்த காமெடிகள் காலங்கடந்து பேசப்படுபவை. காமெடி நடிகராக மட்டுமின்றி பல குரல் கலைஞனாகவும் திகழ்ந்தவர் மயில்சாமி. அதேபோல் சில நிகழ்ச்சிகளை தொகுத்தும் வழங்கியிருக்கிறார்.

உதவிக்கு உதாரணம் மயில்சாமிதான்
நடிகர், பல குரல் கலைஞன், தொகுப்பாளர் என பல முகங்கள் உடைய மயில்சாமிக்கு முக்கியமான முகம்தான் உதவி. தன்னால் முடிந்த அளவு உதவி செய்வதோடு நிறுத்த்க்கொள்பவர்கள் மத்தியில் தன்னால் முடிந்த அளவு மட்டுமின்றி பிறரிடம் கடன் பெற்று உதவி செய்தவர் மயில்சாமி. அதேபோல் தனது வீட்டில் இருக்கும் நகைகளை அடமானம் வைத்தும் அவர் உதவி செய்திருக்கிறார்.

தீவிர சிவபக்தரான மயில்சாமி
மயில்சாமி தீவிர சிவபக்தர் ஆவார். வருடா வருடம் சிவராத்திரிக்கும் கண் விழிப்பதை வழக்கமாக வைத்திருந்தவர். அப்படி இந்த வருடமும் கண் விழித்திருந்தவர் சிவராத்திரி அன்றே உயிரிழந்தார். அவரது உயிரிழப்பு திரையுலகினர், ரசிகர்கள் என பலரை அதிச்சியிலும், சோகத்திலும் ஆழ்த்தியுள்ளது. மேலும் திரையுலகை சேர்ந்தவர்கள் மயில்சாமியுடனான நினைவுகள் குறித்து சோகத்துடன் கூறியும்வருகின்றனர்.

மனம் திறந்த பி.வாசு
அந்த்வகையில் இயக்குநரும், மயில்சாமியிடம் நெருங்கி பழகியவருமான பி.வாசு மயில்சாமி குறித்து தனியார் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய வாசு, "நான் எப்போது வெளியே செல்கிறேனோ அப்போதெல்லாம் என்னிடம் மயில்சாமி வந்து 'எப்போ சார் ப்ரோகிராம்?, எப்போ சார் மீண்டும் வருவீங்க? இதைக் கேட்காமல் இருக்க மாட்டார்.

மயில்சாமியை எச்சரித்த பி.வாசு
மயில்சாமி இறப்பதற்கு ஒருவாரம் முன்னதாக அவரை எனது வீட்டிற்கு அழைத்திருந்தேன். அதனால் அவரும் வீட்டிற்கு வந்திருந்தார். அப்போது அவரிடம் நான் 'மயில் உன் உடம்பை பார்த்துக்கோ, எல்லாரும் இதை சொல்ல மாட்டாங்க, நான் இதை உனக்கு சொல்றேன், எல்லாத்தையும் நீ விளையாட்டாக எடுத்துகொள்ளாதே என்றேன். அதற்கு அவர் சிரித்தபடி விடுங்க சார் அதெல்லாம் ஒன்னும் நடக்காது சார் என்றார்.

மயில்சாமி ஃபோன் பண்ணினால் யாருக்காவது பயன்
மயில்சாமி ஃபோன் செய்து இதுவரை நான் எடுக்காமல் இருந்தது இல்லை. அதேபோல் அவர் ஒரு உதவி கேட்கிறார் என்றால் அதில் நிச்சயம் உண்மை இருக்கும். ஒருவருக்கு அவசியம் தேவைப்படக்கூடிய உதவியாக; சரியான நேரத்தில் பயனுள்ள உதவியாக அது இருக்கும். சினிமாவில் இருக்கும் இந்த கால சிறிய நடிகர்களுக்கு மறைந்த மயில்சாமிதான் எப்போதும் எம்ஜிஆர்" என்று கூறினார்.


Click it and Unblock the Notifications











