மன அழுத்தத்தால் குடிக்கு அடிமையானேன்.. வாழ்க்கையை தொலைத்த நடிகர்!
சென்னை : மன அழுத்தத்தில் இருந்ததால் குடிக்கு அடிமையானேன் என நடிகர் ஷக்தி மனம் திறந்து பல விஷயங்களை பேசி உள்ளார்.
தென்னிந்திய சினிமா முக்கியமான இயக்குனர்களில் ஒருவரான பி வாசுவின் மகன் தான் ஷக்தி.
தந்தை வெற்றிகரமான இயக்குனராக இருந்த போதிலும், இவரது மகன் சக்தியால் தமிழ் சினிமாவில் ஒரு நிலையான இடத்தை பிடிக்க முடியவில்லை.

இயக்குநர் பி வாசு
பிரபல இயக்குநரான பி வாசு, சின்னத்தம்பி, மன்னன், வால்டர் வெற்றி வேல், உழைப்பாளி, கூலி, சந்திரமுகி என பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார். தற்போது இவர் சந்திரமுகி 2 திரைப்படத்தை இயக்கி வருகிறார். இதில்,ராகவா லாரன்ஸ், கங்கனா ரனாவத், வடிவேலு ஆகியோர் நடித்து வருகின்றனர். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

நடிகர் ஷக்தி
இயக்குநர் பி வாசு தனது மகன் ஷக்தியை தொட்டால் பூ மலரும் என்ற படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகப்படுத்தினார். இந்த படத்தில் இடம் பெற்ற அரபு நாடே அசந்து நிற்கும் அழகியா... என்ற பாடலின் மூலம் இளம் பெண்களின் கனவு கண்ணனாக மாறினார் ஷக்தி. இந்த படத்திற்கு பின் பல படங்கள் நடித்து உள்ளார். ஆனால் அவை அனைத்தும் சொல்லிக்கொள்ளும்படி இல்லை.

பிக் பாஸ் நிகழ்ச்சியில்
பட வாய்ப்பு எதுவும் இல்லாததால், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டால், பட வாய்ப்புகள் வரும் என்று நினைத்த ஷக்திக்கு அது நெகட்டிவாக மாறி, கொஞ்சம் நஞ்சம் இருந்த பெண் ரசிகைகளையும் இழந்தார். தற்போது பட வாய்ப்பு இல்லாததால், மன அழுத்தத்தில் சிக்கி உள்ளார்.

மன அழுத்தத்தில் இருந்தேன்
இந்நிலையில், நடிகர் ஷக்தி அண்மையில் அளித்துள்ள பேட்டி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில், நான் மிகுந்த மன அழுத்தத்தில் இருந்தேன், என்னுடைய பர்சனல் வாழ்க்கையும் சொல்லிக்கொள்ளும் படி இல்லை, இந்த நேரத்தில் ஆறுதல் கூறுவதாக சில தப்பான நண்பர்களிடம் நான் சிக்கிக்கொண்டு குடிக்கு அடிமையானேன். இதனால், படத்தின் மீது என்னால் கவனம் செலுத்த முடியாமல் போனது. பல படங்களின் வாய்ப்பை நான் நழுவவிட்டு இருக்கிறேன்.

பல பிரச்சனைகள்
குடும்பத்தில் இருந்த மன அழுத்தம், டென்ஷன் காரணமாகத்தான் நான் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு போனேன். அது என்ன நிகழ்ச்சி என்று கூட எனக்கு தெரியாது. ஆனால், அந்த நிகழ்ச்சிக்கு பின் பல பிரச்சனைகளை நான் சந்தித்தேன். அந்த வீட்டில் நான் மட்டும்தான் ஹீரோ, ஓவியா ஹீரோயின். ஆனால், அவரை நல்லவராக காட்ட என்னை கெட்டவராக்கிவிட்டார்கள்.

அம்மாவின் பிரார்த்தனை
அதன் பிறகு அட போங்கடா, யாரு என்னை எப்படி நினைச்சா என்ன என்கிற மனநிலைக்கு வந்துவிட்டேன்.இப்போது, மன அழுத்தம், குடி அனைத்தில் இருந்தும் மீண்டு விட்டேன், அதற்கு காரணம் என் அப்பா, அம்மாவின் பிரார்த்தனை தான், என் மகனுக்கு நான் ஒரு நல்ல தந்தையாக இருக்க விரும்புகிறேன். இரண்டு பெரிய படத்திற்கான வேலையை ஜூன் மாதம் தொடங்க இருப்பதாக ஷக்தி அந்த பேட்டியில் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











