ஸ்டண்ட் மாஸ்டர் மோகன் ராஜ் மரணம்.. சிம்புவைத் தொடர்ந்து பா ரஞ்சித் பண உதவி!
சென்னை: இயக்குநர் பா.ரஞ்சித்தின் 'வேட்டுவம்' படப்பிடிப்பில் ஸ்டண்ட் மாஸ்டர் மோகன்ராஜ் உயிரிழந்தார். கார் சண்டைக்காட்சி படமாக்கப்பட்ட போது, விபத்தில் சிக்கி மோகன்ராஜ் உயிரிழந்தார். இது பலரை சோகத்தில் ஆழ்த்தி இருக்கும் நிலையில், ஸ்டண்ட் மாஸ்டருக்கு பா. ரஞ்சித் இழப்பீடு வழங்கி உள்ளார்.
பா ரஞ்சித் இயக்கத்தில் கடந்த ஆண்டு தங்கலான் திரைப்படம் வெளியானது. இந்த படத்தை தொடர்ந்து தற்போது ரஞ்சித் 'வேட்டுவம்' என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தை கோல்டன் ரேஷியோ பிலிம்ஸ் நிறுவனத்துடன் இணைந்து நீலம் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த படத்தின் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி படத்தின் மீதான எதிர்ப்பு அதிகரித்துள்ளது. இந்த படத்தில், அட்டகத்தி தினேஷ் கதாநாயகனாகவும், நடிகர் ஆர்யா வில்லனாக நடித்து வருகின்றனர். மேலும், அசோக் செல்வன், பகத் பாசில் ஆகியோர் நடித்து வருகின்றனர்.

படப்பிடிப்பில் விபத்து: வேட்டுவம் படத்தின் படப்பிடிப்பு 10ந் தேதியில் இருந்து, நாகப்பட்டினம், கீழையூர் பகுதியில் நடைபெற்று வருகிறது. இதில், காஞ்சிபுரத்தை சேர்ந்த மோகன்ராஜ் என்ற 52 வயதான ஸ்டண்ட் மாஸ்டர் காரை துரத்தும் காட்சியில் நடித்து வந்தார். அந்த காட்சியில் ஒரு இடத்தில் கார் மோதி அந்தரத்தில் பறப்பது போல காட்சி படமாக்கப்பட்ட போது, கார் தவறுதலாக விழுந்து மோதியதில், காரில் இருந்த மோகன் ராஜ் பேச்சு மூச்சு இல்லாமல் இருந்தார். அவரை மீட்டு நாகப்பட்டினம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு, அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக கீழையூர் போலீசார், படப்பிடிப்பு தளத்தில் விசாரணை நடத்தினர்.
ரஞ்சித் மீது வழக்கு: இதன் பின், படப்பிடிப்பு தளத்தில் அலட்சியமாக செயல்பட்டது, கவனக்குறைவாக இருந்தது என இயக்குநர் பா. ரஞ்சித், ராஜ்கமல், வினோத், பிரபாகரன் ஆகிய நான்கு பேர் மீது 3 பிரிவுகளில் கீழையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். ஆனால், பா.ரஞ்சித் பாதுகாப்பு இல்லாமல் படப்பிடிப்பு நடத்தியிருக்க மாட்டார். எந்த இயக்குநர்களும் அப்படி செய்ய மாட்டார்கள் என்றும் ரஞ்சித்திற்கு ஆதரவாக சினிமா பிரபலங்கள் பேசினார்கள்.
நிதி உதவி: 52 வயதில் அகால மரணமடைந்த மோகன் ராஜின் குடும்பத்திற்கு திரைத்துறையினர் பலரும் பல உதவிகளை செய்து வருகின்றனர். அந்த வகையில் நடிகர் சிம்பு அவரது குடும்பத்திற்கு 1 லட்ச ரூபாய் காசோலையை கொடுத்துள்ளார். இந்த விஷயம் யாருக்குமே தெரியாமல் இருந்த நிலையில், அண்மையில் பேட்டி ஒன்றில் இதுபற்றி சில்வா மாஸ்டர் கூறியிருந்தார். அது மட்டுமில்லாமல் நடிகர் சூர்யா, கடந்த 10 ஆண்டுகளாக ஸ்டண்ட் கலைஞர்களுக்கு இன்சூரன்ஸ் கட்டி வருவதாகவும் ஸ்டண்ட் சில்வா அந்த பேட்டியில் கூறியிருந்தார். நடிகர் சிம்பு ஸ்டண்ட் மாஸ்டர் மோகன்ராஜின் குடும்பத்திற்கு உதவி செய்த செய்தி இணையத்தில் பரவியதை அடுத்து, வேட்டுவம் படத்தின் இயக்குநரான பா ரஞ்சித், மோகன்ராஜின் குடும்பத்திற்கு ரூ.20 லட்சத்தை நிதி உதவி செய்துள்ளார். அதே போல, நடிகர் விஷால் மோகன் ராஜ் பிள்ளைகளின் படிப்பு செலவை நானே ஏற்றுக்கொள்கிறேன் என அறிவித்தார். ஸ்டண்ட் கலைஞர்களுக்கு சங்கம் இருப்பினும் முறையான காப்பீடு கிடைப்பதில்லை என்று தனது வேதனையை வெளிப்படுத்தி இருந்தார்.


Click it and Unblock the Notifications











