அட்லீயை தொடர்ந்து பா ரஞ்சித்திற்கு வந்த பாலிவுட் ஆசை..விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
சென்னை: இயக்குநர் அட்லீ, ஜவான் படத்தை இயக்கி பாலிவுட்டில் மாஸ் காட்டி விட்டார். இந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து பாலிவுட் ஹீரோக்கள் அட்லீயின் அழைப்புக்காக காத்துக்கொண்டு இருக்கும் நிலையில், தமிழ் சினிமாவின் மற்றொரு ஜாம்பவானான பா ரஞ்சித்தும் பாலிவுட்டில் என்ட்ரி கொடுக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவில் முக்கியமான இயக்குநராக வலம் வருகிறார் இயக்குநர் பா. ரஞ்சித். வெங்கட் பிரபு உதவி இயக்குனராக பணியாற்றியவர் பா.இரஞ்சித், 2012ம் ஆண்டு அட்டகத்தி திரைப்படத்தின் மூலம் இயக்குனர் அவதாரம் எடுத்தார். முதல் படத்திலேயே மக்களின் கவனத்தை பெற்ற இவர், கார்த்தியை வைத்து மெட்ராஸ் என்ற மாஸ் ஹிட் படத்தை இயக்கினார்.இந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, ரஜினிகாந்தை வைத்து, கபாலி, காலா என இரண்டு ஹிட் படங்கள் கொடுத்தார். இப்படத்தில் அடித்தட்டு மக்களின் வலியை ஆணித்தனமாக பேசி இருப்பார்.

தங்கலான்: தற்போது பா ரஞ்சித், தங்கலான் படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தை, ஸ்டுடியோ கிரீன் நிறுவனமும், ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்ஸும் இணைந்து தயாரித்துள்ளது. கோலார் தங்க வயலை மையப்படுத்திய ப்ரீயட் திரைப்படமான இப்படத்தில், விக்ரம் முற்றிலும் வித்தியாசமான தோற்றத்தில் நடித்துள்ளார். அவருடன் பசுபதி, பார்வதி திருவோத்து, மாளவிகா மோகனன் உள்பட பலர் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படத்திற்கு கிஷோர் குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். தங்கலான் படம் ஏப்ரல் மாதம் திரைக்கு வரும் என கூறப்பட்ட நிலையில், தயாரிப்புத் தரப்பு இன்னும் படவெளியீட்டு தேதியை அறிவிக்காமல் உள்ளது.
பாலிவுட்டில் பா ரஞ்சித்: இதற்கிடையில் பா. ரஞ்சித் பாலிவுட்டில் படம் ஒன்றை இயக்கப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. பாலிவுட்டின் பிரபல தயாரிப்பு நிறுவனத்துடன் பா ரஞ்சித் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், கூடிய விரைவில், பட வேலைகள் துவங்க இருப்பதாகவும் அந்த படத்தில் நடிகர் ரன்வீர் சிங் நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தகவலை கேள்விப்பட்ட நெட்டிசன்ஸ் எல்லாரும் பாலிவுட்ஸ் போய்ட்டா எப்படி என கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











