சோகத்தில் மூழ்கிய பா. ரஞ்சித்.. ஆம்ஸ்ட்ராங்கால் பட்டைதீட்டப்பட்ட இயக்குநர்! பின்னணி
சென்னை: தமிழ்நாடே தற்போது மிகவும் பரபரப்பாக பேசி வருவது பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டிக் கொலை செய்யப்பட்டது தொடர்பாகத்தான். தமிழ்நாட்டின் தலைநகரில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பகுஜன் சமாஜ் கட்சியினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மர்ம நபர்களால் வெட்டப்பட்டு ரத்த வெள்ளத்தில் இருந்த ஆம்ஸ்ட்ராங்கை கிரீம்ஸ் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி ஆம்ஸ்ட்ராங் உயிரிழந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்ததும் திரைப்பட இயக்குநர் பா. ரஞ்சித், உடனடியாக ஆம்ஸ்ட்ராங் அனுமதிக்கப்பட்ட கிரீம்ஸ் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அதிர்ச்சியுடன் வந்தார். அங்கு வந்ததும், ஆம்ஸ்ட்ராங்கின் மரண செய்தியைக் கேட்டு கதறி அழுதார். இது தொடர்பான வீடியோக்களும் புகைப்படங்களும் இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது.

ஆம்ஸ்ட்ராங் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக பொறுப்பேற்றதில் இருந்து ஆயிரக்கணக்கான இளைஞர்களின் கல்விக்கு உதவி செய்து வந்துள்ளார். அந்த ஆயிரக்கணக்கான மாணவர்களில் ஒருவர் இயக்குநர் பா. ரஞ்சித். இயக்குநர் பா. ரஞ்சித் தனது சிறுவயதில் இருந்தே பகுஜன் சமாஜ் கட்சியுடன் இணைந்து பணியாற்றி வந்தார். பகுஜன் சமாஜ் கட்சியின் அரசியல் வகுப்புகளில் தொடர்ந்து பங்கேற்று வந்தார். ரஞ்சித்தின் அரசியல் ஆர்வத்தை கவனித்த ஆம்ஸ்ட்ராங் அவரது உயர்கல்வி காலத்தில் பெரும் துணையாக இருந்தார். ரஞ்சித் மேடைகளில் ஜெய் பீம் என சொல்வதை அவர் பகுஜன் சமாஜ் கட்சியில் இருந்துதான் கற்றுக்கொண்டார் என விசிகவைச் சேர்ந்த வன்னியரசு ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.
ஆம்ஸ்ட்ராங்கால் பட்டை தீட்டப்பட்டவர் ரஞ்சித்: இதுமட்டும் இல்லாமல் அம்பேத்கரின் அரசியல் தத்துவத்தை பா. ரஞ்சித்தை தனது அருகில் அமரவைத்து பாடம் நடத்தியவர் ஆம்ஸ்ட்ராங். இன்னும் சொல்லப்போனால் ஆம்ஸ்ட்ராங்கால் பட்டை தீட்டப்பட்ட அம்பேத்கரிஸ்ட்தான் பா. ரஞ்சித். தனது ஆரம்பகால சினிமாவில் பா. ரஞ்சித் மிகவும் உறுதியாகவும் தீர்க்கமாகவும் பாபாசாகேப் அம்பேத்கரின் தத்துவங்களை வசனங்களாகவும் குறியீடுகளாகவும் தைரியமாக பேச ஆம்ஸ்ட்ராங்கும் ஒரு முக்கிய காரணம் எனக் கூறலாம்.

வானம் கலைத்திருவிழா: இதுமட்டும் இல்லாமல் ரஞ்சித் கடந்த 2019ஆம் ஆண்டு நடத்திய வானம் கலைத் திருவிழாவில் ஆம்ஸ்ட்ராங்கை சிறப்பு விருந்தினராக வானம் கலைத்திருவிழாவின் இறுதிநாளில் அழைத்திருந்தார். பகுஜன் சமாஜ் கட்சியினர் ஆம்ஸ்ட்ராங்கை சமத்துவத் தலைவர் எனக் கூறுவார்கள். இதனால் வானம் கலைத்திருவிழா மேடையில் சமத்துவப் புத்தாண்டை சமத்துவத் தலைவரோடு கொண்டாடுவோம் என பா. ரஞ்சித்தே முழங்கினார்.
புரட்சி இயக்குநர்: பா. ரஞ்சித் தனது படங்கள் மூலம் தொடர்ந்து புரட்சிகரமான கருத்துக்களை பேசி வந்ததால், பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் ஆம்ஸ்ட்ராங் தலைமையில், கட்சியின் சார்பில் பா. ரஞ்சித்துக்கு புரட்சி இயக்குநர் என பட்டத்தை வழங்கியவர் ஆம்ஸ்ட்ராங். மேலும் பா. ரஞ்சித் தயாரிப்பில் முதன் முதலில் வெளியான பரியேறும் பெருமாள் படத்தினைப் பாராட்டும் விதமாகசென்னையில் உள்ள பாபசாஹேப் அம்பேத்கர் மணிமண்டபத்தில் விழா நடத்தியவரும் ஆம்ஸ்ட்ராங்தான். இப்படி பா. ரஞ்சித்தின் இளம் பருவத்தில் இருந்து தற்போது வரை தொடர்ந்து ஆதரவும் ஊக்கமும் கொடுத்து வந்தவர் ஆம்ஸ்ட்ராங்.
பா. ரஞ்சித்தின் பலம்: பா. ரஞ்சித்தின் மிகப்பெரிய பலமாக இருந்த பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அவருக்கு மிகவுமே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது மட்டும் இல்லாமல் பெரும் இழப்பையும் ஏற்படுத்தியுள்ளது. ஆம்ஸ்ட்ராங்கின் இழப்பால் பெரும் சோகத்தில் மூழ்கியுள்ள பா. ரஞ்சித்துக்கு பலரும் அறுதல் கூறி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











