பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த ஏழு பேர் அமைச்சரவையில்.. முதலமைச்சர் விஜய்க்கு பா. ரஞ்சித் பாராட்டு!
சென்னை: நடிகராக இருந்து தமிழக வெற்றிக் கழகத்தை உருவாக்கிய விஜய் தனது முதல் தேர்தலிலேயே கப்பு முக்கியம் பிகிலு என பிகில் படத்தின் ஆடியோ லாஞ்சில் பேசியது போல கப்பை வென்று முதலமைச்சராக தேர்வாகியுள்ளார். ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு எனக் கூறி விஜய் கூட்டணி கட்சிகளுக்கு அழைப்பு விடுத்த போது அவரை யாருமே நம்பி அவருடன் கூட்டணி வைக்கவில்லை.
திமுக தான் வெல்லும் என்கிற ஓவர் கான்ஃபிடன்ஸ் உடன் அந்த கட்சியுடனே பலர் கூட்டணி வைத்தனர். தவெக கட்சி 108 இடங்களில் வெற்றிப் பெற்றாலும், மேஜிக் நம்பரான 118 என்கிற எண்ணை அடைய அந்த கட்சிக்கு மற்ற கட்சியினரின் ஆதரவு தேவைப்பட்டது. விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்தியன் முஸ்லீம் லீக் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆதரவு தந்த நிலையில், விஜய் முதலமைச்சராக பதவியேற்றார்.

இந்நிலையில், தனக்கு ஆதரவு தெரிவித்து அரசு அமைக்க உதவிய கட்சியினருக்கு அமைச்சரவையில் பங்கு கொடுத்துள்ளது பெரும் வரவேற்பை ஏற்படுத்தியுள்ளது. இயக்குநர் பா. ரஞ்சித் தமிழ்நாட்டின் முதலமைச்சர் விஜய்க்கு நன்றி தெரிவித்து பதிவிட்ட எக்ஸ் தள பதிவு தற்போது வைரலாகி வருகிறது.
முதலமைச்சர் விஜய்க்கு பா. ரஞ்சித் பாராட்டு: "தமிழக வெற்றிக் கழக அரசின் இரண்டாம் கட்ட அமைச்சரவை விரிவாக்கம் இன்று நடைபெற்றுள்ளது.நான்கு பெண்கள் அமைச்சர்களாகப் பதவியேற்றிருப்பதோடு, முக்கியமான துறைகளும் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. அதேபோல், பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த ஏழு பேர் அமைச்சரவையில் இடம்பெற்றிருப்பதும் குறிப்பிடத்தக்கது. தமிழ்நாட்டு அரசியல் வரலாற்றில் இது முதல் முறை எனத் தெரிய வருகிறது. இந்திய முஸ்லிம் லீக் அமைச்சரவையில் இணைய முடிவு செய்திருக்கும் நிலையில், இஸ்லாமியர்கள் இருவருக்கும் அமைச்சரவையில் இடம் வழங்கப்பட்டுள்ளது.
பிரதிநிதித்துவ அரசியலின் அடிப்படையில் இவை முக்கியமான மாற்றங்களாகும். தமிழ்நாட்டு அரசியலுக்கும் தமிழக வெற்றிக் கழகத்திற்கும் இதுவொரு முக்கியமான தொடக்கமாக அமையும் எனவும் நம்புகிறோம். சமூகநீதி அரசியலில் பிரதிநிதித்துவம் என்பது முதல்நிலை; கிடைத்துள்ள இந்த வாய்ப்புகள் எளிய மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்கவும், சமூகத்தில் சமத்துவம் மேலும் வலுப்பெறவும் வழிவகுக்க வேண்டும்.
இத்தகைய முன்னுதாரணமான பிரதிநிதித்துவங்கள் சமூக மாற்றத்திற்கு அடித்தளமிடும்போது, அவை எதிர்காலத்தில் இன்னும் விரிவான மாற்றங்களுக்கான வாய்ப்புகளையும் உருவாக்கும். அந்த மாற்றத்தை இந்த அமைச்சரவை முன்னெடுக்கும் என்ற நம்பிக்கையுடன், புதிய அரசுக்கும்
@CMOTamilnadu தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச.ஜோசப் விஜய் @TVKVijayHQ அவர்களுக்கும் நீலம் பண்பாட்டு மையம் @Neelam_Culture தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறது. ஜெய் பீம்!"


Click it and Unblock the Notifications