நாங்கள் ரௌடிகள்தான்! ஆம்ஸ்ட்ராங் நினைவேந்தல் மேடையில் பா.ரஞ்சித் ஆவேச பேச்சு!
சென்னை: பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5ஆம் தேதி தலைநகர் சென்னையில் அவரது வீட்டுக்கு அருகில் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக இயக்குநர் பா. ரஞ்சித் தனது அதிருப்தியையும் கோபத்தையும் வெளிப்படுத்தியிருந்தார். இந்நிலையில் நேற்று அதாவது ஜூலை 20ஆம் தேதி நினைவேந்தல் பேரணி ஒன்றினை நீலம் பண்பாட்டு மையம் சார்பில் ஏற்பாடு செய்திருந்தது.
இந்த நினைவேந்தல் பேரணியில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். மேலும் இந்த நினைவேந்தல் பேரணியில் கலந்து கொள்ளக் கூடாது என மறைமுகமாக விசிக தலைவர் திருமாவளவன் தனது கட்சியினருக்கு உத்தரவு பிறப்பித்திருந்தார்.மேலும் நினைவேந்தல் தொடங்கும் அதேநேரத்தில் தனது கட்சியின் மாவட்டச் செயலாளர்களுடன் ஆலோசனைக் கூட்டத்தினை ஜூம் இணைய வழியில் நடத்தினார். திருமாவளவனின் இந்த செயல் பலருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது.

நினைவேந்தல் நிகழ்வில் பேசிய பா.ரஞ்சித் ஆளும் திமுக அரசின் மீதும் திமுகவில் இருகக்கூடிய தலித் எம்.பி, எம்.எல்.ஏக்கள், அமைச்சர்கள், மேயர்கள் மீதும் மிகவும் காட்டமாக விமர்சனங்களை முன்வைத்தார். நினைவேந்தல் நிகழ்வில் பேசுகையில், “ சென்னையில் ஒரு மேயர் இருக்கின்றார். பிரியா நீங்கள் திமுகவில் இருப்பதால் மேயர் இல்லை. ரிசர்வேஷன் தொகுதி இருந்ததால்தான் நீங்கள் இன்றைக்கு மேயர்.
ரிசர்வேஷன் தொகுதி: ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சராக இருக்ககூடிய கயல்விழி செல்வராஜ், ஆம்ஸ்ட்ராங் இறந்ததற்கு வந்து பார்க்ககூட இல்லை. சமூகநீதி குறித்து பேசும் திமுக அரசு சென்னையைக் கட்டி ஆண்ட தலைவருக்கு சென்னைக்கு வெளியே புதைக்க இடம் கொடுக்கீன்றீர்கள். இதுதான் உங்களின் சமூக நீதியா? திமுக அரசுக்கு நாங்கள் கோரிக்கை வைக்கின்றோம் சென்னையில் ஆம்ஸ்ட்ராங் அண்ணனுக்கு மணிமண்டபம் கட்டவேண்டும்.
நாங்கள் ரௌடிகள்தான்: ஆம்ஸ்ட்ராங் அண்ணன் கொல்லப்பட்ட பின்னர், முதலில் பாஜகவினர் இணையத்தில் ஆம்ஸ்டாங் அண்ணனை ரௌடி என எழுகின்றார்கள். அதன் பின்னர் ஒட்டுமொத்த திமுகவின் ஐ.டி. விங்கும் இணையத்தில் ஆம்ஸ்ட்ராங் அண்ணனை ரௌடி என எழுதுகின்றார்கள். அதிகாரத்திற்கு எதிராக குரல் எழுப்பினால் அவர்களை ரௌடிகள் என்பீர்கள் என்றால் நாங்கள் அனைவரும் ரௌடிகள்தான். ஆம்ஸ்ட்ராங் அண்ணன் சென்னையைக் கட்டி ஆண்டவர். அவரை மீறி சென்னையில் எதுவுமே நடக்காது.
வன்முறை: நான் கோபத்தில் பலமுறை அவரைச் சந்தித்தபோது கூட, அவர் என்னை ஒருநாளும் வன்முறையை நோக்கி வழிநடத்தியதில்லை. நான் கோபமாக அவரிடம் பேசப் போகும்போது,’சார்.. உங்க வேலை என்ன? போய் படம் பண்ணுங்க போஙக’ என அனுப்பி விடுவார். அவர் ஒருநாளும் வன்முறையை நோக்கி எங்களை நகர்த்தியதே கிடையாது. இந்த நினைவேந்தல் கூட்டத்தில் கூட வன்முறை நிகழ அதிக வாய்ப்புள்ளது என எழுதுகின்றார்கள். இவ்வாறு எழுதுவதன் மூலம் நினைவேந்தல் நிகழ்ச்சியில் கலந்து கொள்பவர்களின் மனதில் பயத்தை உருவாக்க நினைக்கின்றார்கள். ஆனால் ஒரு வன்முறைச் சம்பவம் கூட நிகழவில்லை. நாங்கள் அம்பேத்கரின் மாணவர்கள்” என பேசியுள்ளார்.


Click it and Unblock the Notifications











