தவெக தாரக மந்திரத்தை குறிப்பிட்டு பேசிய பா.ரஞ்சித்! 2026இல் விஜய்க்கு ஆதரவா? கிளம்பும் விவாதங்கள்!
சென்னை: தமிழ் சினிமாவில் இருக்ககூடிய இயக்குநர்களில் சமூக அக்கறை கொண்ட இயக்குநர்களில் ஒருவராக இருப்பவர் இயக்குநர் பா. ரஞ்சித். இவரது, படங்களிலும் பல்வேறு சமூக கருத்துகளை முன்வைத்து காட்சிகளையும் வசனங்களையும் அமைத்து வருகின்றார். படங்கள் இயக்குவது மட்டும் இல்லாமல், நீலம் பண்பாட்டு மையம் என்ற அமைப்பினை உருவாக்கி, அதன் மூலம் பல்வேறு நிகழ்ச்சிகளை பண்பாட்டுத் தளத்தில் செய்து வருகின்றார்.
இந்நிலையில், கடந்த 5ஆம் தேதி பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டார். ஆம்ஸ்ட்ராங் படுகொலை தொடர்பான விசாரணை சரியான முறையில் நடக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து நினைவேந்தல் பேரணியை இயக்குநர் பா. ரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம் ஒருங்கிணைத்தது. இதில் பல்வேறு இயக்கங்களைச் சார்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.

விசிக: ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்குப் பின்னர், அவரது உடல் இறுதி ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு, நல்லடக்கம் செய்யும் வரை உடன் இருந்த விசிக தலைவர் திருமாவளவன், நீலம் பண்பாட்டு மையம் ஒருங்கிணைக்கும் நினைவேந்தல் நிகழ்ச்சியில் விசிகவினர் கலந்து கொள்ளக்கூடாது என வீடியோ வெளியிட்டு பா. ரஞ்சித் பெயரை குறிப்பிடாமல் பேசியிருந்தார்.
பா.ரஞ்சித் பேச்சு: இதற்கு நினைவேந்தல் நிகழ்ச்சியில் பா. ரஞ்சித் பேசுகையில் பதிலும் அளித்திருந்தார். இது தொடர்பான வீடியோக்களும் இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது. நினைவேந்தல் மேடையில் பா. ரஞ்சித் பேசுகையில், பல்வேறு தலைவர்களை மேற்கோள் காட்டி பேசினார். குறிப்பாக அயோத்திதாச பண்டிதர், அம்பேத்கர், இரட்டை மலை சீனிவாசன், எம்.சி. ராஜா, மீனம்மாள் உள்ளிட்ட தலைவர்கள் பெயரைக் குறிப்பிட்டு பேசினார்.
தவெக: மேலும் திருவள்ளுவரின் குறளான பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் எனும் குறளை மேற்கோள் காட்டி பேசினார். பா. ரஞ்சித் இந்தக் குறளைக் குறிப்பிடும்போது மிகவும் உணர்ச்சிவசப்பட்டு பேசியிருந்தார். ஆனால் தற்போது பா. ரஞ்சித் பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் எனும் குறளை மேற்கோள் காட்டி பேசியதால், நடிகர் விஜய் தொடங்கியுள்ள அரசியல் கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தின் தாரக முழக்கமாக இருப்பதும் இதே குறள்தான்.
விஜய்க்கு ஆதரவா? இதனால், ஏற்கனவே திமுகவுக்கு 2021ஆம் ஆண்டு தேர்தலில் வாக்கு செலுத்தியிருந்தேன். ஆனால், திமுகவின் நடவடிக்கைகள் திருப்தி அளிப்பதாக இல்லை. இதேநிலை தொடரும் என்றால் எனது நிலைப்பாட்டினை மாற்றிக் கொள்ள நேரிடும் என செய்தியாளர் சந்திப்பில் ஏற்கனவே தெரிவித்திருந்தார். இந்நிலையில் மேடைப்பேச்சில், பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என குறிப்பிட்டிருப்பதால், வரும் 2026 தேர்தலில் பா. ரஞ்சித் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துக்கு ஆதரவு தெரிவிக்க வாய்ப்புள்ளது என பலரும் பேசி வருகின்றனர்.
மேலும் நேற்று பா. ரஞ்சித் திமுக அரசை மிகவும் காட்டமாக விமர்சித்ததினால் தங்கலான் படத்தின் ரிலீஸில் சிக்கல்கள் எழ வாய்ப்புள்ளதாகவும் பேச்சுகள் கிளம்பியுள்ளது.


Click it and Unblock the Notifications











