அம்பேத்கரின் குரலாக என்றைக்கும் இருப்பேன் - தங்கலான் இசை வெளியீட்டு விழாவில் பா. ரஞ்சித்
சென்னை: சியான் விக்ரம் நடிப்பில் இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் தங்கலான். இந்த படத்தினை ஸ்டூடியோ க்ரீன் தயாரித்துள்ளது. இந்த படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசை அமைத்துள்ளார். வரும் 15ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ள இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று அதாவது ஆகஸ்ட் 5ஆம் தேதி சென்னையில் மிகவும் பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் படக்குழுவினர் பல்வேறு சுவாரஸ்யமான தகவல்களைப் பகிர்ந்து கொண்டனர்.
படத்தின் இயக்குநர் பா. ரஞ்சித் பேசுகையில், " சினிமா நமது வாழ்க்கையில் பல தாக்கங்களை ஏற்படுத்துகின்றது. நான் கவின் கலைக் கல்லூரியில் சேர்ந்த பின்னர் நான் பார்த்த உலக சினிமாக்கள்தான் என்னை சினிமாவை நோக்கி உந்தியது. சினிமாவில் சொல்லப்படதா விஷயங்களை சொல்ல சினிமாவை நான் தேர்ந்தெடுத்தேன். எழுத்து வடிவில் எழுதாத எழுத்துகள் உள்ளது. இங்கு சொல்லப்படாத கதைகள் அதிகம் இருந்தது. வரலாற்றில் குறிக்கப்படாத பகுதிகள் இருந்தது.

இந்த வரலாற்றில் நான் ஏன் இப்படி இருக்கின்றேன். என்னுடன் சேர்ந்த மக்களுக்கு ஏன் இவ்வாறு நடக்கின்றது. ஒரு பெரும்பகுதி மக்களுக்கு ஏன் இவ்வாறு நடக்கின்றது. ஏன் இங்கு ஒரு ஒடுக்குமுறை, பாகுபாடு, பிரிவினை இருக்கின்றது என்ற கேள்வி எழுகின்றது. இதற்கான பதிலை வரலாற்றில் தேடினால், வரலாறு பாதிக்கப்பட்ட மக்கள் பக்கம் நின்று பேசவேயில்லை. அது ஒருதலைப்பட்சமாக உள்ளது. ஒடுக்கப்பட்ட மக்களின் குரல் இல்லைவே இல்லை, அவர்கள் குறித்த குறிப்புகள் இல்லை. வரலாற்றில் தொடர்ந்து தேடினால் ஏமாற்றம் தான் மிஞ்சுகின்றது. அதுபோலத்தான் சினிமாக்களும் இருக்கின்றன.

பாபாசாகேப் அம்பேத்கர் தீண்டப்படாதவர்கள் யார் என்ற புத்தகத்தில், ஒரு வரலாற்று ஆய்வாளன், மறைக்கப்பட்ட வரலாற்றை உருவாக்க வேண்டியுள்ளது எனக் கூறீயுள்ளார். சொல்லாத மறைக்கப்பட்ட வரலாறை தேடிச் சொல்ல வேண்டும். அப்படி ஒரு வரலாற்று ஆய்வாளனுக்கு உணர்வும் கற்பனையும் மிகவும் அவசியம். மறைக்கப்பட்ட வரலாற்றை மீள் உருவாக்கம் செய்யவேண்டும் எனக் கூறியுள்ளார். அப்படியான வரலாற்று தேவையை தேடுகின்ற மாணவனாக, வரலாற்று ஆய்வாளனாக நான் என்றைக்கும் இருப்பேன்.

பாபாசாகேப் அம்பேத்கருக்கு நான் மிகப்பெரிய நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன். அவர் இல்லை என்றால் நான் கிடையவே கிடையாது. உன்னுடைய சமூகத்திற்கும் உன்னுடைய மக்களுக்கும் நீ பேசியே ஆகவேண்டும் என அவர்தான் என்னை உந்தித்தள்ளினார். அம்பேத்கரின் குரலாக, அம்பேத்கரின் மாணவனாக, அம்பேத்கரின் சீடனாக நான் என்றைக்கும் இயங்குவேன்" என பேசியுள்ளார்.


Click it and Unblock the Notifications











