பா.ரஞ்சித் மீது எவ்வளவு வன்மம்.. இதான் சந்தர்ப்பம்னு துயரத்திலும் குளிர் காய்பவர்கள் யார் தெரியுமா?
சென்னை: ஒட்டுமொத்த திரைத்துறையிலும் பரபரப்பாக பேசப்படும் விஷயம் வேட்டுவம் படத்தின் படப்பிடிப்பின்போது, ஏற்பட்ட விபத்தில் ஸ்டண்ட் மாஸ்டர் மோகன்ராஜ் மரணம் தான். அவரது மரணம் எந்த இடத்திலும் நியாயப்படுத்த முடியாதுதான். அதேநேரத்தில் அவரது மரணத்தை காரணமாக வைத்து இயக்குநர் பா. ரஞ்சித் மீது கொட்டப்படும் வன்மத்தையும் பார்க்க முடிகிறது.
கடந்த 13ஆம் தேதி ஸ்டண்ட் மாஸ்டர் மோகன்ராஜ் நாகப்பட்டினத்தில் நடைபெற்ற படப்பிடிப்பில் ஒரு விபத்துக் காட்சியை படமாக்கும்போது எதிர்பாராத விதமாக மரணித்தார். ஸ்டண்ட் மாஸ்டர் மோகன்ராஜ் மரணமடைந்த செய்திகள் வெளியான பின்னர், அவரது கடைசி நிமிடங்கள், அதாவது காரை வேகமாக அவர் ஓட்டி வந்து விபத்துக்குள்ளாக்கும் காட்சி படமாக்கப்பட்டதும், அதன் பின்னர் அனைவரும் காரை நோக்கி ஓடுவதும், உடனே அவரை ஆம்புலன்ஸில் ஏற்றி கொண்டு மருத்துவமனைக்கு விரையும் காட்சிகள் அடங்கிய வீடியோவும் வெளியானது.

ஸ்டண்ட் மாஸ்டர் திலீப் சுப்பராயன், படத்தின் இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் பா. ரஞ்சித் ஆகியோரும் இது தொடர்பாக கூறும்போது கூட, அனைத்துவிதமான பாதுகாப்பு மற்றும் முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு தான் அந்த காட்சி படமாக்கப்பட்டது. ஆனால் எதிர்பாராத விதமாக ஸ்டண்ட் மாஸ்டர் மோகன்ராஜ் இறந்துவிட்டார். அவர் இறந்து எங்களுக்கு சொல்லண்ணாத் துயரம் எனவும் கூறிவிட்டார்கள். ரூபாய் 130 முதல் ரூபாய் 190 வரை செலவிட்டுப் பார்க்கும் ஒரு படத்திற்காக ஒருவர் உயிரிழந்து விட்டார் என்பது ஏற்றுக் கொள்ளவே முடியாதது.
பா. ரஞ்சித் மீது வனமம்: ஆனால் இந்த துக்க நேரத்திலும் கூட இணையதளத்தில் இயக்குநர் பா. ரஞ்சித் மீது வன்மத்தை கொட்டி வருவது என்பதை பார்க்க முடிகிறது. பல இணையவாசிகள், ரஞ்சித் தயாரிக்கிற, இயக்குகிற படங்களை பார்க்க கூடாது என்றெல்லாம் கருத்து தெரிவித்து வருகிறார்கள். இன்னும் சிலரோ ரஞ்சித்தை மோசமாக விமர்சித்து வருகிறார்கள். ரஞ்சித் மீது இவ்வளவு வன்மம் கொட்ட படுவதற்கு காரணம், அவர் எப்போது சரிவார், எப்போது அவர் மீது வன்மத்தை கொட்டலாம் என நீண்ட நாள் காத்திருப்பின் வெளிப்பாடு எனவும் எதிர்வினையாற்றும் இணையவாசிகளும் உள்ளார்கள்.

அரசுக்கு கோரிக்கை: ஆனால் இந்த நேரத்தில் திரைத்துறை மீது அக்கறை கொண்டவர்களாக தங்களைக் காட்டிக் கொள்ள நினைக்கும் இணையவாசிகளின் கோரிக்கை என்னவாக எல்லாம் இருக்கலாம் என்றால், தனது உயிரையும் பணயவைத்து நடிக்கும் ஸ்டண்ட் கலைஞர்களுக்கு நல்ல சம்பளம் கொடுக்கப்படவேண்டும், ஏற்கனவே வழங்கப்பட்டு வரும் காப்பீட்டுத் தொகை, இழப்பீட்டுத் தொகையை மேலும் அதிகரிக்க வேண்டும், அரசுக்கு அதிக வரி செலுத்தும் திரைத்துறைக்கு மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்திட வேண்டும்.
மிகுந்த வருத்தம்: குறிப்பாக படப்பிடிப்புத் தளத்தில் உயிரிழக்கும் கலைஞர்களுக்கு அரசுகளே நேரடியாக இழப்பீடுகளை கொடுக்க வேண்டும்" என்று கோரிக்கைகள் வைக்கலாம். இவ்வாறு கோரிக்கை வைப்பவர்களும் மிகச் சொற்ப அளவிலேயே உள்ளார்கள். ஆனால் இந்த விவகாரம் தொடர்பாக கருத்து தெரிவிக்கும் பத்தில் 5 இணையவாசிகள் ரஞ்சித் மீதுதான் வன்மத்தை கொட்டி வருகிறார்கள். இது தொடர்பாக பா. ரஞ்சித்தின் நெருக்கமானவர்களை தொடர்புகொண்டு கேட்டபோது, ரஞ்சித் அந்த விபத்துக்குப் பின்னர் மிகவும் மன வருத்தத்துடன் இருப்பதாகவும், வழக்கமாக எல்லோரிடத்திலும் இருப்பதைப் போல இயல்பாக அவர் இல்லை என்றும் கூறினார்கள். வரும் காலங்களில் பா. ரஞ்சித் மட்டும் இல்லாமல், ஒட்டுமொத்த திரை உலகமுமே ஸ்டண்ட் காட்சிகளை படமாக்கும் போது கூடுதல் கவனமாக இருக்க வேண்டும் என்பதை பிலிமி பீட் அழுத்தம் திருத்தமாக கூறுகிறது.


Click it and Unblock the Notifications











