சிம்புவால் பிரச்னை இல்லை.. அவங்க அப்பா, அம்மாவால் தான்.. ஓபனாக பேசிய இயக்குநர் பாண்டிராஜ்
சென்னை: சிம்பு இப்போது தனது இரண்டாவது இன்னிங்ஸில் இருக்கிறார். இந்த முறை எண்ணங்களை ஒருமுகப்படுத்தி சிறப்பாக நடித்துவருகிறார். முக்கியமாக சிம்பு ஷூட்டிங்கிற்கு லேட்டாகத்தான் வருவார் என்று அவர் மீது பல வருடங்களாக வைக்கப்பட்டு வந்த குற்றச்சாட்டு இந்த இன்னிங்ஸில் உடைபட்டிருக்கிறது. இப்போது அவர் தனது 48ஆவது படம், தக் லைஃப் ஆகிய படங்களில் நடித்துவருகிறார். இந்தச் சூழலில் அவர் குறித்து பாண்டிராஜ் பேசியிருக்கும் விஷயம் ட்ரெண்டாகியுள்ளது.
கோலிவுட்டின் திறமை வாய்ந்த நடிகர்களில் ஒருவர் சிம்பு. சிறு வயதிலிருந்தே நடித்துவரும் அவர் நடிப்பு, இயக்கம், பாடல்கள் எழுதுவது, பாடுவது, இசையமைப்பது என பல ஜானர்களில் தன்னை நிரூபித்திருக்கிறார். அதேசமயம் சிம்பு ஷூட்டிங்கிற்கு ஒழுங்காக வரமாட்டார் என்ற குற்றச்சாட்டு மட்டும் அவர் மீது தொடர்ந்து வைக்கப்பட்டுக்கொண்டே வந்தது. அதன் காரணமாக சில பிரச்னைகளையும் அவர் சந்தித்திருக்கிறார் என்பது நினைவுகூரத்தக்கது. ஒருகட்டத்தில் சினிமாவிலிருந்து ஒதுங்கவும் செய்தார்.

இரண்டாவது இன்னிங்ஸ்: நிலைமை இப்படி இருக்க அவருக்கு உடல் எடை கூடியது; அவரது எண்ணமும் ஆன்மீகம் பக்கம் ஒதுங்கியது. முக்கியமாக இரண்டு காதல் தோல்விகளையும் சந்தித்தார். அதனால்தான் அவர் சினிமாவிலிருந்து ஒதுங்கினார் என்றும் கூறப்பட்டது. இதனையடுத்து உடல் எடையை குறைத்து, எண்ணங்களை ஒருமுகப்படுத்தி தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்தார். அதன்படி சுசீந்திரன் இயக்கத்தில் ஈஸ்வரன் படத்தில் நடித்தார். ஆனால் படம் சரியாக போகவில்லை.
தொடர்ச்சியான ஹிட்: ஈஸ்வரன் கவிழ்த்தாலும் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்த மாநாடு படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. அந்தப் படத்தில் சிம்புவை பார்த்த ரசிகர்கள் அட நம்ம விண்டேஜ் சிம்பு கிடைத்துவிட்டார் ப்பா என்று மகிழ்ச்சியில் திளைத்தனர். அந்தப் படத்துக்கு பிறகு கௌதம் மேனன் இயக்கத்தில் நடித்த வெந்து தணிந்தது காடு படமும் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. தொடர்ந்து நடித்த பத்து தல படம் தோல்வியை சந்தித்தாலும் சிம்புவின் நடிப்பு பெரிதாக பேசப்பட்டது.
தக் லைஃப்: பத்து தல படத்துக்கு பிறகு அவர் இப்போது தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் எஸ்டிஆர் 48 படத்திலும், மணிரத்னம் இயக்கத்தில் தக் லைஃப் படத்திலும் கமிட்டாகியிருக்கிறார். இவற்றில் தக் லைஃப் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. எஸ்டிஆர் 48 ஷூட்டிங் விரைவில் தொடங்கவிருக்கிறது. இந்த இரண்டு படங்களுமே அவருக்கு மிகப்பெரிய வெற்றியை பெற்றுத்தரும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார்கள் எஸ்டிஆர் ரசிகர்கள். இதற்கிடையே சிம்பு ஷூட்டிங்கிற்கு லேட்டாக வருகிறார் என்ற குற்றச்சாட்டு அவரது இரண்டாவது இன்னிங்ஸில் உடைபட்டிருக்கிறது.
பாண்டிராஜ் பேட்டி: இந்நிலையில் சிம்புவை வைத்து இது நம்ம ஆளு படத்தை இயக்கிய பாண்டிராஜ் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், “நான் சோம்பேறிகளுடன் சேர மாட்டேன். எனக்கும் நான் இயக்கிய ஹீரோக்களுக்கும் இடையே நல்ல நட்பு இன்றுவரை ஓடிக்கொண்டிருக்கிறது. எனக்கும் சிம்புவுக்கும் பிரச்னை என்று பலர் வெளியிலிருந்து சொல்வார்கள். ஆனால் எனக்கு அவரால் பிரச்னை இல்லை. அவரது அப்பா, அம்மாவால்தான் பிரச்னை வந்தது.
லேட்டாகத்தான் வருவார்: இது நம்ம ஆளு படத்த்ன்போது சிம்பு லேட்டாகத்தான் வந்தார். ஆனால் 8 மணி நேர வேலையை ஐந்து மணி நேரத்தில் அவரை வைத்து முடித்துவிடலாம். அவ்வளவு திறமையான நபர். சிம்பு திறமையான ஆள் இப்படி இருக்கிறாரே என்று நான் வருத்தம்தான் பட்டிருக்கிறேன். கோபப்பட்டதில்லை. அவரும் என்னை பற்றி விடிவி கணேஷிடம் பெருமையாகத்தான் பேசியிருக்கிறார். இப்போதும் நாங்கள் நல்ல நட்புடனேயே இருக்கிறோம்” என்றார்.


Click it and Unblock the Notifications











