Parthiban: பார்த்திபனா இப்படி சொன்னது.. தயாரிப்பாளர் சங்கம் எடுத்த முடிவுக்கு சப்போர்ட் செய்றாராம்!
சென்னை: கங்குவா படத்தின் ரிலீஸ்க்குப் பின்னர் தமிழ் சினிமா உலகமே கொஞ்சம் ஆட்டம் கண்டுவிட்டது என்றுதான் கூறவேண்டும். ஒரு காலத்தில் தயாரிப்பாளர்களே ஊக்குவித்த பப்ளிக் ரிவ்யூ முறையை இப்போது அவர்களே எதிர்த்து களமாடி வருகின்றனர். கங்குவா படத்தின் தோல்விக்கு முதல் நாள் முதல் காட்சிக்குப் பின்னர் ரசிகர்கள் கொடுத்த விமர்சனம் தான் எனக் கூறப்பட்டது. ஆனால் படம் பார்த்த சூர்யாவின் மனைவி தொடங்கி இசைத்துறையில் ஆஸ்கார் வாங்கிய, ரசூல் பூக்குட்டி வரை பலரும் படத்தின் இசை குறித்து விமர்சித்தனர். தமிழ் சினிமா உலகினைச் சார்ந்து இருக்ககூடிய பெரும்பாலான விமர்சகர்கள் தொடங்கி பலரும் படத்தின் திரைக்கதை குறித்து பல்வேறு குற்றச் சாட்டுக்களை முன் வைத்தனர். இப்படியான நிலையில் படத்தின் விமர்சனங்களை யூடியூபர்கள் வெளியிட தடை எனக் கூறி அறிக்கை வெளியிட்டனர். இது தொடர்பாக கேட்டபோது நடிகரும், இயக்குநரும் தயாரிப்பாளருமான பார்த்திபன் தனது கருத்தினைத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசும்போது, தயாரிப்பாளர் சங்கத்தில் நானும் ஒரு உறுப்பினர் என்பதால் தயாரிப்பாளர் சங்கம் எடுத்துள்ள முடிவுக்கு நான் உடன் படுகின்றேன். நாம் ஒரு பொருளைத் தயாரித்த பின்னர், அதனை மக்களிடம் கொண்டுபோய் வைக்கின்றோம். அதனைப் பயன்படுத்தி பார்த்துவிட்டு மக்கள்தான் எப்படி இருக்கு எனக் கூறவேண்டும். அது சோப்பாக இருந்தாலும் சரி, ஷாம்புவாக இருந்தாலும் சரி, சினிமாவாக இருந்தாலும் சரி.

சினிமாவில் அப்படியான வாய்ப்பே கிடைப்பதில்லை. மக்கள் வந்து படத்தினைப் பார்த்த பின்னர் படம் நல்லா இல்லை எனக் கூறினால் நாம் எதுவும் செய்ய முடியாது. படத்திற்கு விமர்சனங்கள் இருக்கவேண்டும் என்பது இயக்குநர் சீனு ராமசாமியின் விமர்சனம். என்னைப் பொறுத்தவரையில் ஒரு படத்தின் விமர்சனம் என்பது ஆரோக்கியமாக இருப்பது நல்லது. ஆனால் எத்தனை சின்னப் படங்கள் விமர்சனங்களால் ஓடியுள்ளது? பல சின்னப் படங்கள் விமர்சனமே இல்லாமல் ஓடியுள்ளது. ஒரு படத்தின் இயக்குநர் நமது படத்திற்கு இன்னும் கொஞ்சம் நல்ல விமர்சனங்கள் வந்திருந்தால் இன்னும் நன்றாக ஓடி இருக்குமோ என யோசிப்பது சரியானதுதான்.
விமர்சனம்: மோசமான விமர்சனங்கால் தயாரிப்பாளர்கள் ரொம்பவும் பாதிக்கப்பட்டுள்ளார்கள். அண்மையில் திரைப்பட உரிமையாளர்கள் சங்கத்தினைச் சேர்ந்த திருப்பூர் சுப்பிரமணியன் தொடங்கி, தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் ஒரு ட்வீட் போட்டிருந்தார். அனைவரும் கூறுவது, பல கோடிகள் ரூபாய் செலவு செய்து எடுக்கப்பட்டுள்ள படத்தினை ஒரு நிமிடத்தில் தூக்கி எறிவது என்பது வருத்தம் அளிக்கின்றது. மற்ற பொருட்களை மக்கள் இப்படி விமர்சிக்க முடியாது. விமர்சனத்தினால்தான் ஒரு படம் ஓடுகின்றது என்றால் அந்தப் படம் ஒடவேண்டியது இல்லை” எனக் கூறினார். இது பலரது கவனத்தினை ஈர்த்துள்ளது மட்டும் இல்லாமல், பார்த்திபன் போன்ற திரைக்கலைஞர் படத்தின் விமர்சனங்கள் குறித்து இப்படியான கருத்தினைத் தெரிவித்துள்ளது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விஜய்: அதேபோல் நடிகர் விஜய்யின் அரசியல் வருகை குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டதற்கு, ”விஜய் அரசியலில் தவழும் குழந்தை. அவர் முதலில் எல்லாம் பேசவே பயப்படுவார். ஆனால் இப்போது தைரியமாக பேசுகின்றார். பார்ப்பதற்கு நன்றாக உள்ளது. அவர் இன்னும் நிறைய பேசுவார் என எதிர்ப்பார்க்கின்றேன், என்றார். அதேபோல், சீமான் ஆரம்பத்தில் இருந்தே மிகவும் உரக்கப்பேசுவதே செயலாகக் கொண்டுள்ளார். அவரவர் பார்வைக்கு எது சரியோ அதுதான் சரி. நம்ம ஊரில்தான் பேச்சு எல்லாம். வெளிநாடுகளில் அரசியல் தளத்தில் இதுபோன்ற பேச்சுகள் இல்லை” என்றார்.
ஹேமா கமிட்டி: ஹேமா கமிட்டி குறித்த கேள்விக்கு, "மலையாள சினிமாவுக்கு என தனி ஸ்டார்கள் இல்லை. தமிழ் படத்தில் நடிப்பவர்கள் மலையாளப்படத்தில் நடிக்கின்றார்கள். மலையாளத்தில் நடிப்பவர்கள் தமிழிலும் நடிக்கின்றார்கள். பெண்களுக்கான பாதுகாப்பு என்பது தமிழ் திரையுலகிலும் மலையாள திரையுலகிலும் ஒரேமாதிரிதான் உள்ளது என நினைக்கின்றேன்" எனத் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











