அஜித் அமைதியா இருக்கறதாலதான் விஜய் ரசிகர்கள் துள்ளுறாங்க - இயக்குநர் பேரரசு பளிச்
சென்னை: தமிழ் சினிமாவில், ஒரு நடிகரை மற்றொரு நடிகருக்கு எதிராக நிறுத்துவது என்பது காலம் காலமாக நடைபெற்று வருகின்றது. இது ஒரு வழக்கமாகவே மாறிவிட்டதால் இன்றைக்கு தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைக்கும் புதிய நடிகர் கூட, தனக்கு எதிரான நடிகர் இவர்தான் என நினைத்துக் கொள்ளும் சூழல் உள்ளது. உதாரணமாக எம்.ஜி.ஆர் - சிவாஜி, ரஜினிகாந்த் - கமல், அஜித் - விஜய், சூர்யா - விக்ரம் என இந்த வரிசை இன்னும் நீண்டு கொண்டே உள்ளது. ஆனால் ஒருகட்டம் வரை எந்த நடிகரும் தன்னை விட உயர்ந்த இடத்தில் உள்ள நடிகரின் இடத்தினை தான் எடுத்துக்கொள்ள வேண்டும் என நினைத்ததில்லை. ஆனால் சமீப காலமாக நடிகர் விஜய்யின் ரசிகர்கள் விஜய்தான் தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் என இணையத்தில் ரஜினிகாந்த் ரசிகர்களுடன் சண்டையிட்டு வருகின்றனர். இது தொடர்பாக இயக்குநர் பேரரசு கருத்து தெரிவித்துள்ளார்.
தளபதி விஜய் ரசிகர்கள் இணையத்தில் நடிகர் விஜய்தான் சூப்பர் ஸ்டார் என தம்பட்டம் அடித்துக் கொண்டு இருந்தனர். இதற்கு ரஜினிகாந்த் ரசிகர்கள் பதிலடி கொடுத்து வந்தனர். தமிழ் சினிமாவில் ரஜினி அறிமுகமாகி அடுத்த ஆண்டுடன் 50 ஆண்டுகள் ஆகின்றது. விஜய்க்கு வயதே 50தான் ஆகின்றது. இப்படியான நிலையில், தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் என்ற நிலையில் இருப்பவருடன் விஜய்யை ஒப்பிடுவதை ரஜினிகாந்த் ரசிகர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

ரசிகர்களைக் கடந்து இந்த பிரச்னை ரஜினிகாந்த் மற்றும் விஜய்க்கு இடையில் பனிப்போராக மாறியது. குறிப்பாக ஜெய்லர் படத்தில் இடம்பெற்ற ஹுக்கும் பாடல், ஜெய்லர் இசை வெளியீட்டு விழாவில் ரஜினிகாந்த் சொன்ன காக்கா கழுகு கதை எல்லாம் விஜய்யை டார்கெட் செய்ததாக பேச்சுகள் கிளம்பியது. இதனை உறுதி செய்யும் விதமாக, லியோ இசை வெளியீட்டு விழாவில் விஜய் பேசும்போது, காக்கா, கழுகு என்ற வார்த்தைகளைப் பயன்படுத்தினார். இதுமட்டும் இல்லாமல், லியோ படத்தில் ஒரு கழுகைப் பார்த்து, என்னடா எப்படி இருக்க? என விஜய் பேசுவார். விஜய்யின் இந்த நடவடிக்கை ரஜினிகாந்த்தை டார்கெட் செய்யும் விதமாக இருப்பதாகவும் பேச்சுகள் எழுந்தது.
பெரிய மனுசன்: இசை வெளியீட்டு விழா மேடைகளில் இவர்கள் இப்படி நடந்துகொள்ள, ரசிகர்கள் இணையத்தில் மிகவும் மோசமாக நடந்து கொண்டனர். இந்த பிரச்னையை முடிவுக்கு கொண்டுவரும் பொருட்டு, லால் சலாம் படத்தின் இசை வெளியீட்டு விழாவில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பேசினார். இவரது பேச்சைப் பார்த்த பலர், ரஜினிகாந்த் தன்னை பெரிய மனுசன் என நிரூபித்துவிட்டார் எனக் கூறினர்.
பேரரசு: இப்படியான நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இடத்திற்கு விஜய் போட்டியிட, காரணம் இதுதான் என இயக்குநர் பேரரசு சில விசயங்களைக் குறிபிட்டுள்ளார். குறிப்பாக இது தொடர்பாக அவர் பேசுகையில், " நடிகர் அஜித் பலபேரிடம் தனக்கு நடிப்புதான் லட்சியம் எனக் கூறியுள்ளார். நடிப்பில் நாம் நிலையாக இருக்க வேண்டும் என்பதை உணர்ந்த அஜித், அதன் பின்னர், கவனமாகவே நடந்துகொண்டார்.

அஜித் காரணம்: ஆனால் அஜித் தற்போது தன்னுடைய ஒவ்வொரு படத்திற்கும் இடையில் கொடுக்கும் இடைவெளி, ரஜினி சாரா விஜய் சாரா என்ற சூழலை உருவாக்கிவிட்டது. இந்த நிலை உருவாக காரணமே, அஜித் மட்டும் தொடர்ந்து படங்களில் நடித்து அடிக்கடி ரிலீஸ் செய்தால் ரஜினிகாந்தா விஜய்யா என்ற சூழல் ஏற்பட்டிருக்கவே ஏற்பட்டிருக்காது.
தேவையற்ற செயல்: ஒரு சூப்பர் ஸ்டார் இருக்கும்போது அடுத்த சூப்பர் ஸ்டார் எனக் கூறுவதே தவறு. ஒரு மனிதனை 45 ஆண்டுகளாக சூப்பர் ஸ்டார் என மக்களால் கொண்டாடப்பட்ட நபர், இன்றைக்கும் மார்க்கெட்டில் டாப்பில் இருக்கக் கூடிய நபர், அவருக்கு இன்றைக்கும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். அவராகவே தன்னுடைய இடத்திற்கு இன்னொருவர் வரவேண்டும் எனக் கூறுவது வேறு, அது அவருடைய பெருந்தன்மை. நீங்களாகவே, அப்படி கூறிக்கொள்ளக் கூடாது. அதனால் தேவையற்ற விவாதம் ஏற்பட்டுள்ளது. ஒரு சூப்பர் ஸ்டார் இருக்கும்போது இன்னொரு சூப்பர் ஸ்டார் என மற்றொருவரைக் கூறுவதில் எனக்கு உடன்பாடு இல்லை" எனக் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











