Vijay: விஜய் அப்படி செய்திருக்க கூடாது.. அவரே கூலிக்கு மாரடிக்கிற ஆளு.. அவரைப்போயி.. பேரரசு சுளீர்!
சென்னை: நடிகர் விஜய் அரசியலுக்கு வந்த பின்னர், தொடர்ந்து பல்வேறு விமர்சனங்களை சந்தித்து வருகிறார். அவரது கட்சிப் பெயரில் இருந்த எழுத்துப் பிழை தொடங்கி, அவரது பேச்சு, அரசியல் நகர்வு என பலவற்றிற்கும் அவர் விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறார். இதில் சினிமா துறையைச் சார்ந்தவர்கள் தொடங்கி, அரசியல் தலைவர்கள் என பலரது விமர்சனத்திற்கும் விஜய் ஆளாகிறார். இப்படி இருக்கும்போது இயக்குநர் பேரரசு விஜய் குறித்து காட்டமான விமர்சனத்தை முன் வைத்துள்ளார்.
விஜய் தனது அரசியல் கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கி, கடந்த மாதம் முதலாம் ஆண்டு நிறைவு விழாவை தனது கட்சி நிர்வாகிகள் மற்றும் பிரசாந்த் கிஷோர் உள்ளிட்டோருடன் கொண்டாடினார். இந்த நிகழ்ச்சி மேடையில் பேசும்போது கூட திமுக மற்றும் பாஜகவை பாயாசம் மற்றும் பாசிசம் என மறைமுகமாக சாடினார். இது இணையத்தில் வேகமாக பரவியது. மேலும் மும்மொழி கொள்கைக்கு எதிராகவும் தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தினார்.

விஜய் - விஷால்: தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகராக உள்ள விஜய் அரசியல் கட்சி தொடங்கியதில் இருந்தே அவரது அரசியல் நகர்வுகள் மற்றும் செயல்பாடுகள் கவனம் பெற்று வருகிறது. இதனால் அவர் பல விமர்சனங்களுக்கு ஆளாகி வருகிறார். கட்சி தொடங்கி ஒரு ஆண்டு ஆகிவிட்டது. ஆனாலும் இன்னும் செய்தியாளர்களைச் சந்திக்காமல் உள்ளார். இது தொடர்பாக நடிகர் சங்க செயலாளர் விஷால், நேற்று செய்தியாளர்களை சந்திக்கும்போது கூட, விஜய் முதலில் செய்தியாளர்களைச் சந்திக்கட்டும். என்னிடம் கேட்பதை விடவும் அவரிடமே கேட்பது சிறந்தது. விஜய் முதலில் செய்தியாளர்களைச் சந்திக்கட்டும் எனக் கூறியிருந்தார்.
விமர்சனம்: விஷால் இவ்வாறு கூறியது பலரது கவனத்தை ஈர்த்தது என்றாலும், விஜய் இதுவரை செய்தியாளர்களைச் சந்திக்காமல் இருக்கிறார் என்பது உண்மைதான். இப்படியான நிலையில் இயக்குநர் பேரரசு விஜய் குறித்து விமர்சித்தது, பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. அதாவது அண்மையில் நடைபெற்ற முதலாம் ஆண்டு நிறைவு விழா நிகழ்ச்சியில் பிரசாந்த் கிஷோர் கலந்து கொண்டார். இது பேசு பொருளாக மாறியது.
பேரரசு: இது தொடர்பாக இயக்குநர் பேரரசு கூறும்போது, " விஜய் தனது கட்சி மேடையில் அவரது கடைசி நிலை தொண்டனைக் கூட அமர வைத்திருக்கலாம். ஆனால் பிரசாந்த் கிஷோரை உட்கார வைத்திருக்க கூடாது. அவர் கூலிக்கு மாரடிக்கும் ஆள். கடந்த 2021 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தலில், திமுகவுக்கு காசு வாங்கிட்டு வேலை செய்தார். இப்போது விஜய்யின் தவெகவுக்கு காசு வாங்கிட்டு வேலை செய்யப் போகிறார். மும்மொழி கொள்கைக்கு எதிராக பேசி விட்டு ஒரு இந்திக்காரனை மேடையில் உட்கார வைத்தது தவறு" எனக் கூறியுள்ளார். இயக்குநர் பேரரசுவின் விமர்சனம் சரியானது தான் என பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
ஜன நாயகன்: விஜய் தற்போது தனது கடைசி படமான ஜன நாயகன் படத்தில் நடித்துக் கொண்டு உள்ளார். இந்தப் படத்தை ஹெச். வினோத் இயக்கி வருகிறார். பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்துக் கொண்டு உள்ளார். படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். படத்தின் போஸ்டர்கள் அண்மையில் வெளியாகி வரவேற்பைப் பெற்றது.


Click it and Unblock the Notifications











