Vijayakanth Health - விஜயகாந்த்தை மீட்க இதுதான் ஒரே வழி.. ஐடியா சொல்லும் இயக்குநர்
சென்னை: Vijayakanth Health (விஜயகாந்த் உடல்நிலை) விஜயகாந்த் உடல்நிலை இப்படி போனதற்கு குற்ற உணர்ச்சிதான் ஒரே காரணம் என பிரபல இயக்குநர் பிரவீன் காந்தி கூறியிருக்கிறார்.
ரஜினி, கமல் ஹாசன் உச்சத்தில் இருந்தபோது தனது கொடியையும் பறக்கவிட்டவர் விஜயகாந்த். கறுத்த உருவம், சாமானிய குரல் என விஜயகாந்த் தங்களில் ஒருவர் போல் இருந்ததால் அவருக்கு ரசிகர்கள் கூடினர். இதனால் ரஜினிகாந்த், கமல் ஹாசன், விஜயகாந்த் என்ற நிலை தமிழ் சினிமாவில் இருந்தது.

அரசியலிலும் மாஸ் காட்டிய விஜயகாந்த்
விஜயகாந்த் எதற்கும் அஞ்சாதவர் என்ற பெயர் எடுத்தவர். அதேபோல் அவரும், அவர்து நண்பர் ராவுத்தரும் இணைந்து பலருக்கு உதவி செய்திருக்கின்றனர். இயற்கையிலேயே அஞ்சாமை குணம் கொண்ட விஜயகாந்த் கருணாநிதி, ஜெயலலிதா ஆகிய இருவருமே அரசியலில் பயங்கர ஆக்டிவ்வாக இருந்தபோது கட்சி ஆரம்பித்தவர். அதேபோல், தமிழ்நாட்டின் எதிர்க்கட்சி தலைவராகவும் இருந்தவர். ஆனால் இப்போது உடல்நிலை சரியில்லாமல் முழு ஓய்வில் இருக்கிறார் விஜயகாந்த்.

விஜயகாந்த்தின் இந்த நிலைக்கு யார் காரணம்?
விஜயகாந்த் விரைவில் குணமடைந்து மீண்டும் ஆக்டிவ்வாக மாற வேண்டும் என பலர் கூறிவருகின்றனர். இந்நிலையில் பிரபல இயக்குநர் பிரவீன் காந்தி விஜயகாந்த்தின் உடல்நிலை இப்படி ஆனதற்கான புதிய காரணத்தை கூறியிருக்கிறார். அவர் அளித்த பேட்டி ஒன்றில், "விஜயகாந்த்தின் நெருங்கிய நண்பர் இப்ராஹிம் ராவுத்தர் 2015ஆம் ஆண்டு உயிரிழந்தார். அந்த மரணம்தான் விஜயகாந்த்தை இப்படி மாற்றிவிட்டது.

அவர்கள் இருவரும் நட்புக்கு உதாரணம்
இப்ராஹிம் ராவுத்தர் உயிரோடு இருக்கும்வரை விஜயகாந்த் நல்ல ஆக்டிவ்வாக இருந்தார். ஆளுமை நிறைந்த தலைவராகவும், நடிகராகவும் திகழ்ந்தார்.. பணியாளர்களை பணியாளர்கள் என்று பார்க்கமாட்டார். அவருக்கு எல்லோருமே சமம். குழந்தைபோல்தான் விஜயகாந்த் விளையாடுவார். இப்ராஹிம் ராவுத்தரும், விஜயகாந்த்தும்தான் நட்புக்கு மிகச்சிறந்த உதாரணமாக திகழ்ந்தவர்கள்.

ராவுத்தர் உடலை பார்த்து உடைந்துபோய்விட்டார்
இப்ராஹிம் ராவுத்தர் உயிரிழந்ததும் அவரது உடல் வடபழனியில் வைக்கப்பட்டிருந்தது. அஞ்சலி செலுத்திவிட்டு அங்கே நின்றிருந்தேன். அப்போது அங்கு வந்த விஜயகாந்த் ராவுத்தரின் உடலை பார்த்ததும் உடைந்துபோய்விட்டார். தனக்காக வாழ்க்கையை தியாகம் செய்த ராவுத்தரின் மரணத்தை விஜயகாந்த்தால் நம்பமுடியவில்லை. அதிலிருந்துதான் அவர் குழம்பிப்போனார்.

குற்ற உணர்ச்சிதான் காரணம்
ராவுத்தரின் கடைசி காலகட்டத்தில் அவருடன் நாம் இல்லாமல் போய்விட்டோமே. ஒருவேளை கூடவே இருந்திருந்தால் காப்பாற்றியிருக்கலாமோ என்ற குற்ற உணர்ச்சிக்குள் விஜயகாந்த் சென்றுவிட்டார். அந்த குற்ற உணர்ச்சிதான் விஜயகாந்த்தை நிலைகுலைய செய்துவிட்டது. அவரது மனதில் இருக்கும் இந்த உணர்வு யாருக்கும் தெரியாது. நான் அருகில் இருந்து பார்த்தேன்.
விஜயகாந்த்தை மீட்பதற்கு இருக்கும் ஒரே வழி ராவுத்தர் மாதிரி ஒருவரை கொண்டு வந்து அவர் இறக்கவில்லை உயிரோடுதான் இருக்கிறார் என விஜயகாந்த்தை நம்ப வைக்க வேண்டும். இதை வெளிநாடுகளில் மனோதத்துவ சிகிச்சையாகவே செய்கிறார்கள்" என்றார்.


Click it and Unblock the Notifications











