Meiyazhagan Positive Review: ஃபேமிலியா பார்க்க செம படம்.. கார்த்தி திரை வாழ்க்கையில் மற்றொரு மெடல்
சென்னை: நடிகர்கள் கார்த்தி மற்றும் அரவிந்த் சாமி முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து, 96 படத்தினை இயக்கிய பிரேம் குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் மெய்யழகன். இந்தப் படத்தினை சூர்யா மற்றும் ஜோதிகாவின் தயாரிப்பு நிறுவனமான 2டி நிறுவனம் தயாரித்துள்ளது. இந்தப் படம் கார்த்தியின் 27வது படம் ஆகும். இந்தப் படத்திற்கு 96 படத்திற்கு இசை அமைத்த கோவிந்த் வசந்தா இசை அமைத்துள்ளார். மேலும் படத்தில் இரண்டு பாடல்களை உலக நாயகன் கமல் ஹாசன் பாடியுள்ளார். இப்படம் இன்று அதாவது செப்டம்பர் 27ஆம் தேதி ரிலீஸ் ஆகியுள்ளது. இப்படம் பார்த்த ரசிகர்கள் தங்களது விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். இந்நிலையில் படத்தின் பாசிடிவ் விமர்சனம் குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.
1. படத்தின் மிகப்பெரிய பலம் என்றால் அது கார்த்திதான். கார்த்தியின் நடிப்பு ரசிகர்களை அசரவைக்கும் நடிப்பாக உள்ளது. இசை வெளியீட்டு விழாவில் கூறியதைப்போல், தரமான மலையாளப் படத்தினைப் போல் இப்படம் தரமான படமாக உள்ளது. மிகவும் அதிரடியான எண்ட்ரி எல்லாம் இல்லாமல், கதாபாத்திரத்திற்கு ஏற்ற நடிப்பினை கார்த்தி வெளிக்காட்டியுள்ளதற்கு பாராட்டுகள். உடல் மொழி, வசன உச்சரிப்பு, அழுகை என அனைத்திலும் கார்த்தி பாஸ் மார்க் என்பதை விடவும், டாப் மார்க் என்பதுதான் சரியாக இருக்கும். தமிழ் சினிமாவிற்கு பெருமைதேடித்தரும் நடிப்பினை வெளிக்காட்டியுள்ளார்.

2. அதேபோல் அரவிந்த் சாமியும் தனது நடிப்பில் மிரட்டியுள்ளார். கார்த்தியின் வீட்டில் அவர் அழும் காட்சிகளில் எல்லாம் ரசிகர்களையும் ஒருநொடி தவிக்க வைத்துவிடுகின்றார். இவரும் கார்த்தியும் இணைந்து பாடும் இளையராஜா காட்சிகளில் தியேட்டரே சேர்ந்து பாடுகின்றது. தமிழ் சினிமாவில் தொடர்ந்து நடிக்கவில்லை என்றாலும், தனது நடிப்பால் அனைவரது கவனத்தையும் ஈர்க்கின்றார். மேலும் இந்தக் கதாபாத்திரத்திற்கு தன்னைவிட பொருத்தமானவர் யாரும் இல்லை எனக் கூறும் அளவிற்கு நடித்துள்ளார்.
3. படத்தின் மற்றொரு பலம் என்றால், கோவிந்த் வசந்தாவின் இசையைக் குறிப்பிடலாம். படம் தொடங்கியது முதல் இறுதி வரை தனது இசையால் மாயாஜாலம் செய்துள்ளர் கோவிந்த் வசந்தா. இவரது இசை ஒரு இடத்தில் கூட இறைச்சல் இல்லாமல், ரசிக்கும்படியாக உள்ளது. இன்னும் சொல்லப்போனால், ரசிகர்களை கதைக்களத்திற்கு கையைப் பிடித்து அழைத்துச் செல்கின்றார். இவரது இசை படத்தினை நம் மனதில் நிலையாக நிறுத்தி விடுகின்றது. கோவிந்த் வசந்தாவின் இசையில் கமல் ஹாசன் பாடிய பாடலுக்கு ரசிகர்கள் அப்லாஸ்.

4. படத்தின் கதையையும் திரைக்கதையையும் ஒரு கவிதைபோல அமைத்து விட்டார் படத்தின் இயக்குநர் பிரேம்குமார். ஆனால் அதனை இன்னும் கவித்துவமாக மாற்றியது மகேந்திரன் ஜெயராஜுவின் ஒளிப்பதிவுதான். தஞ்சாவூரையும் அதை ஒட்டியுள்ள நீட மங்களத்தையும் சுற்றி சுற்றிக் காட்டியுள்ளார். இரவு நேரக் காட்சிகளில் கச்சிதமான லைட்டிங்கினால் திரையை அலங்கரித்துள்ளார் என்றே கூறலாம். அதேபோல், கோவிந்த் ராஜுவின் எடிட்டிங் கதையை சிந்தாமல் சிதறாமல் அரங்கேற்ற முக்கிய காரணாமாக அமைந்துள்ளது.

5. 96 படத்திற்குப் பின்னர், இயக்குநரை ஆளேயே காணேம் என நினைத்துக் கொண்டு இருந்தவர்களுக்கு, 6 ஆண்டுகளுக்குப் பின்னர் தரமான படத்துடன் வந்துள்ளார் பிரேம் குமார். 96 படத்தைப் போல் பார்க்கும் ரசிகர்களுக்கு 'நல்ல படம்.. இது மாதிரி வருசமெல்லாம் படம் வந்தா மலையாளப்படமாவது, ஈரான் படமாவது" எனக் கூறும் அளவிற்கு தரமான படப்பைக் கொடுத்துள்ளார். பெரியாரின் நெற்றியில் பொட்டு, தடைக்காலத்தில் மாடுபிடி போட்டியில் பங்கேற்றதற்காக போலீஸ்க்கு ஒரு வார சஸ்பெண்ட், இலங்கைத் தமிழர் பிரச்னை, தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு என தனது அரசியல் நிலைப்பாட்டையும் அட்டகாசமாக வெளிப்படுத்தி அப்லாஸ்களை அள்ளியுள்ளார். ஒட்டுமொத்த படக்குழுவுக்கும் இது வெற்றிப்படம்.


Click it and Unblock the Notifications











