ஜனநாயகன் ஆடியோ லான்ச்.. தனது ஸ்டைலில் நச் விமர்சனம் செய்த பார்த்திபன்.. மனுஷன் பின்னுறாப்ள!
சென்னை: நடிகர் விஜய் நடித்து வெளியாகவுள்ள படம் ஜன நாயகன். படம் வரும் ஜனவரி 9ஆம் தேதி வெளியாகவுள்ளது. இது நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி உள்ள கடைசி படம். மலேசியாவில் நடைபெற்ற ஜன நாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழா என்பது, தமிழ் திரையுலகில் சுமார் ஒரு லட்சம் ரசிகர்கள் முன்னிலையில் நடைபெற்ற மிக பிரமாண்டமான இசை வெளியீட்டு விழா ஆகும். இந்த நிகழ்ச்சி குறித்து நடிகரும், தயாரிப்பாளரும் இயக்குநருமான பார்த்திபன் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த கருத்து பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்த இசை வெளியீட்டு விழாவில், விஜய் ரசிகர்களை கண் கலங்கச் செய்த பல நிகழ்வுகள் நடைபெற்றது. குறிப்பாக விஜய் பேசியது, விஜய் பாடியது, விஜய் நடனமாடியது, விஜய் தனது ரசிகர்களை நோக்கி கொடுத்த ஒவ்வொரு ரியாக்ஷனும் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது. இப்படி இருக்கும்போது, ரசிகர்கள் பலரையும் கண் கலங்க வைத்த சம்பவம் என்றால் விஜய் தனது ரசிகர்களுக்காக நடனமாடியது தான்.

அதையடுத்து, தனது, அப்பாவை நோக்கி குழந்தை போல ஓடிச் சென்று கட்டிப் பிடித்தார். மேலும் தனது அம்மா, பாடல் பாடும்போது மிகவும் எமோஷனலாக அமர்ந்து பார்த்துக் கொண்டு இருந்தார். இப்படி இருக்கும்போது, விஜய் நடனமாடிய வீடியோ ரசிகர்கள் மத்தியில் பெரும் கவனத்தை ஈர்த்தது. விஜய் ரசிகர்கள் மட்டும் இல்லாமல், விஜய் ரசிகர்கள் அல்லாதவர்களும் அந்த வீடியோவுக்கு எமோஷனலான கேப்ஷன்களை பதிவிட்டு வருவதை பார்க்க முடிகிறது.
விஜயின் எமோஷனல் பேச்சு: அதேபோல் விஜய் பேசியதில், " கடந்த 33 ஆண்டுகளாக எனக்காக பல இடங்களில் நின்றுள்ளார்கள். அதனால் தான் நான் இன்றைக்கு இங்கு நிற்கிறேன். எனக்காக 33 ஆண்டுகளாக அவர்கள் நின்றார்கள், அடுத்த 30, 33 ஆண்டுகளுக்கு நான் அவர்களுக்காக நிற்கப் போகிறேன்." என்று பேசியது விஜய் ரசிகர்கள் பலரையும் எமோஷனல் ஆக்கியது.
விஜய் மாதிரி: இப்படி இருக்கும்போது இந்த பிரமாண்டமான இசை வெளியீட்டு விழா குறித்து, பார்த்திபன் தனது எக்ஸ் பக்கதில் தனது புகைப்படத்தை பகிர்ந்து, பதிவிட்டுள்ள விஷயமும் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. அதாவது, " மலேஷிய மஹாஜன நாயகன் விஜய்ன்னா அவர்களின் சாயலில் என் latest photo இருப்பதாக நிறைய நண்பர்கள் கருத்துத் தெரிவித்துள்ளீர்கள். அவர் சாயலில் வரலாம் இன்னொருவர், சாதனையை கூட தொடலாம் பின்னொருவர்.

கண்கள் நிறைத்தது: கமர்ஷியல் ஹீரோவாக சாதனை அவரது வசூல்,கரைக்கானா கடல் போன்ற ரசிகர்களே அவரது மகசூல்! மலேஷிய நிகழ்ச்சியில் கூட கோட்டும் சூட்டும் ஆட்டமும் பாட்டும் மீறி என் கண்ணை நிறைத்தது... அப்பாவை ஓடி வந்து கட்டியணைத்ததும், அம்மா பாடும்போது தளும்பாமல் பார்த்து சிரித்ததும் ! மனமே மகோன்னதம்! குதர்க்கமான அரசியல் என்ற அஜினோமோட்டோ கலக்காத , ஆர்கானிக்கான பாராட்டாக இதை சுவைக்கவும்" என்று பதிவிட்டுள்ளார். அவரது இந்த பதிவு தற்போது விஜய் ரசிகர்கள் மத்தியிலும் தமிழக வெற்றிக் கழக தொண்டர்கள் மத்தியிலும் வேகமாக பரவி வருகிறது.


Click it and Unblock the Notifications











