SS Rajamouli: பாகுபலி இயக்குநர் ராஜமௌலியின் ஆவணப்படம்.. பாராட்டிய பிரபல ஹாலிவுட் இயக்குநர்!
சென்னை: இயக்குனர் ராஜமௌலி ஸ்டூடண்ட் நம்பர் 1 படம் மூலம் இயக்குனராக டோலிவுட்டில் என்ட்ரி கொடுத்து தொடர்ந்து சில கமர்சியல் படங்களை இயக்கியவர். இவரது பிரம்மாண்ட படைப்பாக கடந்த 2012ம் ஆண்டில் வெளியானது ஈகா.இந்தப் படம் தமிழிலும் நான் ஈ என்ற பெயரில் வெளியாகி ஏராளமான ரசிகர்களை கவர்ந்தது.
ஈகா படம் கொடுத்த நம்பிக்கையை தொடர்ந்து பிரம்மாண்ட படங்களை மட்டுமே இயக்குவது என்ற முடிவை ராஜமௌலி எடுத்திருந்தார். தொடர்ந்து பாகுபலி, பாகுபலி 2 மற்றும் ஆர்ஆர்ஆர் படங்கள் இவரது பிரம்மாண்ட படைப்புகளுக்கு சான்றுகளாக அமைந்துள்ளன. இந்நிலையில் ராஜமௌலியின் ஆவணப்படத்தை நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் தற்போது உருவாக்கியுள்ளது.

இயக்குநர் ராஜமௌலி: டோலிவுட்டில் ஸ்டூடண்ட் நம்பர் 1 என்ற படத்தின் இயக்குனராக அறிமுகமாகி தன்னுடைய திரை வாழ்க்கையை துவங்கிய ராஜமௌலி, தொடர்ந்து சிம்ஹாத்ரி, சை, சத்ரபதி உள்ளிட்ட கமர்சியல் படங்களை இயக்கி பாக்ஸ் ஆபிஸில் ஹிட் கொடுத்திருந்தார். கமர்சியல் இயக்குனராக இந்தப் படங்கள் அவரது அடையாளத்தை ஏற்படுத்திய நிலையில், கடந்த 2012ம் ஆண்டில் ராஜமௌலி இயக்கிய ஈகா என்ற படம் மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்து சர்வதே அளவில் கவனத்தை பெற்றது. இந்த படம் தமிழிலும் நான் ஈ என்ற பெயரில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது.
பிரம்மாண்ட படங்கள்: ஈகா படம் ராஜமௌலியின் திரை வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. இந்தப் படம் கொடுத்த நம்பிக்கையில் கமர்ஷியல் படங்களில் இருந்து விலகி பிரம்மாண்டமான மற்றும் மிகப்பெரிய பட்ஜெட் படங்களை இயக்கத் துவங்கினார் ராஜமௌலி. இந்நிலையில் மூன்று ஆண்டு உழைப்பை தொடர்ந்து இவரது பாகுபலி படம் கடந்த 2015ம் ஆண்டில் வெளியானது. சர்வதேச அளவில் மிகப்பெரிய அளவில் இந்தப் படம் கவனத்தையும் வசூலையும் பெற்று தந்தது. தொடர்ந்து பாகுபலி 2 படமும் வெளியாகி 1850 கோடி ரூபாய் வசூலை சர்வதேச அளவில் குவித்தது. தொடர்ந்து ஆர்ஆர்ஆர் என்ற திரைப்படத்தையும் ராஜமௌலி கொடுத்திருந்தார்.
ஆஸ்கர் வென்ற ஆர்ஆர்ஆர் பாடல்: சுதந்திர காலகட்டத்தை மையமாக கொண்டு வெளியான ஆர்ஆர்ஆர் படம் சர்வதேச அளவில் 1350 கோடி ரூபாய் வரை வசூலித்தது. சர்வதேச அளவில் கவனம் பெற்ற இயக்குனராக ராஜமௌலி மாறினார். இவரது திரை வாழ்க்கையை வெளிப்படுத்தும் வகையில் தற்போது நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் மாடர்ன் மாஸ்டர்ஸ் : ராஜமௌலி என்ற பெயரில் ராஜமௌலியின் ஆவணப்படத்தை தயாரித்துள்ளது. இன்றைய தினம் இந்த ஆவணப்படத்தின்ட்ரெயிலர் வெளியாகியுள்ளது. இதில் ராஜமௌலியுடன் இணைந்து பணியாற்றியுள்ள பிரபாஸ், ராம்சரண், ஜூனியர் என்டிஆர் ஆகியோர் அவருடனான தங்களது திரை அனுபவங்களை பகிர்ந்துள்ளனர்.
ஹாலிவுட் இயக்குநர் பாராட்டு: இந்நிலையில் சர்வதேச அளவில் பிரமாண்டமான இயக்குனரான ஜேம்ஸ் கேமரூனும் ராஜமௌலி குறித்து இந்த ஆவணப்பட ட்ரெய்லரில் புகழ்ந்து பேசியுள்ளார். ராஜமௌலியால் எதுவும் செய்ய முடியும் என்றும் யாருடனும் பணியாற்ற முடியும் என்றும் அவர் இந்த ட்ரெய்லரில் புகழ்ந்துள்ளார். ராஜமௌலியின் திரை வாழ்க்கையை பேசும் இந்த ஆவணப்படம் அவரது பிறந்த நாளான ஆகஸ்ட் 2ம் தேதி நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகவுள்ளது. டைட்டானிக் என்ற மாபெரும் காதல் கதையை படமாக்கி சர்வதேச சினிமாவே மிரண்டு பார்க்கும் வகையில் செய்தவர் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன். டைட்டானிக் மட்டுமில்லாமல் டெர்மினேட்டர், அவதார் போன்ற பிரம்மாண்ட படைப்புகளை கொடுத்தவர்.
ராஜமௌலி -ஜேம்ஸ் கேமரூன் கூட்டணி: ஒட்டுமொத்த சினிமா உலகமே கொண்டாடும்படி செய்த ஜேம்ஸ் கேமரூன், தென்னிந்தியாவை சேர்ந்த இயக்குநர் ராஜமௌலியை பாராட்டி பேசியுள்ளது கவனத்தை பெற்றுள்ளது. முன்னதாக ஆர்ஆர்ஆர் படத்தின் நாட்டு நாட்டு பாடல் ஆஸ்கார் விருதை பெற்ற நிலையில் லாஸ் ஏஞ்சல்ஸ் சென்றிருந்த ராஜமௌலி, அங்கு ஜேம்ஸ் கேமரூனை சந்தித்து பேசினார். இருவரும் இணைந்திருந்த புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தன. இந்நிலையில் தற்போது ராஜமௌலியை இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் அவரது ஆவணப் படத்திற்காக புகழ்ந்து பேசியுள்ளார்.


Click it and Unblock the Notifications











