Yuvan X Ram: ராம், யுவனுக்கு இடையில் என்ன பிரச்னை.. பறந்து போ பாடல்களுக்கு ஏன் வேறு இசை அமைப்பாளர்?
சென்னை: இயக்குநர் ராமின் இயக்கத்தில் அடுத்து வெளியாக உள்ள படம் பறந்து போ. இந்த படத்தில் நடிகர் மெச்சி சிவா நடித்துள்ளார். இயக்குநர் ராமின் படம் என்றாலே ரசிகர்கள் மனதில் பெரும் நம்பிக்கையாக தோன்றும் விஷயங்களில் ஒன்று, யுவன் ஷங்கர் ராஜாவின் இசை தான். அவரது இசையில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்துமே ராமின் படத்திற்கு பலம் சேர்த்துள்ளன. ஆனால் பறந்து போ படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா பாடல்கள் அமைக்காமல் பின்னணி இசை மட்டும் அமைத்துள்ளார். இந்நிலையில் ரசிகர்கள் தினமும் இயக்குநர் ராமைத் திட்டி மெசேஜ் செய்து வருகிறார்கள் என பறந்து போ படத்தின் முதல் பாடல் வெளியீட்டு விழாவில் இயக்குநர் ராம் தெரிவித்துள்ளார்.
இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா தமிழ் சினிமாவில் தனித்துவமான திரையிசைக்கு சொந்தக்காரர். இவரது பாடல்கள் தொடங்கி பின்னணி இசை என அனைத்துமே ரசிகர்கள் மத்தியில் நன்கு கவனம் பெற்று வருகிறது. இயக்குநர்கள் பலரும் அவரது இசையின் மீது பெரும் நம்பிக்கை வைத்து, தங்களது படத்தின் திரைக்கதையை அமைக்கிறார்கள்.
யுவன் - ராம், யுவன் - தியாகராஜா குமாரராஜா, யுவன் - செல்வராகவன், யுவன் - வெங்கட் பிரபு, யுவன் - விஷ்ணு வர்தன் என இந்த பட்டியல் தமிழ் திரையுலகில் நீண்டு கொண்டே போகும். இந்த இயக்குநர்கள் எல்லாம் படமெடுத்தால் இசையமைப்பாளர் என்றால் அது யுவன் ஷங்கர் ராஜா மட்டும் தான். இந்த இயக்குநர்கள் தங்களது படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இல்லாமல் வேறு ஒரு இசையமைப்பாளரிடம் செல்கிறார்கள் என்றால் ரசிகர்கள், இயக்குநர்களை வசை பாட ஆரம்பித்து விடுவது வாடிக்கையான ஒன்றுதான்.

ராமும் யுவனும்: அப்படி ரத்தமும் சதையுமாக இருந்த யுவன் - ராம் கூட்டணியில் பறந்து போ படத்தில் பாடல்கள் இல்லை என்பது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சி. இதனால் ரசிகர்கள் இயக்குநர் ராமை கடுமையாக திட்டி அவருக்கே மெசேஜ் அனுப்புவது, சமூக வலைதளங்களில் பதிவிடுவது என இருந்தார்கள். இது தொடர்பாக இயக்குநர் ராம் மனம் திறந்து பேசியுள்ளர். அவர் பேசும்போது, " யுவன் ரசிகர்களுக்கு ஒன்று சொல்லிக் கொள்ள நினைக்கிறேன். தினமும் ஏகப்பட்ட கெட்ட வார்த்தைகளில் எனக்கு மெசேஜ் வந்து கொண்டே உள்ளது. அது ராம் டேஷ் டேஷ் டேஷ் என போய்க்கொண்டே உள்ளது.
நெருக்கடி: இந்த படத்திற்கு யுவன் தான் இசையமைப்பாளராக இருந்தார். நாங்களும் முன் பணம் கொடுத்தோம். திடீரென ஒரு நாள் மதன் கார்க்கி சார் எனது அலுவலகத்திற்கு வந்து, இந்த படத்தில் பாடல்கள் அதிகமாக இருந்தால் நன்றாக இருக்கும், ஜிங்கில்ஸ் மாதிரி செய்யலாம் என்று கூறினார். நானும் இதை யுவனிடம் கூறினேன். மேலும் நாங்கள் ரோட்டர்டாம் திரைப்பட விழாவிற்கு செல்ல வேண்டும் என்ற நெருக்கடியில் இருந்தோம். யுவன் அப்போது துபாயில் இருந்தார். எங்களால் துபாய்க்கு அப்போது போக முடியவில்லை. அப்போது யுவன் கோட் உள்ளிட்ட இரண்டு, மூன்று படங்களுக்கு இசையமைத்து கொண்டு இருந்தார்.

காரணம்: என்ன செய்வது என தெரியாமல் இருந்தபோது, படத்திற்கு பின்னணி இசை நான் செய்கிறேன், நீங்கள் ஜிங்கில்ஸ் பாடல்களை வேறு ஒருவரை வைத்து செய்து கொள்ளுங்கள் என்று கூறினார். அப்போது எங்களுக்கு ஆபத்பாண்டவனாக வந்தவர்தான் சந்தோஷ் தயாநிதி. இந்த கதைக்கு என்ன பாடல் தேவையோ அதைத்தான் அவர் செய்து கொடுத்திருக்கிறார். நானும் யுவன் ரசிகன் தான், யுவனை நானும் மிஸ் செய்கிறேன். யுவனுக்கு எனக்கும் எந்த பிரச்னையும் இல்லை, இந்த படத்தில் யுவன் தான் பாடல்கள் பண்ணமாட்டேன் என்று கூறினாரே தவிர, நான் பாடல்கள் பண்ணவேண்டாம் என்று கூறவில்லை. காரணம் யுவனுக்கு நேரம் இல்லை" என்று கூறினார்.


Click it and Unblock the Notifications











