37 வருடங்களுக்கு பிறகு டிகிரி சர்ட்டிஃபிகேட் - இயக்குநரின் வேற லெவல் சம்பவம்
ஹைதராபாத்: இயக்குநரும், தயாரிப்பாளருமான ராம்கோபால் வர்மா 37 வருடங்களுக்கு பிறகு பி.டெக் பட்டத்தை பெற்றிருக்கிறார். இதனையடுத்து அவரை நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.
நாகார்ஜுனாவை வைத்து 1989ஆம் ஆண்டு சிவா படத்தை இயக்கியதன் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் ராம்கோபால் வர்மா. தெலுங்கு மட்டுமின்றி தமிழ், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளிலும் அவர் படங்களை இயக்கியிருக்கிறார்.

பிரபல இயக்குநரான ராம்கோபால் வர்மா
சிவா படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான ராம்கோபால் வர்மா முதல் படத்திலேயே நல்ல இயக்குநர் என்ற பெயரை எடுத்தார். இதனையடுத்து பல படங்களை இயக்கிய அவர் ஹிந்தியில் ரங்கீலா படத்தை இயக்கினார். அந்தப் படம் பெரும் வெற்றி பெற பாலிவுட்டிலும் பிரபலமான இயக்குநர் ஆனார். இதேபோல் பாலிவுட்டில் அவர் இயக்கிய சத்யா படமும் மெகா ஹிட்டானது.

சூர்யாவை இயக்கிய ராம்கோபால் வர்மா
பல மொழிகளில் படம் இயக்கும் ராம்கோபால் வர்மா தமிழில் சூர்யாவை வைத்து ரத்த சரித்திரம் படத்தை இயக்கினார். இந்தப் படத்தில் சூர்யாவுடன் விவேக் ஓபராயும் நடித்திருந்தார். கடந்த 2010ஆம் ஆண்டு வெளியான இப்படம் தமிழில் மட்டுமின்றி ஹிந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் உருவானது. பெரும் எதிர்பார்ப்போடு வெளியான அப்படம் ரசிகர்களிடம் போதிய வரவேற்பைப் பெறவில்லை.

ராம்கோபாலை சுற்றிய சர்ச்சை
ராம்கோபால் வர்மா சர்ச்சைக்குரிய இயக்குநரும்கூட. அவரது பல பதிவுகள் சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை கிளப்புபவை. அதுமட்டுமின்றி சமீபத்தில் தனது படத்தின் ப்ரோமோஷனில் நடிகையிடம் அவர் நடந்துகொண்ட விதமும் பலரிடம் முகசுளிப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது. அவர் கடைசியாக டேஞ்சரஸ் என்ற படத்தை இயக்கியிருந்தார்.

37 வருடங்களுக்கு பிறகு டிகிரி பெற்ற ராம்கோபால் வர்மா
இந்நிலையில் நடிகர் ராம்கோபால் வர்மா 37 வருடங்களுக்கு பிறகு டிகிரி பெற்றிருக்கிறார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் டிகிரி சர்ட்டிஃபிக்கேட்டின் புகைப்படத்தை பகிர்ந்து, "நான் தேர்ச்சி பெற்று 37 வருடங்கள் நிறைவடைந்திருக்கின்றன. இன்று எனது பி.டெக் பட்டம் பெற்றதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். 1985ஆம் ஆண்டு கட்டட பொறியியல் படிப்பதில் எனக்கு ஆர்வம் இல்லாததால் அதனை நான் எடுக்கவில்லை" என குறிப்பிட்டிருக்கிறார் மேலும் அவர் படித்த ஆச்சார்யா நாகார்ஜுனா பல்கலைக்கழகத்திற்கு நன்றியையும் தெரிவித்திருக்கிறார். அவரது இந்தப் பதிவை பார்த்த நெட்டிசன்களில் ஒருதரப்பினர் அவருக்கு வாழ்த்து தெரிவித்தாலும், பலரும் அவரை கலாய்த்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











