Kamalhaasan: இப்பதான் நான் இருக்கறது உங்க கண்ணுக்கு தெரியுதா? கமலை நோக்கி வார்த்தைகளை வீசிய இளையராஜா
சென்னை: உலகநாயகன் கமல்ஹாசன் நாளை அதாவது, நவம்பர் 7ஆம் தேதி தனது 70வது பிறந்த நாளைக் கொண்டாடவுள்ளார். இவருக்கு வாழ்த்து சொல்ல அவரது ரசிகர்களும் அவர் பணியாற்றிக் கொண்டு இருக்கும் படக்குழுவினரும் அவரின் கட்சித் தொண்டர்களும் தயாராகிக் கொண்டு உள்ளனர். இப்படியான நிலையில் இசைஞானி இளையராஜாவுக்கும் கமல்ஹாசனுக்கும் இடையிலான உறவு என்பது ரொம்பவுமே சுவாரஸ்யமானது. இப்படியான நிலையில் பிரபல திரைப்பட இயக்குநர் ராசி அழகப்பன் இவர்கள் இருவருக்கும் இடையிலான உறவு குறித்து வீடியோ ஒன்றில் தெரிவித்துள்ளார். அது குறித்து இந்தத் தொகுப்பில் காணலாம்.
உலகநாயகன் கமல்ஹாசன் தமிழ் சினிமாவின் அடையாளம் மட்டுமல்ல, கௌரவம் எனவும் கூறலாம். இவர் தனது 5 வயதில் குழந்தை நட்சத்திரமாக சினிமா வாழ்க்கையை தொடங்கியவர். இன்றைக்கு தனது 65 ஆண்டுகால சினிமா அனுபவத்தால், நடமாடும் சினிமா பல்கலைக்கழகமாகத் திகழ்கின்றார். தனக்குத் தெரியாத விஷயத்தை யார் கற்றுக் கொடுத்தாலும் அவர்களிடம் கற்றுக் கொள்ளும் மனநிலை கொண்டவர். தற்போது ஏ.ஐ. தொழிநுட்பத்தினை முறைப்படி கற்றுக் கொள்ள அமெரிக்காவுக்குச் சென்றுள்ளார். இம்மாத இறுதியில் நாடு திரும்புவார் எனக் கூறப்படுகின்றது.

கமல்ஹாசனைப் பொறுத்தவரை நடிகர், கதாசிரியர், பாடலாசிரியர், பாடகர், இயக்குநர், தயாரிப்பாளர், நடன இயக்குநர், என சினிமாவின் அனைத்து விஷயங்களையும் கரைத்துக் குடித்தவர். இன்றைக்கு மார்க்கெட்டில் எதாவது புதிதாக கேமரா அறிமுகப்படுத்தப்பட்டிருந்தால், அது குறித்தும் தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும் என முனைப்பு காட்டக்கூடியவர். தமிழ் சினிமாவில் இவரைப்போல் நன்கு அனுபவம் கொண்டவர்கள் என்றால் அவற்றில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இசைஞானி இளையராஜா உள்ளிட்டோரைக் குறிப்பிடலாம்.
அன்பு: இதில் இளையராஜாவுக்கும் கமல்ஹாசனுக்கும் இருக்கும் உறவு என்பது வார்த்தைகளால் விவரிக்க முடியாது. தமிழ் சினிமாவே போற்றிப் புகழும் கலைஞர் கமல்ஹாசன் பொது மேடையில் இளையராஜா காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கினார். அதேமேடையில் இளையராஜாவுக்கு முத்தமும் கொடுத்தார். இந்த அளவுக்கு இருவரும் ஒருவர் மீது ஒருவர் மரியாதையும் அன்பும் வைத்துள்ளார்கள்.

விருமாண்டி: இந்நிலையில் வீடியோ ஒன்றில் இயக்குநர் ராசி அழகப்பன் பேசுகையில், " விருமாண்டி படத்தின் கதையை முழுவதுமாக எழுதிமுடித்துவிட்டு படத்திற்கு யாரை இசை அமைப்பாளராக போடலாம் என்ற பேச்சு எழுந்தது. உடனே நான் இளையராஜாவைக் கூறினேன். உடனே கமல் சார், ஏன் எனக் கேட்டார். கிராமத்துக் கதை இளையராஜாவால் நமது கதையை தனது இசையால், ரசிகர்களுக்கு கடத்திவிடுவார் எனக் கூறினேன். அவர் சம்மதிப்பாரா எனக் கேட்டுவிட்டு போய் கேட்கச் சொன்னார்.
இளையராஜா: நானும் நண்பரும் இளையராஜாவிடம் சென்று விவரத்தைக் கூறினோம். உடனே அவர், என்னய்யா இப்பதான் நான் இருக்கறது உங்க கண்ணுக்குத் தெரியுதா? நீங்களே நாலு அஞ்சு பேர வெச்சு இருப்பீங்களே" எனச் செல்லமாக கூறிவிட்டு, நாளைக்கு வாங்க எனக் கூறினார். முதலில் கதை சொன்னபோது இளையராஜா சம்மதிக்கவில்லை, முதலில் கமல்சார் கதை சொல்லும்போது, சண்டைக் காட்சிகளை மட்டுமே கூறினார். ஆனால் இளையராஜா சம்மதம் தெரிவிக்காதது, கமல்சாரிடம் நாங்கள் கூறவில்லை. ஆனால் இளையராஜா சாரிடம் படத்தில் பாடல்களுக்கு அதிக முக்கியத்துவம் உள்ளது. நீங்கள் இன்னொரு முறை கதையைக் கேட்கவேண்டும் என கோரிக்கை வைத்தோம். அதன் பின்னர் கதையைக் கேட்டவர், படத்தில் ஏற்கனவே இருந்த பாடல்களை விட, மேலும் ஒரு பாடலை இசை அமைத்துக் கொடுத்தார்" என பேசியுள்ளார்.


Click it and Unblock the Notifications











