“காந்தாரா 2“ கதை என்ன தெரியுமா? ரிஷப் ஷெட்டி பகிர்ந்த சுவாரசியத் தகவல்!
சென்னை : காந்தாரா படத்தின் அடுத்த பாகம் குறித்த சுவாரசியமானத் தகவலை, இயக்குநர் ரிஷப் ஷெட்டி தெரிவித்துள்ளார்.
கே.ஜி.எஃப் படங்களைத் தயாரித்த ஹொம்பாலே பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் ரிஷப் ஷெட்டி நடித்து இயக்கிய திரைப்படம் 'காந்தாரா'. கடந்த செப்டம்பர் மாதம் வெளியான இப்படம் பெரும் வரவேற்பைப் பெற்றது.
கன்னடத்தில் இப்படத்திற்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி உள்ளிட்ட மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டும் வெளியாகி வசூலை அள்ளியது.

காந்தாரா
1847ஆம் ஆண்டு ஓர அரசருக்கு பணம், செல்வாக்கு என அனைத்தும் இருந்தும் நிம்மதி இல்லாததால், நிம்மதி தேடி காட்டுக்கு செல்கிறார். காட்டுப்பகுதியில் வசிக்கும் மக்களின் கடவுளைப் பார்த்து மனம் உருகி, அந்த தெய்வத்திற்காக பல ஏக்கர் நிலத்தை அந்த மக்களுக்கு எழுதி கொடுத்துவிடுகிறார். இதற்குப் பிறகு அந்த அரசனின் வழிவந்த ஒருவன், அந்த நிலங்களை மீட்க நினைக்க, அங்கிருந்த தெய்வம் அவனை கொன்றுவிடுகிறது. சில ஆண்டுகள் கழித்து அதே நிலத்தை மக்களிடமிருந்து பறிக்க அரசர் வழிவந்த ஒருவன் நினைக்கிறான் அவனையும் தெய்வம் கொன்று விட்டு மறைந்துவிடுகிறது.

பூரிப்படைந்த மக்கள்
திரையரங்கிற்கு அதிக மக்களை வரவைத்த திரைப்படம் என்ற பெருமையை இப்படம் பெற்றது. கர்நாடக மாநிலம் மங்களுர், உடுப்பி போன்ற தெற்கு கடலோரப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் வழிபடக்கூடிய கிராம தெய்வ வழிபாட்டை மையமாக வைத்து இத்திரைப்படம் உருவாக்கப்பட்டதால், காந்தாரா படத்தின் மகத்தான வெற்றியை முன்னோர்கள் வழிபாட்டுடன் இந்த படத்தை ஒப்பிட்டுப்பார்த்து மக்கள் பூரிப்பு அடைந்தனர்.

ரிஷப் ஷெட்டியின் மாஸ் ட்விஸ்ட்
இந்நிலையில், காந்தாரா படத்தின் 100வது நாள் விழாவில் பேசிய ரிஷப் ஷெட்டி, காந்தாரா படத்தின் அடுத்த பாகம் குறித்த முக்கியமான தகவலை தெரிவித்துள்ளார். அதாவது, தற்போது வெளியாகி உள்ள காந்தாரா படம் தான் இரண்டாம் பாகம் என்றும், முந்தைய பாகம் அடுத்த ஆண்டு வெளியிட திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

ஆய்வு செய்து வருகிறோம்
இந்த பாகத்தில் தெய்வத்தை பற்றிய விரிவாக கூற உள்ளதாகவும், மிகப்பெரிய பட்ஜெட்டில் மிகவும் பிரம்மாண்டமாக எடுக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறினார் ரிஷப் ஷெட்டி கூறினார். மேலும், தெய்வம் குறித்த ஆய்வு ஆரம்பக்கட்டத்தில் இருப்பதால் இது குறித்து நிறைய விஷயங்களை தற்போது சொல்ல முடியாது என்றார்.


Click it and Unblock the Notifications











