சூர்யா 45.. தயாரிப்பாளர் இப்படி செய்யலாமா? ஷூட்டிங்கை பாதியில் நிறுத்திய ஆர்.ஜே.பாலாஜி!
சென்னை: ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் படம் "சூர்யா 45". இப்படத்தில் திரிஷா, ஸ்வாசிகா, சிவாடா, யோகி பாபு என நடிகர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இப்படத்தின் ஷூட்டிங் வேகமாக நடைபெற்று வரும் நிலையில், இப்படத்தின் தயாரிப்பாளர் செய்த சில ஏடாகூடமான வேலையால், கடுப்பான இயக்குநர் ஆர்ஜே பாலாஜி படப்பிடிப்பை பாதியில் நிறுத்திவிட்டு பேக்கப் செய்ததாக கூறப்படுகிறது.
நடிகர் சூர்யா நடித்த கங்குவா திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் கடந்த ஆண்டு வெளியானது. பல கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த படத்திற்கு மக்கள் மத்தியில் இருந்து வந்த மோசமான விமர்சனத்தால், படம் படுதோல்வியை சந்தித்தது. கங்குவா திரைப்படத்தை தொடர்ந்து ரெட்ரோ, சூர்யா 45 என்ற படத்தில் நடித்து வருகிறார். கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் ரெட்ரோ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துவிட்டது. படம் ஏப்ரல் அல்லது மே மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது

சூர்யா 45: இதைத்தொடர்ந்து தற்போது, ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா தனது 45வது திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்திற்கு தற்காலிகமாக சூர்யா 45 என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக த்ரிஷா நடிக்கிறார். மௌனம் பேசியதே, ஆறு படத்திற்கு பிறகு த்ரிஷா இந்த திரைப்படத்தில் சூர்யாவுடன் இணைந்து நடிக்கிறார். மேலும், சூர்யாவுக்கு வில்லனாக ஆர்.ஜே பாலாஜி நடிப்பதாகவும் கூறப்படுகிறது.
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்தில், சுவாசிகா, ஷிவிதா, யோகி பாபு, நட்டி சுப்பிரமணியம், மலையாள நடிகை இந்திரன்ஸ், மன்சூர் அலிகான் உட்பட பலர் நடிக்கிறார்கள். இப்படத்திற்கு பேட்டைக்காரன் என பெயர் வைக்க இருப்பதாக சினிமா வட்டாரத்தில் பேச்சுக்கள் எழுந்து வருகின்றன. இருப்பினும் இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடுப்பான ஆர்ஜே பாலாஜி: இந்நிலையில், இந்த படத்தின் தயாரிப்பாளருக்கும் இயக்குனருக்கும் இடையே ஏற்பட்டு இருக்கும் மோதல் குறித்த தகவல் தான் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது, இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு கோவை, பொள்ளாச்சியில் நடைபெற்ற நிலையில், இரண்டாவது கட்டமாக தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது. சென்னையில் இருக்கும் பிரபல ஸ்டுடியோவில் நீதிமன்றம் போல பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டுள்ளது. இந்த காட்சிக்காக சுமார் 500 ஜூனியர் ஆர்டிஸ்ட்கள் வரை தேவைப்படுவார்கள் என படத்தின் இயக்குனர் ஆர்.ஜே பாலாஜி தயாரிப்பாளரிடம் கூறியிருந்தார்.
ரசிகர்கள் கவலை: ஆனால், தயாரிப்பாளர் தரப்பிலிருந்து இயக்குனர் கேட்ட அளவில் பாதி ஆர்டிஸ்ட்டுகளை தான் அனுப்பி வைத்திருக்கிறார்கள். இதே மாதிரி தான் தயாரிப்பு நிறுவனம் செய்து கொண்டிருக்கிறது என்று கடுப்பான ஆர்.ஜே பாலாஜி, ஷூட்டிங் தொடங்காமலேயே பேக்கப் செய்திருக்கிறார். இதனால், அன்றைய தினம் தயாரிப்பாளருக்கு சில லட்சங்கள் செலவு ஆனதாக கூறப்படுகிறது. ஏற்கனவே, சூர்யா நடித்த கங்குவா படம் படுதோல்வியை சந்தித்த நிலையில் ரசிகர்கள் அனைவரும் இந்த படத்தை எதிர்பார்த்து காத்திருக்கும் நிலையில், இந்த படத்தின் படப்பிடிப்பில் இப்படி குழப்பம் நடந்து வருவதால் சூர்யாவின் ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர்.


Click it and Unblock the Notifications











