பதவிக்காக பொய் சொல்லி மரியாதையை கெடுத்துக் கொள்ளாதீர்கள்... பொங்கிய செல்வமணி
சென்னை : தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்க தேர்தல் வரும் பிப்ரவரி 27ம் தேதி நடைபெற உள்ளது.
இதில் ஆர்கே செல்வமணி தலைமையிலும் கே பாக்யராஜ் தலைமையிலும் இரு அணிகள் போட்டியிடுகின்றன.
இந்த அணிகளின் அறிமுகக் கூட்டங்களில் ஒருவருக்கொருவர் தாக்கிப் பேசிக் கொண்டது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

இயக்குநர்கள் சங்க தேர்தல் 2022
தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்க தேர்தல் பிப்ரவரி 27ம் தேதி நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஆர்கே செல்வமணி தலைமையில் புதுவசந்தம் என்ற அணியும் கே பாக்யராஜ் தலைமையில் இமயம் என்ற அணியும் போட்டியிடுகின்றன. இதனிடையே இரு அணிகளும் தங்களது வேட்பாளர்களை அறிமுகப்படுத்தும் கூட்டத்தை நடத்தி முடித்துள்ளன.

பாக்யராஜ் குற்றச்சாட்டு
இந்தக் கூட்டத்தில் தலைவர் பதவிக்கு போட்டியிடும் கே பாக்யராஜ், தலைவராக ஆர்கே செல்வமணி ஆண்டு அனுபவித்து விட்டதாக குற்றம் சாட்டியிருந்தார். மேலும் செல்வமணியின் படங்கள் நன்றாக ஓடியதாக கூறப்படுவதாகவும் அந்தப் படங்களை அவர்தான் எடுத்தாரா என்ற சந்தேகம் தனக்கு எழுந்துள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

பதிலடி கொடுத்த செல்வமணி
இதற்கு செல்வமணி அணியின் சார்பில் கடிதம் ஒன்றின்மூலம் பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது. இதில் பாக்யராஜை கடுமையாக விமர்சனம் செய்துள்ளனர் புதுவசந்தம் அணியினர். பதவிக்காக அவர் பொய்யான வாக்குறுதிகளை அளித்து வருவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

பொய்யான வாக்குறுதிகள்
60 வயதிற்கு மேற்பட்ட இயக்குநர்களுக்கு மாதம் 2000 ரூபாய் ஓய்வூதியம் தருவதாக பாக்யராஜ் உறுதியளித்துள்ள நிலையில், இதற்கு வருடத்திற்கு ஒரு கோடி ரூபாய் செலவாகும் என்றும் அதற்கான நிதிக்கு அவர் என்ன செய்வார் என்றும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. மேலும் 4 வருடங்களுக்கு மேல் எழுத்தாளர் சங்க தலைவராக இருக்கும் அவர் அந்த சங்கத்தில் யாருக்கும் ஓய்வூதியம் வழங்காததையும் சுட்டிக் காட்டியுள்ளனர்.

மரியாதையை கெடுத்துக் கொள்ள வேண்டாம்
பாக்யராஜ் பதவிக்காக பொய் வாக்குறுதிகளை தந்துக் கொண்டிருப்பதாகவும் அவருக்கு இருக்கிற மரியாதையை கெடுத்துக் கொள்ள வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். சினிமாவில் மட்டுமே கதை, திரைக்கதை வெல்லும் என்றும் ஆனால் சங்கத்தில் உண்மை மட்டுமே வெல்லும் என்றும் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.

ஒருவருக்கொருவர் குற்றச்சாட்டு
தெருவோர அரசியல் கூட்டங்களையே மிஞ்சிவிடும் தொனியில் இவர்களது குற்றச்சாட்டுக்கள் உள்ளன. மக்களால் மரியாதையாக பார்க்கப்படும் இந்தக் கலைஞர்கள் இவ்வாறு பதவிக்காக இறங்கி செயல்படுவது அனைவரையும் முகம் சுளிக்க வைத்துள்ளது.


Click it and Unblock the Notifications











