Vijayakanth: கோபப்பட்ட விஜயகாந்த்.. இழிவுப்படுத்தியதாக ஆவேசம்.. ட்ரெண்டான எஸ்ஏசி பேட்டி!
சென்னை: நடிகர் விஜயகாந்த் ஆரம்ப கால படங்களில் அதிகமான கவனத்தை பெற்ற சட்டம் ஒரு இருட்டறை போன்ற படங்களை இயக்கியுள்ளார் இயக்குநரும் நடிகர் விஜய்யின் தந்தையுமான எஸ்ஏ சந்திரசேகர். நேற்றைய தினம் உடல்நலக்குறைவால் விஜயகாந்த் காலமான நிலையில், விஜயகாந்த் குறித்த பல வீடியோக்கள் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகின்றன. அந்த வகையில் அவர் பேசும்படியான வீடியோக்கள் மற்றும் அவரின் நல்ல குணம் குறித்து மற்றவர்களின் பேட்டிகள் உள்ளிட்டவையும் ட்ரெண்டிங்கில் உள்ளன. அந்த வகையில் இயக்குநர் எஸ்ஏசி விஜயகாந்த் குறித்து பேசிய வீடியோ தற்போது அனைத்து தரப்பு ரசிகர்களாலும் பாராட்டுக்கு உள்ளாகியுள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட விஜயகாந்த், அரசியலில் இருந்தும் நடிப்பிலிருந்தும் விலகி ஓய்வு பெற்று வந்தார். 30 ஆண்டுகளை கடந்து சினிமாவில் சிறப்பான பங்களிப்பை கொடுத்துவந்த விஜயகாந்த், அரசியலிலும் முன்னணி தலைவராக இருந்தவர். இந்நிலையில் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த சில தினங்களுக்கு முன்பு மருத்துவ சிகிச்சை பெற்று வீடு திரும்பிய விஜயகாந்திற்கு மீண்டும் சுவாச பிரச்சினைகள் ஏற்பட்டது. இதையடுத்து மருத்துவமனையில் மீண்டும் அவர் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று காலை 6 மணியளவில் அவர் காலமானார்.

நடிகர் விஜயகாந்த்: வாழும் காலத்தில் பலதரப்பட்ட மக்களையும் சந்தித்தாலும் கூடுமானவரை அனைவருக்கும் நல்லதையே சிந்திக்க முடியும் என்று நிரூபித்த தலைவர்களில் முக்கியமானவராக விஜயகாந்த் காணப்பட்டார். கடந்த 1979ம் ஆண்டில் இவரது திரைப்பயணம் துவங்கியது. வசதியான குடும்பத்தை சேர்ந்தவராக இருந்தபோதிலும் சினிமாவில் நடிக்கும் ஆசையில் சென்னை வந்த விஜயகாந்த், பெரிய போராட்டங்களுக்கு பின்பு நடிக்கும் வாய்ப்பை பெற்று அதை சிறப்பாக்கியவர். வில்லனாகவே இவருடைய திரைப்பயணம் துவங்கிய போதிலும் கூடிய விரைவிலேயே ஹீரோவாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டார்.
தமிழ் படங்களில் மட்டுமே நடித்தவர்: தமிழ்ப் படங்களில் மட்டுமே நடித்தவர் என்ற பெருமைக்குரியவர் விஜயகாந்த். இவரது படங்கள் மற்ற மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு வெளியானது. இருந்தபோதிலும் தமிழ்ப்படங்களில் மட்டுமே நடித்து தன்னுடைய அழுத்தமான மற்றும் ஆக்ஷன் படங்கள்மூலம் ஏராளமான ரசிகர்களை கவர்ந்தவர் விஜயகாந்த். 30 ஆண்டுகளை கடந்த இவரது திரைப்பயணத்தில் 150க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். கடந்த சில ஆண்டுகளாகவே உடல்நிலை பாதிக்கப்பட்டு அரசியல், சினிமாவில் இருந்து ஓய்வு எடுத்துவந்த விஜயகாந்த், உடல்நலக்குறைவு காரணமாக நேற்று காலை 6 மணியளவில் காலமானார்.
இயக்குநர் எஸ்ஏசி பேட்டி: உடல்நலம் பாதிக்கப்பட்ட போதிலும் நம்முடைய தலைவர், உயிர்ப்புடன் இருப்பதாக அவரது ரசிகர்கள், தொண்டர்கள் ஆசுவாசப்படுத்தி வந்த நிலையில், நேற்றைய தினம் விஜயகாந்தின் மறைவு அனைத்து தரப்பினரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இந்நிலையில் விஜயகாந்த் குறித்த பல மகிழ்ச்சிப் பகிர்வுகளை ரசிகர்கள், பிரபலங்கள் தொடர்ந்து சமூக வலைதளங்களில் மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் பிரபல இயக்குநரும் நடிகர் விஜய்யின் தந்தையுமான எஸ்ஏசியின் விஜயகாந்த் குறித்த பேட்டி தற்போது சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
நெகிழ்ச்சியடைந்த எஸ்ஏசி: விஜயகாந்த் -எஸ்ஏசி கூட்டணியில் வெளியான படங்கள் ரசிகர்களை அதிகமாக கவர்ந்துள்ளன. அந்த வகையில் தன்னுடைய மகன் விஜய்யை வைத்து செந்தூரப்பாண்டி என்ற படத்தை இயக்கினார் எஸ்ஏசி. அந்தப் படத்தில் முக்கியமான கேரக்டரில் விஜயகாந்த் நடித்தால், தன்னுடைய மகனுக்கு சிறப்பான கவனம் கிடைக்கும் என்று நினைத்த எஸ்ஏசி, அவரை பார்க்க அப்பாயின்மெண்ட் கேட்டுள்ளார். ஆனால் விஜயகாந்த் உடனடியாக எஸ்ஏசியை சந்திக்க அவரது வீட்டிற்கே வந்துள்ளார். இதனால் நெகிழ்ச்சியடைந்த எஸ்ஏசி, செந்தூரப்பாண்டி படத்தில் நடிப்பது குறித்து கேட்டுள்ளார்.
வீட்டை ரிஜிஸ்டர் செய்த எஸ்ஏசி: உடனடியாக அவருக்கு ஓகே சொன்ன விஜயகாந்த், எப்பொழுது சூட்டிங் என கேட்டுள்ளார். இரு மாதங்களில் சூட்டிங் என தெரிவித்த எஸ்ஏசி, சம்பளம் குறித்து கேட்டுள்ளார். அதற்கு பதிலளித்த விஜயகாந்த், சம்பளம் எல்லாம் வேண்டாம் என்று கூறியது குறித்து தற்போது எஸ்ஏசி நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார். தொடர்ந்து தான் ஒரு லட்சத்தை எடுத்துக் கொண்டு, சில தினங்கள் கழித்து விஜயகாந்தை சந்தித்ததாகவும் அவர் அதை ஏற்க மறுத்துவிட்டதாகவும் எஸ்ஏசி தனது பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து விஜயகாந்த் வீட்டிற்கு பக்கத்தில் இருந்த தன்னுடைய பழைய வீடு ஒன்றை அவரது பேருக்கு எஸ்ஏசி ரிஜிஸ்டர் செய்துள்ளார்.
கோபப்பட்ட விஜயகாந்த்: அவரிடம் கொடுத்தால் விஜயகாந்த் அதை வாங்க மாட்டார் என்பது தெரிந்து, அவரது மனைவி பிரேமலதாவிடம் தான் அதை கொடுத்துவிட்டு வந்ததாகவும் இந்த விஷயம் கேள்விபட்டு விஜயகாந்த் தன்னிடம் கோபப்பட்டதாகவும் தன்னை இழிவுப்படுத்திவிட்டதாக ஆவேசப்பட்டதாகவும் எஸ்ஏசி தன்னுடைய பேட்டியில் கூறியுள்ளார். தன்னுடைய வெற்றிப்படங்களை இயக்கிய எஸ்ஏசிக்கு பிரதி உபகாரணமாக விஜயகாந்த் செயல்பட்டதை எஸ்ஏசி அந்த பேட்டியில் நெகிழ்ச்சியுடன் நினைவு கூர்த்துள்ளார்.


Click it and Unblock the Notifications











