200 கோடியை விட்டுட்டு வரார்.. விஜய்யின் தைரியமான முடிவு..சமுத்திரக்கனி பேச்சு!
சென்னை: ஒரு படத்திற்கு ரூ.200 கோடி சம்பளம் வாங்கும் விஜய், நான் இனிமேல் நடிக்கவில்லை, மக்கள் சேவை செய்ய வருகிறேன் என்று சொன்னது எனக்கு ரொம்ப பிடித்து இருந்தது. நான் நிறைய மனிதர்களை கடந்து வந்து இருக்கிறேன், யாருமே அந்த மாதிரி ஒரு முடிவை எடுக்கவில்லை அவரின் இந்த தைரியத்தை நான் பாராட்டுகிறேன் என்று சமுத்திரக்கனி கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவில் மிகவும் முக்கிய நடிகராக வலம் வருகிறார் தளபதி விஜய், தமிழக வெற்றிக் கழகம் என்கிற அவருடைய கட்சிப் பெயரை அறிவித்துள்ளார். வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் களம் இறங்காமல், 2026ஆம் ஆண்டு நடக்கவிருக்கும் தமிழக சட்டமன்ற தேர்தலில் விஜய் களமிறங்க இருக்கும் நிலையில், இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் அவருடைய 69வது படமான கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தில் நடித்து வருகிறார். அடுத்ததாக கமிட்டான ஒரு படத்தை முடித்த பிறகு முழு நேர அரசியல் களத்தில் ஈடுபடவிருப்பதாக அறிவித்திருக்கிறார் விஜய்.

சமுத்திரக்கனி: இந்நிலையில், சமுத்திரக்கனி சொந்த ஊரில் மாரியம்மன் கோவில் திருவிழாவில் கலந்து கொண்டார். அப்பகுதி மக்களுக்கு தனது கைகளால் உணவளித்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஐந்து ஆண்டுக்கு பிறகு, இங்கு வருவதற்கு ஒரு அற்புதமான வாய்ப்பு எனக்கு கிடைத்தது. கடவுள் எனக்கு அதற்கு ஒரு வழியை ஏற்படுத்திக் கொடுத்தார். இதையடுத்து, சாமி தரிசனத்திற்காக வந்து இருக்கிறேன் ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கு. இந்த மகிழ்ச்சியை கடவுள் ஒவ்வொரு ஆண்டும் எனக்கு கொடுக்க வேண்டும் என்று இறைவனிடம் வேண்டிக்கொள்கிறேன் என்றார்.
தைரியமான முடிவு: இதையடுத்து விஜய் அரசியலுக்கு வருவது குறித்து செய்தியாளர் கேள்வி எழுப்ப அதற்கு பதில் அளித்த அவர், யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம் என்ன வேண்டுமானாலும் செய்யலாம். இது ஒரு கடல் நடிக்க வேண்டும் என்றால் நடிக்கலாம், சேவை செய்ய வேண்டும் என்றால் சேவை செய்யலாம். தற்போது விஜய் எடுத்திருக்கும் முடிவு, எனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. ஏன் என்றால், அவர் ஒரு படத்திற்கு ரூ.200 கோடி சம்பளம் வாங்குகிறார். அவர், நான் இனிமேல் நடிக்கவில்லை, மக்கள் சேவை செய்ய வருகிறேன் என்று சொன்னது எனக்கு ரொம்ப பிடித்து இருந்தது.
அவரின் கனவு நிறைவேறும்: நான் நிறைய மனிதர்களை கடந்து வந்து இருக்கிறேன், யாருமே அந்த மாதிரி ஒரு முடிவை எடுக்கவில்லை. பல நடிகர்கள் அரசியலுக்கு வந்து இருக்கிறார்கள் போய் இருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் சினிமாவை பிடித்துக்கொண்டு தான் செய்து இருக்கிறார்கள். அவர் எடுத்த தைரியமான முடிவு எனக்கு பிடித்து இருந்தது. அவரின் அடுத்த அடுத்த செயல்பாடுகளை வைத்துத்தான், அவர் எந்த மாதிரி அரசியலில் ஈடுபடப்போகிறார் என்பது நமக்கு தெரியும், கண்டிப்பாக அவரது கனவு நிறைவேற நான் இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன் என்றார்.
மக்கள் முடிவு செய்வார்கள்: தொடர்ந்து பேசிய அவர் நாடாளுமன்ற தேர்தல் வர உள்ளது. மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும் அது மக்கள் கையில் தான் இருக்கு. மேலும் மக்கள் மிகவும் அற்புதமானவர்கள் அவர்களுக்கு எப்போது யாரை அழைத்து வர வேண்டும், எப்போது யாரை அனுப்பி வைக்க வேண்டும் என்பது நன்றாக தெரியும். யார் வெற்றி பெற்றாலும் அவர்கள் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்றார் சமுத்திரக்கனி.


Click it and Unblock the Notifications











