H.Vinoth - யோவ் துணிவு படத்தை கழுவி ஊத்துறாங்க.. இயக்குநர் சொன்னதுக்கு ஹெச்.வினோத் ரியாக்ஷன் என்ன தெரியுமா?
சென்னை: H Vinoth Bithday (ஹெச்.வினோத் பிறந்தநாள்) ஹெச்.வினோத் இன்று தனது 42ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அதனையொட்டி கத்துக்குட்டி இயக்குநர் சுவாரஸ்ய தகவல் ஒன்றை பகிர்ந்திருக்கிறார்.
பார்த்திபன், ராஜுமுருகன், விஜய் மில்டன் ஆகியோரிடம் உதவி இயக்குநராக இருந்து சதுரங்க வேட்டை படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் ஹெச்.வினோத். முதல் படத்திலேயே சென்சிட்டிவான சப்ஜெக்ட்டை கையில் எடுத்து அதை மிக நேர்த்தியாக படமாக்கினார். படத்தில் இடம்பெற்ற வசனங்களும், காட்சியமைப்பும் அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது. முதல் படத்திலேயே தான் எவ்வளவு தேர்ந்த இயக்குநர் என்பதை அவர் நிரூபித்துவிட்டதால் அவரது படங்கள் மீது ஒரு எதிர்பார்ப்பு எழ ஆரம்பித்தது.

தீரன்: அந்தப் படத்துக்குப் பிறகு கார்த்தியை வைத்து தீரன் அதிகாரம் ஒன்று படத்தை இயக்கினார். உண்மை சம்பவங்களை அடிப்படையாக வைத்து உருவாகியிருந்த அந்தப் படம் மெகா ஹிட்டானது. அதேசமயம் காவல் துறையினர் என்கவுன்ட்டர் செய்வதையும், காவல் துறையையும் வினோத் ரொம்பவே புகழ்ந்திருக்கிறார் என்ற சர்ச்சையும் எழுந்தது. அதை காலப்போக்கில் அவரும் புரிந்துகொண்டு இனி இவ்வாறு படம் செய்ய மாட்டேன் என்றும் கூறினார்.
அஜித்துடன் கூட்டணி: முதல் இரண்டு படங்கள் மெகா ஹிட்டானதையடுத்து அஜித்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது வினோத்துக்கு. ஆனால் அஜித்துடன் இணைந்த முதல் படம் தனது சொந்த கதையாக இல்லாமல் பிங்க் படத்தை ரீமேக் செய்தார் வினோத். அப்படி ரீமேக் செய்யப்பட்ட நேர்கொண்ட பார்வை படம் கலவையான விமர்சனங்களை பெற அடுத்ததாக வலிமை படத்தை இயக்கினார்.
துணிவு: சூழல் இப்படி இருக்க துணிவு படத்தை அஜித்தை வைத்து இயக்கினார் ஹெச்.வினோத். வங்கிக் கொள்ளையையும், வங்கி மக்களிடம் அடிக்கும் கொள்ளையையும் அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டிருந்த படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மெகா ஹிட்டானது. இந்தப் படத்தை தொடர்ந்து அவர் கமல் ஹாசனை வைத்து படம் இயக்கவிருக்கிறார்.
இயக்குநர் பதிவு: இந்நிலையில் வினோத்தி நண்பரும் கத்துக்குட்டி, உடன்பிறப்பே உள்ளிட்ட படங்களின் இயக்குநருமான சரவணன் வினோத் பிறந்தநாளையொட்டி ஒரு சுவாரஸ்ய தகவலை பகிர்ந்திருக்கிறார். அவர் தனது முகநூல் பக்கத்தில், "அ.வினோத் என்கிற அரக்கன்!
அஜீத் சாரின் 'துணிவு' ரிலீஸான நேரம். இயக்குநர் வினோத்துடன் சபரிமலையில் இருந்தோம். நல்ல கூட்டம் என்பதால், அருகே ஓர் அறை எடுத்துத் தங்கினோம். 'துணிவு' படம் குறித்த ரிசல்ட் பாஸிடிவ்வாக வந்தாலும், விமர்சனம் குறித்து தெரிந்துகொள்ள அவ்வளவு ஆவல்.
சபரிமலையில் கவரேஜ் கிடைக்கவில்லை. 'திங்க் மியூஸிக்' சந்தோஷ் ஒரு பக்கம், நான் ஒரு பக்கம் என கவரேஜ் தேடி ஓடிக்கொண்டு இருந்தோம். 'படம் பக்கா...' என விமர்சனங்கள் வர, அறைக்கு ஓடி வந்தேன். கையைத் தலையணை போல் வைத்துக்கொண்டு, கால் நீட்டித் தூங்கிக் கொண்டிருந்தார் வினோத்.
"யோவ் நீயெல்லாம் மனுஷனாய்யா..." என எழுப்பினேன். நல்ல உறக்கத்தில் இருந்த வினோத் சலித்தபடி நிமிர்ந்தார்.
படத்தை கழுவி ஊத்துறாங்க: "படத்தைக் கழுவிக் கழுவி ஊத்துறாங்க... நீங்க தூங்கிட்டு இருக்கீங்க?" "ஊத்தட்டும் விடுய்யா..." என்றபடி மீண்டும் படுத்துக் கொண்டார். "ஐயோ, நண்பா... படம் சூப்பர்னு கொண்டாடுறாங்க..." என்றேன். "சரிய்யா..." - எழாமலே பதில் சொல்லித் தூக்கத்தைத் தொடர்ந்தார். 'திங்க் மியூஸிக்' சந்தோஷ் வந்து ஆளைப் புரட்ட, அப்போதும் வேண்டா வெறுப்பாகத்தான் எழுந்தார்.
ஒன்னும் பண்ண முடியாது: "நாம செய்ய வேண்டிய வேலையைச் செஞ்சுட்டோம். படம் நல்லா இருந்தாலும் இல்லாட்டியும் இனி நம்மளால ஒண்ணும் பண்ண முடியாது. வாழ்த்தினாலும் வறுத்தாலும் ஏத்துக்கத்தான் வேணும்..." என்றார். அறிவில், தெளிவில் அப்படியோர் அரக்கன் வினோத். எவராலும் சலனப்படுத்த முடியாத சக்தி. 'நல்லதும் கெட்டதும் நமக்குள்தான்' என்று இயங்குகிற அபூர்வனுக்கு இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துகள்" என குறிப்பிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











