லஞ்சம் கொடுக்காதே நான் இருக்கிறேன்.. இப்படியொரு முதலமைச்சர் கிடைச்சிருக்காரு.. சீனு ராமசாமி ட்வீட்!
சென்னை: தொடர்ந்து விஜய் அரசை பாராட்டி வருகிறார் இயக்குநர் சீனு ராமசாமி. கரூரில் நேற்று முதலமைச்சர் விஜய் பேசிய பேச்சுக்களை எதிர்கட்சிகள் ட்ரோல் செய்து வருகின்றனர். மீடியாக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், கண்டனங்களும் குவிந்து வருகிறது. இந்நிலையில், முதலமைச்சர் விஜய்யை சந்தித்து போட்டோ எடுத்த பல பிரபலங்களும் அதன் பின்னர் சைலன்ட் மோடுக்குச் சென்ற நிலையில், சீனு ராமசாமி ஆதரவு கருத்து தெரிவித்து பாராட்டியுள்ளார்.
விஜய் சேதுபதியை ஹீரோவாக்கி அழகு பார்த்த சீனு ராமசாமி விஜய் முதலமைச்சராக மாறியதில் இருந்தே அவரது பேச்சுக்களை உற்று கவனித்து அதுதொடர்பான தனது கருத்துக்களையும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்.

புதிதாக பதவி ஏற்றுள்ள விஜய் அரசு செயல்பாடு குறித்து வெறும் வன்மத்தை மட்டுமே பலரும் சோஷியல் மீடியாவில் கக்கிக் கொண்டிருக்கும் நிலையில், சீனு ராமசாமி போன்ற இயக்குநர்கள் பாராட்டி பேசி வருவது விஜய் ரசிகர்களை குஷியில் ஆழ்த்தியுள்ளது.
லஞ்சம் கொடுக்காதீங்க: கரூரில் கூட்ட நெரிசலில் உயிரிழந்த குடும்பங்களை சந்தித்து அவர்களுக்கு அரசு வேலை கொடுக்கும் நிகழ்ச்சியில் நேற்று முதலமைச்சர் விஜய் பங்கேற்று பேசிய போது "உங்க கிட்ட யாராவது லஞ்சம் கேட்டார்கள் என்றால் இது எங்க புள்ள, எங்க அண்ணன், எங்க தம்பி விஜய் ஆட்சி நடக்குது, விஜி ஆட்சி நடக்குது. ஒரு பைசா கூட லஞ்சம் கொடுக்க முடியாதுன்னு சொல்லுங்க" என முதலமைச்சர் பேசியது பலரையும் ஈர்த்துள்ளது.
இப்படியொரு முதலமைச்சர் கிடைச்சிருக்காரு: இந்நிலையில், விஜய்யின் அந்த பேச்சுக் குறித்து இயக்குநர் சீனு ராமசாமி ஒரு ட்வீட்டை பதிவிட்டுள்ளார்.
"லஞ்சம் கொடுக்காதே
நான் இருக்கிறேன்."
எளியோர்களின் பெருமூச்சையும் நம்பிக்கையையும் தட்டி எழுப்புகிறது மாண்புமிகு முதல்வரின் இந்த வாக்கு.
ஒரு அதிகாரம் தன் குடிமக்களுக்குத் தரும் மிகச்சிறந்த பாதுகாப்பு இதுதான்.
ஆனால், இந்த வெளிச்சம் நிலைக்க வேண்டுமானால் நாமும் மாற வேண்டும்.
லஞ்சம் என்பது நம் சமூகத்தின் நோய். கொடுப்பதும் வாங்குவதும் ஒன்றுதான்.
இதை உணர்ந்தாலே நேர்மையான பாதை தெளிந்துவிடும்.
ஒளி பிறக்கட்டும்.
#ஊழலற்றதமிழ்நாடு" என சீனு ராமசாமி போட்ட போஸ்ட் வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications