பார்ட் 2 படமே எடுக்க கூடாதுனு சொல்பவர்களுக்கு ஞானமே இல்லை.. சந்தான பாரதியை தாக்கிய சீனுராமசாமி!
சென்னை: வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி, மஞ்சுவாரியர் நடிப்பில் கடந்த 2023ஆம் ஆண்டு வெளிவந்து வெற்றியடைந்த படம் விடுதலை. இப்படத்தின் இரண்டாம் பாகத்திற்காக ரசிகர்கள் அனைவரும் காத்துக்கொண்டு இருந்த நிலையில், நேற்று பிரம்மாண்டமான முறையில் விடுதலை இரண்டாம் பாகம் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. இத்திரைப்படம் முதல் நாளிலேயே உலகளவில் ரூ. 12 கோடி வசூல் செய்துள்ளது.
இத்திரைப்படத்தின் சிறப்பு காட்சியை பார்த்த இயக்குநரும், தயாரிப்பாளருமான சந்தான பாரதி தமிழ் சினிமாவில் பார்ட் 2 படமே எடுக்க கூடாது என்று கருத்து தெரிவித்து இருந்தார். விடுதலை பார்ட் 2 படத்தை பார்த்துவிட்டு வெளியே வந்த இயக்குநர் சந்தான பாரதியிடம் செய்தியாளர், குணா பார்ட் 2 எப்போது வரும் என்று கேட்டார். குணா ஒரு நல்ல படம் அதை ஏன் பார்ட் 2 எடுத்து கெடுக்க வேண்டும். பார்ட் 2 படம் எடுக்க வேண்டும் என்றால், அதற்கு ஏற்ற கதை, நடிகர்கள் இருக்க வேண்டும் அப்போது தான் பார்ட் 2 எடுக்கலாம். ஒரு கிளாசிக் படத்தின் பார்ட் 2 படத்தை எப்போதும் எடுக்கவே கூடாது. அதை அப்படியே விட்டுவிட வேண்டும். பார்ட் 2 படம் எடுத்து அதனுடைய மரியாதையை கெடுத்துவிடக்கூடாது என்று விடுதலை இரண்டாம் பாகத்தை மறைமுகமாக தாக்கி பேசி இருந்தார்

ஞானம் இல்லை: இதற்கு பதில் அளித்த சீனு ராமசாமி இரண்டாம் பாகம் வேண்டாம் என்று சொல்பவர்களுக்கு, ஞானம் இல்லை என்று அர்த்தம், இன்னும் சொல்லப் போனால் முழுக்க முழுக்க சினிமாவைப் பற்றி ஒன்றும் தெரியவில்லை என்று அர்த்தம். உலகம் முழுவதும், காட்பாதர் என்கிற படத்தை எடுத்துக் கொண்டால், இந்த படத்தின் மூன்று சீக்குவன்ஸ் இருக்கிறது. எப்படி பிரசித்தி பெற்ற படங்களை அடுத்தடுத்த முறையினர் பார்த்து ரசிக்க தயாராக இருக்கிறார்கள். அப்படி இருக்கும்போது பார்ட் 2 படங்களை நாம் வரவேற்று தான் ஆக வேண்டும். சிலர் ஒரு படத்தை பெரியதாக எடுத்துவிட்டு, அதை இரண்டு படங்களாக வெட்டி பார்ட் 1, பார்ட் 2 படமாக வெளியிடுகின்றனர். அதில் எனக்கு உடன்பாடு இல்லை. ஆனால் உண்மையான பார்ட் 2 வரக்கூடாது என்று சொல்லுபவர்களுக்கு சினிமா தெரியவில்லை என்று தான் சொல்ல வேண்டும், அவர்களை பற்றி நமக்கு கவலையில்லை என்று இயக்குநர் சீனு ராமசாமி தெரிவித்துள்ளார்.
சந்தான பாரதி: தமிழ் சினிமாவின் மிகவும் முக்கியமானவர்களில் சந்தான பாரதியும் ஒருவர். இவர் நடிகராகவும், இயக்குநராகவும், தயாரிப்பாளராகவும் இருந்துள்ளார். பன்னீர் புஷ்பங்கள், மது மலர், மெல்ல பேசுங்கள், நீதியின் நிழல், என் தமிழ் என் மக்கள், காவலுக்கு கெட்டிக்காரன்,கடமை கண்ணியம் கட்டுப்பாடு, சின்ன மாப்பிள்ளை, மகாநதி, வியட்நாம் வீடு ஆகிய படங்களை இயக்கியுள்ளார். இதில் கமல்ஹாசன் நடித்த மகாநதி, குணா இரண்டு படங்களுமே தமிழ் சினிமா மறக்கமுடியாத திரைப்படங்கள் ஆகும். அதிலும் குறிப்பாக குணா திரைப்படத்தின் கண்மணி அன்போடு பாடலை இன்றைய இளசுகளும் கொண்டாடி வருகின்றனர். கமலின் நெருங்கிய நண்பரான இவர் விக்ரம் படத்தில் ஏஜென்ட் உப்பிலியப்பன் என்கிற கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











