சூர்யா மீது அவதூறு பரப்பாதீர்கள்.. பாதுகாப்பே இல்லை.. கங்குவாவுக்காக களத்தில் குதித்த இயக்குநர்
சென்னை: கங்குவா திரைப்படம் கடந்த 14ஆம் தேதி வெளியாகி மோசமான விமர்சனத்தை பெற்றது. சிவா இயக்கிய அண்ணாத்த படத்தைவிடவும் இந்தப் படம் மோசமாக இருக்கிறதென தொடர்ந்து ரசிகர்கள் கூறிவருகிறார்கள். அதேசமயம் இதுவரை 127 கோடி ரூபாய் வசூலித்திருப்பதாக படக்குழு தரப்பில் அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதேபோல் சூர்யாவின் மனைவி ஜோதிகாவும் கங்குவா படத்துக்கு ஆதரவு தெரிவித்திருக்கிறார். இந்நிலையில் இயக்குநர் சீனு ராமசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் சூர்யா குறித்து கருத்து தெரிவித்திருக்கிறார்.
சிவா இயக்கத்தில் கங்குவா திரைப்படம் கடந்த 14ஆம் தேதி வெளியானது. ஞானவேல் ராஜா தயாரிப்பில் சூர்யா ஹீரோவாக நடித்திருந்த அந்தத் திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்போடு வெளியானது. மேலும் சூர்யாவின் கரியரில் ஹை பட்ஜெட்டில் உருவாகியிருக்கும் படமும் இது என்பது குறிப்பிடத்தக்கது. இதனாலும் இப்படத்தின் மீது ஆவல் ரசிகர்களிடையே அதிகரித்தது. ஆனால் படத்துக்கு மிகப்பெரிய நெகட்டிவ் விமர்சனங்களே கிடைத்திருக்கிறது. அதுமட்டுமின்றி கடுமையான ட்ரோலையும் படம் சந்தித்திருக்கிறது.

வசூல் என்ன?: படம் விமர்சன ரீதியாக பலத்த அடி வாங்கியிருக்கிறது. அதேபோல் வசூலிலும் படம் டல் அடித்ததாகவே பாக்ஸ் ஆஃபிஸ் வட்டாரத்தில் பேசப்பட்டது. இதனால் சூர்யாவின் ரசிகர்கள் கொஞ்சம் அப்செட்டாகினர். ஆனால் நேற்று படக்குழு ஒரு அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி படம் வெளியாகி 127 கோடி ரூபாய் வசூலித்திருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. எனவே அப்செட்டான ரசிகர்கள் கொஞ்சம் மகிழ்ச்சியடைந்திருக்கின்றனர். இருந்தாலும் படத்தை இன்னும் கொஞ்சம் நன்றாகவே செய்திருக்கலாம் என்ற கருத்து ஓயவில்லைதான்.
ஜோதிகா கருத்து: அதேசமயம் கங்குவா மீது வேண்டுமென்றே எதிர்மறை விமர்சனங்கள் வைக்கிறார்கள் என ஜோதிகாவும் காட்டமாக தெரிவித்திருந்தார். அவர் நேற்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், "முழுமையான மூன்று மணி நேரத்திலிருந்து முதல் அரைமணி நேரம் சரியில்லைதான். இருந்தாலும் இது ஒரு முழுமையான சினிமா அனுபவம். தமிழ் சினிமாவில் இதுவரை கண்டிராத கேமரா வேலையை ஒளிப்பதிவாளர் வெற்றி செய்திருக்கிறார். ஊடகங்கள் மற்றும் சிலரின் நெகட்டிவ் விமர்சனங்கள் எனக்கு ஆச்சரியத்தை கொடுக்கிறது. பெரிய பட்ஜெட் படங்களில் பெண்களை பின் தொடர்வது, இரட்டை அர்த்த வசனங்கள் பேசுவது போன்ற படங்களுக்கு இந்த அளவு நெகட்டிவ் விமர்சனங்களை அவர்கள் கொடுக்கவில்லை.
கங்குவா பாசிட்டிவ்: படத்தின் இரண்டாம் பாதியில் பெண்களின் ஆக்ஷன் காட்சி போன்ற பாசிட்டிவ்களை விமர்சகர்கள் மறந்துவிட்டார்கள் என்று நினைக்கிறேன். 3டி தொழில்நுட்பம் உள்ளிட்டவைகளில் படக்குழு எடுத்துக்கொண்ட முயற்சிக்கு கைதட்டல் கிடைத்திருக்க வேண்டும். ஆனால் முதல் நாள் முதல் ஷோ முடிவதற்கு முன்பாகவே கங்குவாவுக்கு எதிர்மறையான விமர்சனங்கள் வந்தன. அதை நினைத்து வருத்தமாக இருக்கிறது. கங்குவா டீம் பெருமையாக இருங்கள். நெகட்டிவ் விமர்சனங்கள் தெரிவிப்பவர்கள் சினிமாவை உயர்த்துவதற்காக வேறு எதையும் செய்யவில்லை" என்று தெரிவித்திருந்தார்.
சீனு ராமசாமி ட்வீட்: இதற்கிடையே சூர்யா மீது ஒருதரப்பினர் தனிப்பட்ட ரீதியில் அவதூறு பரப்புகிறார்கள் என்ற பேச்சுக்களும் எழுந்தன. இந்நிலையில் இயக்குநர் சீனு ராமசாமி தனது ட்விட்டர் பக்கத்தில், "திரைப்பட விமர்சனம் செய்வது என்பது அவரவர் சுதந்திரம். கல்வி பணிக்கு வெகு காலம் நன்மை செய்துவரும் சூர்யா, சிவக்குமார் போன்றவர்களை தனிப்பட்ட அவதூறு செய்வது என்பது மிகவும் வருத்தத்தை தருகிறது. திரைத்துறைக்கும் அதனை சார்ந்த ஏனைய தொழில் முனைவோர்களுக்கும் பாதுகாப்பற்ற தன்மையை இது உணர்த்துகிறது" என்று குறிப்பிட்டிருக்கிறார்.


Click it and Unblock the Notifications











