குபேராவில் உள்ள குறைகள்.. சேகர் கம்முலா கோட்டை விட்டது எங்கே?.. தனுஷ் மட்டும் இல்லைன்னா?
சென்னை: தனுஷ், நாகார்ஜுனா மற்றும் ராஷ்மிகா மந்தனா என 3 பேரும் இந்த படத்தில் போட்டிப் போட்டு நடித்துள்ளனர். குபேரா படத்தை பார்க்க தூண்டுவதே இவர்கள் மூன்று பேரின் நடிப்பு தான். கதையாக சேகர் கம்முலா உருவாக்கிய லைன் ரொம்பவே புதிதாக இருந்த நிலையில், ஆரம்பத்தில் ரசிகர்களை முதல் பாதியில் படத்தை ரொம்பவே ரசிக்க வைத்தது. ஆனால், 2ம் பாதியில், படத்தின் வேகம் மொத்தமாக குறைந்து ஒரே இடத்தில் மாட்டிக் கொண்டது தான் குபேரா படத்தில் உள்ள பெரிய குறை என்று சொல்லலாம்.
தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் உருவாக்கப்பட்ட குபேரா திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியான நிலையில், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. படத்தை பார்க்க ஆசையாக தியேட்டருக்கு சென்றவர்களுக்கு தனுஷ் மற்றும் நாகார்ஜுனாவின் நடிப்பே போதுமானதாக இருக்கும் என்பதில் எந்தவொரு மாற்றுக் கருத்தும் இல்லை.

ஆனால், இந்த படத்தின் 2ம் பாதியை இன்னமும் செதுக்கி சேகர் கம்முலா இயக்கியிருந்தால், இந்திய சினிமாவே திரும்பிப் பார்க்கக் கூடிய ஒரு பெருமைமிகு படைப்பாக குபேரா அமைந்திருக்கும். ஆனால், அது அமையவில்லை என்பது மட்டுமே பெரிய வருத்தமாக உள்ளது.
குபேராவின் நிறைகள்: தனுஷ் பிச்சைக்கார தேவாவாக அப்படியே வாழ்ந்திருக்கிறார். ஆரம்பத்தில் அவரை காட்டும் போதே, அவருடைய உடல்மொழி எல்லாம் அப்படியே அச்சு அசல் பிச்சைக்காரனை போலவே இருந்தது ரசிகர்களை வியப்பில் ஆழ்த்துகிறது. அதே போல நடிகர் நாகர்ஜுனா தீபக் எனும் கதாபாத்திரத்தில் கச்சிதமாக பொருந்தி போகிறார். அவர் நல்லவரா, கெட்டவரா என்று கண்டு பிடிக்கவே முடியாத அளவுக்கு பணக்காரர்களுக்காக பணியாற்றும் ஒரு சுயநல அதிகாரியாகவே நடித்துள்ள விதம் அட்டகாசம். ராஷ்மிகா மந்தனா இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக இல்லாமல், ஒரு வழித்துணையாக படம் முழுக்க பயணிப்பதும் புதுசாகவே உள்ளது. நானும் ஒரு பிச்சைக்காரி தான் என ராஷ்மிகா மந்தனா சொல்லும் அந்த ஒரு காட்சி போதும், அவருக்கான ஸ்பேஸை அவர் சரியாக கையாண்டு விளையாடியுள்ளார் என்று தான் சொல்ல வேண்டும். அந்த குப்பை வண்டியில் தனுஷ் உடன் செல்வது, குப்பைக் கிடங்கில் உருண்டு புரள்வது என தத்ரூபமாக நடித்துள்ளார்.

குபேராவின் குறைகள்: குபேரா படத்தில் ரசிகர்களை திருப்திப்படுத்தும் அளவுக்கு நிறைகள் இருக்கிறதோ அதைவிட சற்று அதிகமாக குறைகளும் இருப்பது தான் அந்த படத்திற்கு மிகப்பெரிய பின்னடைவாக மாறி நிற்கிறது. ஒரு முழுமையான பிளாக்பஸ்டர் படமாக வந்திருக்க வேண்டிய குபேராவில் இயக்குநர் சேகர் கம்முலா பல இடங்களில் கோட்டை விட்டது தான் இதற்கு காரணம் என்கின்றனர். குறிப்பாக படத்தின் முதல் பாதியில் ஒவ்வொரு கதாபாத்திரத்துக்கு தேவையான நேரத்தை எடுத்துக் கொண்டு அவர்களுடைய உலகத்தை உருவாக்கிய இயக்குநர், 2ம் பாதியில், பெரிய விஷ்யத்தை எல்லாம் விட்டு விட்டு, கார்ப்பரேட் வில்லனை பிச்சைக்காரனாக மாற்றி அழைய விட்ட காட்சிகள் தான் படத்திற்கு சொதப்பலாக மாறிவிட்டதாக பலரும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
சொதப்பிய கிளைமேக்ஸ்: நாகார்ஜுனா மற்றும் தனுஷ் இணைந்துக் கொண்டு கடைசியில் மூளைக்கு வேலை கொடுத்து சட்டத்தின் முன் வில்லனை நிறுத்தியிருந்தால், படம் வேறலெவலில் இருந்திருக்கும் என்றும் அதை விடுத்து, கிளைமேக்ஸ் காட்சியை இயக்குநர் முடித்தாக வேண்டும் என்பதற்காக அவசரம் காட்டி முடித்து விட்டது தான் அவர் செய்த பெரிய மிஸ்டேக் எனக் கூறுகின்றனர். தனுஷ் ரசிகர்கள் இந்த படத்தில் அவரது நடிப்பை கொண்டாடலாம். அடுத்ததாக தனுஷின் இட்லி கடை இந்த குறைகள் எல்லாம் இல்லாமல், ஃபுல் மீல்ஸாக அமைய வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பு.


Click it and Unblock the Notifications











