புதுப்பேட்டை 2 & ஆயிரத்தில் ஒருவன் 2 படங்கள் அவ்வளவுதானா.. என்ன செல்வராகவன் இப்படி சொல்லிட்டாரு!
சென்னை: இயக்குநர் செல்வராகவன் அடுத்தடுத்த படங்களில் முன்னணி கேரக்டர்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் அவரது தம்பியும் பிரபல நடிகருமான தனுஷ் இயக்கத்தில் வெளியான ராயன் படத்தில் முக்கியமான கேரக்டரில் நடித்திருந்தார். இந்நிலையில் அடுத்தடுத்து இவரது நடிப்பில் படங்களில் ரிலீசாகவுள்ளன.
இயக்குநராக பல வெற்றிப் படங்களை கொடுத்துவந்த செல்வராகவன் தற்போது நடிப்பே போதும் என்று செட்டிலாகிவிட்டாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. அவரது இயக்கத்தில் மாஸ் காட்டிய மயக்கம் என்ன, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன் போனற் படங்களை ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துள்ளனர். இந்தப்படங்களின் 2வது பாகத்தை அவர் இயக்குவாரா என்ற எதிர்பார்ப்பும் தொடர்ந்து வருகிறது.

இயக்குநர் செல்வராகவன்: இயக்குநர் செல்வராகவன் தன்னுடைய தம்பியும் பிரபல நடிகருமான தனுஷின் படங்களை துவக்கத்தில் இயக்கி மிகப்பெரிய கவனத்தையும் வரவேற்பையும் பெற்றவர். இவரது பல படங்கள் மிகப்பெரிய கவனத்தை பெற்றுள்ளன. அந்த வகையில் புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன போனற் படங்கள் இவரது இயக்கத்தில் வெளியான மக்களின் எவர்கிரீன் ஃபேவரிட்படங்கள். இந்தப்படங்களின் இரண்டாவது பாகத்தை ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். அடுத்தடுத்து நடிகராக படங்களில் நடித்து வருகிறார் செல்வராகவன். விரைவில் அவர் படங்களை இயக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
உத்வேகம் அளிக்கும் செல்வராகவன்: கடைசியாக தன்னுடைய தம்பி இயக்கத்தில் ராயன் படத்தில் லீட் கேரக்டரில் நடித்திருந்தார் செல்வராகவன். இந்தப் படத்தில் முதல் முறையாக தனுஷ் இயக்கத்தில் நடித்திருந்தார். இந்தப் படத்தில் தனுஷ் தன்னை இயக்குநராக ஆட்டுவித்ததாக அவர் நகைச்சுவையுடன் குறிப்பிட்டிருந்தார். அடுத்தடுத்து சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக காணப்படுகிறார் செல்வராகவன். அடிக்கடி வாழ்க்கை சார்ந்த படிப்பினைகளையும் தத்துவங்களையும் அவர் பகிர்ந்து வருகிறார். தன்னுடைய வாழ்க்கையின் கசப்பான அனுபவங்களையும் பகிர்ந்து அதிலிருந்து தான் வெளிவந்த நிகழ்வுகளையும் குறிப்பிட்டு துவண்டவர்களுக்கு உத்வேகம் அளித்துவருகிறார்.
சொர்க்கவாசல் படம்: அந்த வகையில் சமீபத்தில் தற்கொலை எண்ணத்தில் உள்ளவர்களுக்கு அறிவுரை மற்றும் ஊக்கமளிக்கும்வகையில் அவர் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். தான் 7 முறை தற்கொலைக்கு முயன்றதாகவும் ஆனால் தன்னுடைய வாழ்க்கையின் அந்த துயரத்திலிருந்து சில நாட்களிலேயே மீண்ட கதையையும் பகிர்ந்திருந்தார். அவரது இந்த வார்த்தைகள் மிகப்பெரிய கவனத்தை பெற்றன. இந்நிலையில் அடுத்ததாக ஆர்ஜே பாலாஜியுடன் இணைந்து சொர்க்கவாசல் படத்தில் நடித்துள்ளார் செல்வராகவன். இந்தப்படம் இன்னும் சில தினங்களில் ரிலீசாகவுள்ள நிலையில் நாளைய தினம் படத்தின் ட்ரெயிலர் வெளியாகவுள்ளது.
புதுப்பேட்டை 2 & ஆயிரத்தில் ஒருவன் 2 படங்கள்: இந்தப் படத்தின் பிரமோஷனில் நாயகன் ஆர்ஜே பாலாஜி, செல்வராகவன் உள்ளிட்டவர்கள் இணைந்துள்ளனர். அந்த வகையில் செல்வராகவன் கொடுத்த பேட்டியில் அவரிடம் புதுப்பேட்டை 2 மற்றும் ஆயிரத்தில் ஒருவன் 2 படங்கள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர், புதுப்பேட்டை மற்றும் ஆயிரத்தில் ஒருவன் கதைகளை வெப் தொடர்களாக உருவாக்க விருப்பம் உள்ளதாக தெரிவித்துள்ளார். இந்தக் கதைகளை வெப் தொடர்களாக எடுக்கும் பட்சத்தில் டைம் அதிகமாக கிடைக்கும் என்றும் சொல்ல நினைத்த கருத்துக்களை அழகாக கூற முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











