Selvaraghavan: என்னை வச்சி பழி வாங்கிட்டான்.. தனுஷ் குறித்து பேசிய செல்வராகவன்!
சென்னை: நடிகர் தனுஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ராயன். இந்தப் படத்தில் தனுஷ் கேமியோ கேரக்டரில் நடித்துள்ள சூழலில் அவருடன் எஸ்ஜே சூர்யா, செல்வராகவன் உள்ளிட்டவர்கள் இணைந்து நடித்துள்ளனர். தனுஷின் பல படங்களை இயக்கியுள்ள செல்வராகவன், ராயன் படம் மூலம் தனுஷ் இயக்கத்தில் இணைந்துள்ளார். இது படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது
இந்நிலையில் இந்த படத்தின் காட்சிகளை தான் டப்பிங்கின்போது பார்த்ததாகவும் தனக்கு மிகவும் பிடித்திருந்ததாகவும் தான் இயக்கியிருந்தாலும் இந்த கதையை இப்படி சிறப்பாக இயக்கியிருக்க மாட்டேன் என்று தனுஷுக்கு பாராட்டு தெரிவித்ததாகவும் செல்வராகவன் தனது சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார். அவரது இந்த பேட்டி படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி உள்ளது.

நடிகர் தனுஷ்: நடிகர் தனுஷின் ஆரம்ப கால படங்களை இயக்கியவர் அவரது அண்ணன் செல்வராகவன். அவரை சிறந்த நடிகராக உருமாற்றியதில் செல்வராகவனுக்கு மிகப்பெரிய பங்கு உள்ளது. கடந்த 2022ம் ஆண்டில் தனுஷ் நடிப்பில் நானே வருவேன் படத்தை செல்வராகவன் இயக்கியிருந்தார். இந்தப் படத்தில் தனுஷ் இரு வேறு கெட்டப்புகளில் அண்ணன், தம்பியாக நடித்து மாஸ் காட்டியிருந்தார். ஆனால் படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது. இந்நிலையில் தற்போது தனுஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள ராயன் படத்தில் செல்வராகவன் முக்கியமான கேரக்டரில் இணைந்துள்ளார்.
தனுஷ் இயக்கத்தில் செல்வராகவன்: செல்வராகவனின் கேரக்டர் போஸ்டரை முன்னதாக தனுஷ் வெளியிட்டிருந்தார். இந்தப்படம் வரும் ஜூன் மாதத்தில் ரிலீசாகவுள்ளதாக கூறப்பட்டுள்ள சூழலில் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது. இந்த படத்தில் நடித்த அனுபவம் குறித்து செல்வராகவன் தன்னுடைய அப்பாவுடன் இணைந்து பேட்டியொன்றில் பகிர்ந்துள்ளார். இந்த படத்தில் தனுஷ் தன்னை வைத்து பழி வாங்கி விட்டதாக செல்வராகவன் தெரிவித்துள்ளார். இதையடுத்து பேசிய கஸ்தூரிராஜா, முன்னதாக செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்த படங்களில் அவர் சரியாக நடிக்காத போது செட்டில் அனைவரின் முன்னிலையிலும் செல்வராகவன் அதிகமாக திட்டுவார் என்று கூறியுள்ளார்.

தனுஷை திட்டிய செல்வராகவன்: நீயெல்லாம் ஏன் நடிக்க வந்தாய், போய் உங்க அப்பாவிடம் சொல்லி படிக்க வைக்க சொல், என்று செல்வராகவன் திட்டுவார் என்றும் இதையடுத்து தன்னுடைய அம்மா மடியில் வந்து படுத்துக்கொண்டு தனுஷ் வருத்தமாக பேசுவார் என்றும் கஸ்தூரி ராஜா தெரிவித்துள்ளார். செல்வராகவன் அதிகமாக திட்டுவதாகவும் தனக்கு இந்த நடிப்பு வேண்டாம் என்றும் தனுஷ் புலம்புவார் என்றும் கஸ்தூரிராஜா தெரிவித்துள்ளார். இந்நிலையில் செல்வராகவன் தனுஷை இயக்கியதும் தற்போது தனுஷ் செல்வராகவனை இயக்கியதும் தான் எதிர்பார்க்காத ஒன்று என்று கஸ்தூரி ராஜா தெரிவித்துள்ளார்.
ரசிகர்களுக்கு சிறப்பான ட்ரீட்: இதையடுத்து பேசிய செல்வராகவன் ராயன் படத்தை தான் டப்பிங்கின்போது பார்த்ததாகவும் படம் மிகச்சிறப்பாக வந்துள்ளதாக தான் தனுஷிடம் பாராட்டு தெரிவித்ததாகவும் தெரிவித்துள்ளார். தானே இந்த கதையை இயக்கி இருந்தாலும் இந்த அளவிற்கு எடுத்திருக்க மாட்டேன் என்று கூறியதாகவும் செல்வராகவன் கூறியுள்ளார். மேலும் இந்தப் படம் ரசிகர்களுக்கு மிகப்பெரிய ட்ரீட்டாக அமையும் என்றும் அவர் தன்னுடைய உற்சாகத்தை பதிவு செய்துள்ளார்.


Click it and Unblock the Notifications











