Geetanjali: கோபத்துல தட்டு, டம்பளரை எறிவேன்.. ஆனாலும்.. செல்வராகவன் குறித்து கீதாஞ்சலி நெகிழ்ச்சி!
சென்னை: இயக்குநர் செல்வராகவன் பிரபல இயக்குநர் மற்றும் தற்போது நடிகராகவும் விஜய் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து வருகிறார். 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன் உள்ளிட்ட பல ஹிட் படங்களை கொடுத்துள்ள இவரது இயக்கத்தில் இறுதியாக நானே வருவேன் படம் வெளியானது. நடிகர் தனுஷ் இந்தப் படத்தில் இரட்டை வேடங்களில் நடித்திருந்தார்.
இயக்குநராக மாஸ் காட்டிவந்த செல்வராகவன் ஒரு கட்டத்தில் நடிகராகவும் அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். விஜய்யுடன் பீஸ்ட் படத்தில் கேமியோ ரோலில் நடித்திருந்த செல்வராகவன், தனியாக கவனம் ஈர்க்கும் வகையில் சாணிக் காயிதம், பகாசுரன் ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.

இயக்குநர் செல்வராகவன்: இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் வெளியான 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன் உள்ளிட்ட படங்கள் ஏராளமான ரசிகர்களின் எவர்கிரீன் பேவரைட் படங்கள். இந்தப் படங்களின் இரண்டாவது பாகம் குறித்த கேள்விகளை செல்வராகவன் எப்போதும் எதிர்கொண்டு வருகிறார். அந்த அளவிற்கு இந்தப் படங்கள் மிகப்பெரிய வரவேற்பை பெற்றவை. செல்வராகவன் இயக்கத்தில் இறுதியாக வெளியான படம் நானே வருவேன். இந்தப் படத்தில் செல்வராகவனின் தம்பியும் பிரபல நடிகருமான தனுஷ், இரட்டை கேரக்டர்களில் நடித்திருந்தார்.
நடிகரான செல்வராகவன்: இந்தப் படத்தை தொடர்ந்து பீஸ்ட், சாணிக்காயிதம், பகாசுரன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார் செல்வராகவன். இதில் சாணிக்காயிதம் படம் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் வெளியானது. படத்தில் கீர்த்தி சுரேஷின் அண்ணனாக செல்வராகவன் நடித்திருந்தார். தொடர்ந்து இயக்கத்தை மறந்துவிட்டாரா என்று ரசிகர்கள் கேட்கும்வகையில் அடுத்தடுத்து நடிப்பதில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார் செல்வராகவன். தற்போது தன்னுடைய தம்பி தனுஷ் இயக்கத்தில் ராயன் படத்தில் முக்கியமான கேரக்டரில் நடித்துள்ளார். இவரது கேரக்டர் போஸ்டர் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
செல்வராகவன் மனைவி பேட்டி: கடந்த 2003ம் ஆண்டில் செல்வராகவன் இயக்கிய காதல் கொண்டேன் படத்தில் தனுஷுடன் இணைந்து நடித்த சோனியா அகர்வாலை செல்வராகவன் காதலித்து திருமணம் செய்துக் கொண்டார். 4 ஆண்டுகளிலேயே இவர்களின் திருமணம் முடிவுக்கு வந்து இருவரும் பிரிந்தனர். தொடர்ந்து அடுத்த ஆண்டிலேயே தன்னிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய கீதாஞ்சலி என்பவரை காதல் திருமணம் செய்துக் கொண்டார். இவர்களுக்கு இரு மகன்களும் ஒரு மகளும் உள்ளனர். இந்நிலையில் செல்வராகவன் மீது தனக்கு காதல் ஏற்பட்ட சந்தர்ப்பம் குறித்து கீதாஞ்சலி தன்னுடைய பேட்டியொன்றில் பகிர்ந்துள்ளார்.
அதிகமான கோபம்.. புரிந்துக் கொண்டார்: இரண்டாம் உலகம் படத்திற்காக செல்வராகவன் எழுதிய ஸ்கிரிப்டை பார்த்துதான் அவர் மீது தனக்கு காதல் ஏற்பட்டதாகவும் அந்தக் காதல் நாட்கள் கடந்தாலும் ஆழமாகிக் கொண்டே செல்வதாகவும் தெரிவித்துள்ளார். தன்னுடைய முதல் பிரசவத்திற்கு பிறகு தாய்ப்பால் சரியாக சுரக்காமல் தான் அதிகமான மனஅழுத்தத்தில் இருந்ததாகவும் அதிகமாக சாப்பிட்டு உடல் எடை அதிகரித்தாகவும் தெரிவித்துள்ள கீதாஞ்சலி, அந்த நேரத்தில் கோபத்தில் தட்டு, டம்ளர் போன்றவற்றை தூக்கியெறிவேன் என்றும் அவற்றையெல்லாம் புரிந்துக் கொண்டு, செல்வராகவன் தன்னை சிறப்பாக பார்த்துக் கொண்டதாகவும் கீதாஞ்சலி தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











