Body Shaming Comedy: லஞ்சத்தை தவறுனு சொல்லும் ஷங்கருக்கு.. உருவக்கேலிகள் மட்டும் சரினு பட்டுச்சோ!
சென்னை: இயக்குநர் ஷங்கர் படத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் கடந்த 1996 ஆம் ஆண்டு வெளியான படம் இந்தியன். லஞ்சத்தை வேண்டாம் அது இந்த நாட்டின் நோய் என உரக்கப் பேசிய இந்த படத்தின் தொடக்கத்தில் இருந்து இறுதிவரை இடம்பெற்ற காமெடிகளில், குறிப்பாக கவுண்டமணி பேசும் வசனங்களில் உருவ கேலிகளும் பெண்ணை ஒரு போகப் பண்டமாக பார்க்கிற எண்ணங்களும் காட்சிக்கு காட்சி நிறைந்து காணப்படுகிறது.
ஒரு காட்சியில் நடிகர் ஓமக்குச்சி நாராயணனைப் பார்த்து, " நனைந்த டவல் மாதிரி இருக்கு உன் மூஞ்சி அதை நான் புழிந்துவிடுவேன்' என்று கூறுகிறார். உருவத்தில் மெலிந்து காணப்படுபவர்களை உருவ கேலி செய்பவர்கள் இருக்கிறார்கள். சினிமா போன்ற பெருவாரியான மக்கள் பார்க்கிற தளத்தில் இது போன்ற உருவக்கேலி ஆதிக்க மனநிலையின் வெளிப்பாடு மற்றும் இப்படி இருப்பவர்களை என்ன வேண்டுமானும் சொல்லலாம், அவர்களை எப்படி வேண்டுமானாலும் கிண்டலடிக்கலாம் என்கிற எண்ணம் கொண்டவர்களும் அதை கொண்டாடுகிறவர்கள் இப்போதும் இருப்பது வேதனைக்குரியது தான்.
மற்றொரு காட்சியில் ஆர்.டி.ஓ வாசலில், மக்களிடம் இருந்து அதிகாரிகளுக்கு லஞ்சம் மற்றும் தங்களுக்கு கமிஷன் வாங்கிக் கொண்டு இருப்பார்கள் கமல்ஹாசன் மற்றும் கவுண்டமணி. கவுண்டமணி ஒரு காட்சியில், " சந்துரு ( கமல்ஹாசன்) இந்த மாதிரி மயிலாப்பூர் தயிர் சாதத்துகிட்ட எல்லாம் ஏம்ப்பா டைமை வேஸ்ட் செய்யுற, என்றும் ஏய்.. பார்த்தசாரதி.. அதுதான் ஈர்க்குச்சியில் போட்டிருக்க கோடு சொல்லுதே" என்று கூறுகிறார். இந்த காட்சியை உருவக்கேலி கண்ணோட்டத்தோடு மட்டுமில்லாமல் ஆணாதிக்க கண்ணோட்டத்தோடும் பார்க்கவேண்டியுள்ளது.

ஒரு சமூகத்தையே: கமல் மற்றும் கவுண்டமணி வசூலிக்கும் லஞ்சம் மற்றும் கமிஷனை தட்டிக் கேட்பவராக இருக்கும் பிராமணரைத்தான், தயிர் சாதம் என்று கிண்டலடிக்கிறார்கள். இப்படி ஒரு சமூக மக்களையே கிண்டலடிக்கும் காட்சியை வைத்த இயக்குநரிடம் கேட்க வேண்டிய மற்றொரு கேள்வி, லஞ்சத்தை தவறு என தட்டிக் கேட்க ஒரு பெண் கதாபாத்திரத்தை காட்டியிருக்கலாமே? அதேபோல் தலையில் முடி கொட்டி வழுக்கை தலையுடன் இருப்பவரை பார்த்து, கண்ணு கூசுதுயா என்கிறார் கமல்.
பெண் போகப்பொருளா? : மற்றொரு காட்சியில் ஊர்மிளாவை பார்த்து கவுண்டமணி, " சம மட்டத்தில் இருந்து பார்க்கும்போது எனக்கு டங்ஸ்டன் ஆகிவிட்டது, ஆடிட்டோரியத்தில் இருந்து ஆடியன்ஸ் பார்த்தார்கள் என்றால் லுத்தான்ஸ் ஆகிவிடுவார்கள்" என்கிறார். இந்த வசனத்தைப் பேசும்போது கவுண்டமணியின் உடல்மொழி என்பது பெண்ணை போகப் பொருளாக பார்க்கும் ஆணின் உடல் மொழியை வெளிக்காட்டுவதை போல இருக்கும். மற்றொரு காட்சியில், செந்திலைப் பார்த்து, " இந்த நேரத்தில் உன் வாயில் பினாயிலை பீய்ச்சி அடித்தாலும் கண்டுக்க மாட்டயாடா சொரித்தலையா? என்கிறார், மற்றொரு காட்சியில் செந்தில் கதாபாத்திரத்தை, "கருப்பா ஒருத்தன் இருக்கிறானா இல்லையா என்பது மாதிரி ஒரு நீர்யானை மாதிரி இருப்பான் எனக் கூறுவார்.

சரி என பட்டதா?: லஞ்சம் தவறு, அரசு அலுவலர்கள் மக்களின் சேவகர்கள் என்று அழுத்தமாக சமூக சீர்திருத்தத்தை பேசிய படத்தில் ஒருவரை உருவக்கேலி, செய்வது சரி எனவும் பெண்ணை போகப் பொருளாக பார்ப்பது சரி எனவும் எந்த இடத்தில் உணர்ந்தார்கள் என்பது கேள்விக்குரியது மட்டுமல்ல, திருத்திக் கொள்ள வேண்டியதும் கூட. இந்த கட்டுரை மிகவும் காலதாமதமாக எழுதப்பட்டிருக்கலாம், ஆனால் ஆனால் இது போன்ற காமெடிகள் இப்போது வெளியாகும் படங்களிலும் இடம்பெறுகிறது. அதே நேரத்தில் இந்த இந்தியன் போன்ற மாநில அரசு விருது வாங்கிய படத்தில் இதுபோன்ற உருவக்கேலிகள் இடம்பெற்றிருப்பது வேதனைக்குரியது தான்.


Click it and Unblock the Notifications











