ஷங்கர் காட்டில் செம மழை.. அந்நியன் படத்தை இந்தியில் ரீமேக் செய்யப் போகிறார்.. ஹீரோ யாரு தெரியுமா?
சென்னை: டோலிவுட் ஹீரோ ராம்சரணை வைத்து பிரம்மாண்ட படம் ஒன்றை இயக்கப் போகும் ஷங்கர், அடுத்ததாக ரன்வீர் சிங்கை வைத்தும் ஒரு பிரம்மாண்ட படத்தை உருவாக்க உள்ளார்.
அது தொடர்பான அதிகாரப்பூர்வ ட்வீட்டை தற்போது வெளியிட்டு தனது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தி உள்ளார்.
மேலும், விக்ரம் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய பிளாக்பஸ்டர் ஆன அந்நியன் படத்தை தழுவி இந்த படம் உருவாக போக உள்ளதாகவும் அறிவித்துள்ளார்.

கோலிவுட்டை தாண்டி
கோலிவுட்டை தாண்டி பறக்க ஆரம்பித்து விட்டார் இயக்குநர் ஷங்கர். இந்தியன் 2 படம் கிடப்பில் போடப்பட்டுள்ள நிலையில், டோலிவுட் நடிகர் ராம்சரணின் பிரம்மாண்ட படத்தை இயக்கப் போவதாக சமீபத்தில் அறிவித்த ஷங்கர், தற்போது அடுத்ததாக பாலிவுட்டின் முன்னணி நடிகரும் நடிகை தீபிகா படுகோனின் கணவருமான ரன்வீர் சிங்கை வைத்து புதிய படம் ஒன்றையும் இயக்கப் போவதாக அறிவித்துள்ளார்.

அந்நியன் ரீமேக்
கடந்த 2005ம் ஆண்டு ஷங்கர் இயக்கத்தில் விக்ரமின் வித்தியாசமான நடிப்பில் வெளியாகி இந்தியாவையே மிரட்டிய அந்நியன் படத்தை தழுவி இந்த படம் உருவாக உள்ளதாக தற்போது அதிகாரப்பூர்வமாக இயக்குநர் ஷங்கரே அறிவித்துள்ளது ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது.

ரன்வீர் சிங்
2010ம் ஆண்டு வெளியான பேண்ட் பஜா பாரத் படத்தின் மூலம் அறிமுகமான ரன்வீர் சிங், ராம் லீலா, பாஜிராவ் மஸ்தானி, பத்மாவத், சிம்பா, கல்லி பாய், 83 என ஏகப்பட்ட பிரம்மாண்ட படங்களில் நடித்துள்ளார். தற்போது ஷங்கருடன் இணைந்து அந்நியன் பட இந்தி ரீமேக்கில் நடிக்க உள்ள நிலையில், அவரது சினிமா வாழ்க்கையில் இன்னொரு உச்சமாக இந்த படம் அமையும் என்பதில் சந்தேகமே இல்லை.

ஷங்கர் ட்வீட்
பென் மூவிஸ் உடன் இணைந்து அந்நியன் படத்தின் இந்தி ரீமேக்கை உருவாக்க உள்ளேன். என்னை விட இந்த தருணத்தில் வேற யாரும் அவ்வளவு சந்தோஷமாக இருக்க மாட்டார்கள் என இயக்குநர் ஷங்கர் ரன்வீர் சிங்குடன் இருக்கும் கெத்தான புகைப்படத்தை பதிவிட்டு அசத்தி உள்ளார்.

ஷங்கர் காட்டில் மழை
ரஜினிகாந்தின் 2.0 படத்திற்கு பிறகு கமலுடன் இணைந்து இந்தியன் 2 படத்தை ஆரம்பித்த ஷங்கர், தயாரிப்பு தரப்புடன் ஏற்பட்ட மோதல் காரணமாக அந்த படத்தில் இருந்து தற்காலிகமாக விலகி உள்ளார். இந்தியன் 2 படம் மீண்டும் எடுக்கப்படுமா? என்பதே சந்தேகம் தான். இந்நிலையில், அடுத்தடுத்து ராம்சரண், ரன்வீர் சிங் என ஷங்கர் காட்டில் அதிர்ஷ்ட மழை அடிக்கிறது.

இதிலும் கியாரா தான்
பாலிவுட்டின் முன்னணி நடிகை கியாரா அத்வானி தான் ராம்சரண் - ஷங்கர் படத்தில் நடிக்க உள்ளார் என்றும், ரன்வீர் சிங் - ஷங்கர் புராஜெக்டிலும் கியாரா அத்வானி தான் ஹீரோயின் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன. ஹீரோயின் மற்றும் மற்ற நடிகர்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











