ஆறு மாசம் கூட வாழல.. கசந்த மணவாழ்க்கை.. இயக்குநர் ஷங்கர் மகளுக்கு விரைவில் இரண்டாவது திருமணம்!
சென்னை: பிரம்மாண்ட இயக்குநர் என பெயர் எடுத்த ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யா திருமணமான ஆறே மாதத்தில் கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில், தற்போது அவருக்கு இரண்டாம் திருமணத்திற்கான நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. இந்த தகவலை அதிதி ஷங்கர் உறுதிப்படுத்தி உள்ளார். இவர்களின் திருமண தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.
இயக்குநர் ஷங்கர் மற்றும் ஈஸ்வரி தம்பதியினருக்கு ஐஸ்வர்யா ஷங்கர், அதிதி ஷங்கர், அர்ஜித் ஷங்கர் என இரண்டு மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். அதில் அதிதி ஷங்கர் விருமன் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகம் ஆனார். தற்போது இவர் தொடர்ந்து பெரிய நடிகர்களின் படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.

கோலிவுட்டில் பிரமாண்ட இயக்குநராக கொண்டாடப்படும் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யா ஷங்கருக்கும், புதுச்சேரி கிரிக்கெட் அணியின் கேப்டனான ரோஹித்துக்கும் கடந்த 2022ம் ஆண்டு மகாபலிபுரத்தில் பிரம்மாண்ட திருமணம் நடைபெற்று முடிந்தது. இவர்கள் திருமணத்திற்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அவரது மகன் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தனர். இவர்களின் திருமணம் நடைபெற்றது கொரோனா காலம் என்பதால், நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே அந்த திருமண விழாவில் கலந்து கொண்டனர்.
வருத்தத்தில் ஷங்கர்: திரைபிரபலங்கள் யாரும் கலந்து கொள்ள முடியாததால், சென்னையில் திருமண வரவேற்பு நடத்தப்படும் என ஷங்கர் கூறியிருந்த நிலையில், மகளின் திருமண வரவேற்பு விழாவை மிகவும் பிரம்மாண்டமாக நடத்த திட்டமிட்டிருந்தார். இதற்காக பிரம்மாண்டமாக செட் போடப்பட்டு திருமணத்தை விட தடபுடலாக வரவேற்பு இருக்க வேண்டும் என ஏற்பாடு செய்து வந்தார். இதற்காக திரைப்பிரபலங்கள் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்களுக்கு பத்திரிக்கை கொடுக்கப்பட்ட நிலையில் வரவேற்பு நடைபெறவில்லை.
பல குற்றச்சாட்டுகள்: மேலும், வரவேற்பு நிகழ்ச்சி தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக மட்டுமே ஷங்கர் தரப்பில் இருந்து செய்தி வந்ததாக சொல்லப்பட்டது. ஷங்கரின் மகள் ஐஸ்வர்யா ரோஹித்துடன் ஆறு மாதங்கள் கூட சேர்ந்து வாழவில்லை.
சட்டப்படி பிரிந்தனர்: இந்த பிரச்சனையால் ஐஸ்வர்யா மற்றும் ரோஹித் தம்பதிகள் பிரிந்துவிட்டனர். திருமணமான மகிழ்ச்சியில் இருந்த ஐஸ்வர்யா மனம் நொந்துபோய் மீண்டும் பெற்றோருடனே வாழ்ந்து வந்தார். இதையடுத்து சட்டப்படி விவாகரத்து பெற்றார். குடும்பத்தில் இப்படி ஒரு பிரச்சனை நடந்து கொண்டு இருந்த போதும், ஷங்கர் அதை மனதில் போட்டு புதைத்துக்கொண்டு படப்பிடிப்பில் கவனம் செலுத்தினார்.
இரண்டாம் திருமணம்: இப்போது, ஷங்கர் தனது மகள் ஐஸ்வர்யாவிற்கு இரண்டாவது திருமணம் செய்து வைக்க உள்ளார். இந்த விஷயத்தை ஷங்கரின் இரண்டாவது மகள், நடிகை அதிதி ஷங்கர் உறுதிப்படுத்தியுள்ளார். அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஐஸ்வர்யா மற்றும் மாப்பிள்ளை புகைப்படங்களைப் பகிர்ந்து, இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் முடிந்து விட்டதாகக் கூறியிருக்கிறார். மாப்பிள்ளை தருண் கார்த்திகேயன் உதவி இயக்குநராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. விரைவில் திருமணம் குறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











