ராம்சரண் படத்தை டைரக்ட் செய்ய ஜரூராக தயாராகும் இயக்குநர் ஷங்கர்... செப்டம்பரில் சூட்டிங்
சென்னை : நடிகர் ராம்சரணை வைத்து அடுத்ததாக படம் இயக்கவுள்ளார் இயக்குநர் ஷங்கர்.
இந்த படத்தின் சூட்டிங் வரும் செப்டம்பரில் துவங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தில் ராஜூ தயாரிக்கவுள்ள இந்த படம் அவரது 50வது படம் என்பதால் முன்னதாக ஆகஸ்ட் மாதத்தில் படத்தின் பூஜையை பிரம்மாண்டமாக நடத்த அவர் முடிவு செய்துள்ளார்.

ஷங்கருக்கு தடைவிதிக்க மறுப்பு
இந்தியன் 2 படத்தை முடித்துக் கொடுத்துவிட்டு அடுத்த படங்களில் ஷங்கர் வேலை செய்ய உத்தரவிடக் கோரி லைகா நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. ஆனால் ஷங்கருக்கு தடைவிதிக்க மறுத்து நீதிபதி உத்தரவிட்டு வழக்கை தள்ளுபடி செய்தார்.

ஷங்கர் இல்லத்தில் ஆலோசனை
இதையடுத்து ஷங்கர் தற்போது உற்சாகமடைந்துள்ளார். அடுத்ததாக தில் ராஜூ தயாரிப்பில் ராம்சரண் நாயகனாக நடிக்கும் படத்தினை தற்போது இயக்கவுள்ளார். நேற்றைய தினம் ஷங்கரின் இல்லத்தில் ஷங்கர், ராம்சரண் மற்றும் தில்ராஜூ ஆகியோர் இணைந்து படம் குறித்து பல்வேறு விஷயங்களை ஆலோசனை நடத்தியுள்ளனர்.

ஷங்கருக்கு பாராட்டு
இதுகுறித்து ராம்சரண் தனது ட்விட்டர் பக்கத்தில் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். ஷங்கர் மற்றும் அவரது குடும்பத்தினர் சிறப்பான விருந்தோம்பலை மேற்கொண்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் ஆர்சி15 படத்தின் சூட்டிங்கை எதிர்நோக்கியுள்ளதாகவும் கூறியுள்ளார்.

பிரம்மாண்ட பூஜை
இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் மாதத்தில் துவங்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. தில் ராஜூவின் 50வது படம் இதுவென்பதால் ஆகஸ்ட் மாதத்தில் நடைபெறவுள்ள படத்தின் பூஜையை பிரம்மாண்டமாக நடத்த அவர் முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











