நடிகர் ஆகும் ஷங்கர் மகன்.. விஜய்யை இயக்கிய டைரக்டர் படத்தில் அறிமுகம்.. யாரு அது தெரியுமா?
சென்னை: பிரமாண்ட இயக்குநர் ஷங்கருக்கு கடந்த சில ஆண்டுகளாக சினிமா வாழ்க்கையில் சொதப்பலான விஷயங்கள்தான் நடைபெற்றுக் கொண்டுள்ளது. காரணம் கடந்த ஆண்டு வெளியான இந்தியன் 2 படுதோல்வி படமாக மாறியது. இந்த ஆண்டு வெளியான கேம் சேஞ்சர் அதைவிட அடி வாங்கியது. இது மட்டும் இல்லாமல், எந்திரன் படத்தின் கதை திருட்டு குறித்த வழக்கில் சொத்துகள் முடக்கம் என அடுத்தடுத்து அடி வாங்கிக் கொண்டு உள்ளார்.
இப்படி இருக்கும்போது, இவரது சொந்த வாழ்க்கையில் சில நிம்மதியான விஷயங்கள் நடைபெற்றுக் கொண்டுள்ளது. அதில் ஒரு விஷயம் அவரது இரண்டு மகள்களில் இளைய மகளான அதிதி ஷங்கர் நடிகையாக அறிமுகமாகி வெற்றிப் படங்களைக் கொடுத்து வருகிறார். விருமன் படத்தின் மூலம் அறிமுகமான இவர், அதன் பின்னர் மாவீரன், நேசிப்பாயா என மக்கள் மத்தியில் பாராட்டுகள் குவிந்த படங்களில் நடித்து வருகிறார். நேசிப்பாயா படத்திற்கு கிடைத்த வரவேற்பால் தெலுங்கில் புதிய படத்தில் கமிட் ஆகி நடித்து வருகிறார். அதிதி அடிப்படையில் மருத்துவர்.
இவரின் மூத்த மகள் சினிமா பக்கமே எட்டிப் பார்க்காமல் உள்ளார். இவருக்கு கடந்த ஆண்டு மிகவும் பிரமாண்டமாக திருமணம் நடத்தி வைத்தார் ஷங்கர். ஷங்கரின் மகன், அர்ஜித். இவருக்கு தனது தந்தையைப் போல இயக்குநர் ஆக வேண்டும் என்பதுதான் ஆசை. இது குறித்து ஷங்கரிடம் கூறிய பின்னர், ஷங்கர் உடனே தனது படத்தில் உதவி இயக்குநராக சேர்த்துக் கொள்ளவில்லை. காரணம் தனது மகன் என படப்பிடிப்புத் தளத்தில், அவருக்கு சில சௌகரியங்கள் கிடைத்துவிடும் என தன்னுடைய உதவி இயக்குநராக சேர்த்துக் கொள்ளவில்லை.

அர்ஜித்: இதனால், அவர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் மதராஸி படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றி வருகிறார். இது மட்டும் இல்லாமல், ஏ.ஆர். முருகதாஸ் சிகிந்தர் படத்தின் படப்பிடிப்புகளுக்கு சென்ற காலத்தில், கேம் சேஞ்சர் படத்தின் படப்பிடிப்புகளில் கலந்து கொண்டு உதவி இயக்குநராக சில காட்சிகள் படமாக்கும்போது பணியாற்றியுள்ளார்.
இயக்குநர்: அர்ஜித், தற்போது சினிமாவில் நடிக்க கமிட் ஆகியுள்ளார் என கூறப்படுகிறது. மேலும் படத்தின் கதையைக் கேட்டுள்ளார். அது அர்ஜித்திற்கும் ஷங்கருக்கும் மிகவும் பிடித்துவிட்டதால், அர்ஜித் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார். இந்த படத்தை விஜய்யின் போக்கிரி மற்றும் வில்லு படத்தை இயக்கிய பிரபு தேவா இயக்க உள்ளதாகவும் திரைத்துறையில் தகவல்கள் உலா வருகிறது.
அதிதி ஷங்கர்: அர்ஜித் ஏற்கனவே, இந்தியன் 2 படத்தின் இசை வெளியீட்டு விழாவில், நடனமாடி பலரது கவனத்தை ஈர்த்திருந்தார். இந்த விஷயத்தைக் கேள்விப்பட்ட இணையவாசிகள், ஏற்கனவே அதிதி ஷங்கர் நடிக்கிறேன் என படங்களில் ரசிகர்களை அவதிப்படுத்தினார், எவ்வளவோ ட்ரோல் செய்தும் நடிப்பில் தன்னை மெருகேற்றிக் கொள்ளாமல் உள்ளார். இப்படியான நிலையில் ஷங்கரின் மகன் அர்ஜித்தும் நடிக்க வருகிறார், இவர் வந்து என்ன பாடு படுத்தப் போகிறாரோ என்ற கேள்வியை கேட்டு வருகிறார்கள். மேலும் பலர் அர்ஜித் இயக்குநர் அவதாரம் எடுக்க வேண்டும் எனவும் பேசி வருகிறார்கள்.
ஷங்கர்: இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கடந்த 2010ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த படம் எந்திரன். ரஜினிகாந்த், ஐஸ்வர்யா உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவான இந்த படத்தின் கதை தான் எழுதிய ஜூகிபா என்ற கதைதான் என எழுத்தாளர் ஆரூர் தமிழ்நாடன் , ஷங்கர் மீது காப்புரிமை இல்லாமல் தனது கதையை படமாக்கி விட்டதாக எழும்பூர் நீதிமன்றத்தில் கடந்த 2011ஆம் ஆண்டு வழக்கு தொடர்ந்தார். கடந்த 14 ஆண்டுகளாக நடைபெற்று வரும் இந்த வழக்கில் திடீர் திடீர் திருப்பங்கள் ஏற்பட்டு வருகிறது. அதாவது சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கின் அடிப்படையில், அமலாக்கத்துறையும் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது. இந்த வழக்கு தொடர்பாக இந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி அமைப்பிடம் அறிக்கை பெற்றது. அதில், கதை, கதாபாத்திர வடிவமைப்பு, கதையின் கருப்பொருள் ஆகியவை ஜூகிபா கதையுடன் ஒத்துப் போகிறது என கூறப்பட்டதால், ஷங்கர் கதை திருட்டில் ஈடுப்பட்டார் என அமலாக்கத்துறை தரப்பில் கூறப்பட்டது. இதனால் எந்திரன் படத்தின் கதை, திரைக்கதை வசனம் மற்றும் இயக்கத்திற்காக ஷங்கர் ரூபாய் 11.5 கோடிகள் சம்பளம் பெற்றது விசாரணையில் தெரியவந்தது. இதனால் ஷங்கருக்கு சொந்தமான ரூபாய் 10.11 கோடிகள் மதிப்பிலான மூன்று அசையா சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியது. இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ஷங்கர் வழக்கு தொடுத்தார்.
கதைத்திருட்டு: எந்திரன் திரைப்பட விவகாரத்தில் இயக்குநர் ஷங்கரின் சொத்துக்களை முடக்கிய அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எந்திரன் திரைப்பட கதை விவகாரத்தில் இயக்குநர் ஷங்கர் காப்புரிமை சட்டத்தை மீறியுள்ளதாக கூறி அந்த படத்திற்கு பெற்ற சம்பளத்தின் மூலம் ஷங்கர் வாங்கிய அசையா சொத்துக்களை முடக்க அமலாக்கத்துறை உத்தரவிட்டது. அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு எதிராக இயக்குநர் ஷங்கர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இவரது மனு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், என்.செந்தில்குமார் அமர்வில் விசாரணை செய்யப்பட்டது. அப்போது, ஷங்கர் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், எந்திரன் படத்தின் கதை விவகாரத்தில் ஷங்கர் காப்புரிமை சட்டத்தை மீறவில்லை ஆரூர் தமிழ்நாடன் தாக்கல் செய்த மனுவில் சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி தீர்ப்பளித்துள்ள நிலையில் அமலாக்கத்துறை இந்த நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்தார்.
நிம்மதி: எந்திரன் திரைப்படத்தின் கதைக்காக மட்டும் 11.5 கோடி ரூபாய் ஊதியத்தை ஷங்கர் பெறவில்லை எனவும் மற்ற பணிகளுக்காகவும் பெற்றுள்ள நிலையில் சொத்துக்களை அமலாக்கத்துறை எப்படி முடக்க முடியும்? என கேள்வி எழுப்பினார். தனிநபர் அளித்த புகாரின் அடிப்படையில் குற்றம் நடந்துள்ளதாக கூறி வழக்கு பதிவு செய்ய முடியுமா? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மேலும், தனி நீதிபதி ஷங்கருக்கு ஆதரவாக தீர்ப்பளித்துள்ள நிலையில் புகாரின் இறுதி முடிவுக்காக காத்திருக்காமல் நடவடிக்கை எடுத்தது ஏன் என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அமலாக்கத்துறை வழக்கறிஞர் என்.சிபி விஷ்ணு தனிநபர் புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யலாம் எனக் கூறினார். மேலும், அமலாக்கத்துறை நடவடிக்கை மூலம் இயக்குநர் ஷங்கருக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை எனவும் இந்த வழக்கை அமலாக்கத்துறையிடம் அவர் எதிர் கொள்ளலாம் எனவும் தெரிவித்தார்.இதையடுத்து, இயக்குநர் ஷங்கரின் சொத்துக்களை முடக்கிய அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு இடைக்கால தடை விதித்த நீதிபதிகள் மனு குறித்து அமலாக்கத்துறை பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஏப்ரல் 21ம் தேதிக்கு ஒத்திவைத்தனர். அதாவது வரும் வெள்ளிக்கிழமை விசாரணை நடைபெறவுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பினால் ஷங்கர் நிம்மதியாக உள்ளார்.


Click it and Unblock the Notifications











