ரஜினி, இயக்குநர் சிவா திடீர் சந்திப்பு: காரணம் 'விஸ்வாசம்'?
சென்னை: இயக்குநர் சிவா ரஜினிகாந்தை அவரது போயஸ் கார்டன் இல்லத்தில் சந்தித்து பேசியுள்ளார்.
தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் காலம் உள்ளதால் அதுவரை தொடர்ந்து படங்களில் நடிக்க முடிவு செய்துள்ளார் ரஜினிகாந்த். இந்நிலையில் இயக்குநர் சிவா ரஜினிகாந்தை அவரின் இல்லத்தில் சந்தித்து பேசியுள்ளார்.
ரஜினிக்காக தான் எழுதிய ஸ்க்ரிப்படை எடுத்துச் சென்று வாசித்துக் காட்டியுள்ளார் சிவா.

ரஜினிகாந்த்
ரஜினி, சிவா சந்திப்பு சுமார் ஒரு மணிநேரத்திற்கும் மேலாக நடந்துள்ளது. ரஜினி சிவாவுக்கு ஓகே சொல்லிவிட்டாரா என்பது இன்னும் தெரியவில்லை. அப்படியே ரஜினி சம்மதம் தெரிவித்தாலும் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு தான் துவங்குமாம். விஸ்வாசம் படம் பெரிய அளவில் வெற்றி பெற்றதால் கூட ரஜினி சிவா இயக்கத்தில் நடிக்க விரும்பலாம் என்று கூறப்படுகிறது.

தர்பார்
ரஜினி தற்போது ஏ.ஆர். முருகதாஸின் இயக்கத்தில் தர்பார் படத்தில் நடித்து வருகிறார். முதல் கட்ட படப்பிடிப்பு மும்பையில் நடந்து முடிந்தது. இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நாளை துவங்குகிறது. இந்நிலையில் அவர் சிவாவை சந்தித்துள்ளார்.

படங்கள்
ரஜினி மீண்டும் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிக்கக்கூடும் என்று கூறப்படுகிறது. இது தவிர்த்து ரஜினி கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்திலும் நடிக்கும் வாய்ப்பு உள்ளதாம். முழுநேர அரசியலில் ஈடுபடும் முன்பு ரசிகர்களுக்கு வகை, வகையான விருந்து கொடுக்க நினைக்கிறாராம் ரஜினி.

விஸ்வாசம்
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த பேட்ட படமும், சிவா இயக்கத்தில் அஜித் நடித்த விஸ்வாசம் படமும் ஒரே நாளில் ரிலீஸாகின. அந்த படங்களின் வசூல் விபரம் தொடர்பாக ரஜினி, அஜித் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் மோதிக் கொண்டனர். இந்நிலையில் சிவா, ரஜினி சந்திப்பு குறித்து அறிந்த தல ரசிகர்கள் சூப்பர் ஸ்டாருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











