கமல் படத்தால் 1 வருடம் வீட்டில் இருந்தேன்.. அப்போ எங்கய்யா போனீங்க.. கடுப்பான சுந்தர்.சி
சென்னை: இயக்குநர் மணிவண்ணனிடம் உதவி இயக்குநராக இருந்து பிறகு இயக்குநராக அறிமுகமானவர் சுந்தர்.சி. 30க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியிருக்கும் அவர் இப்போது அரண்மனை 4 படத்தை இயக்கியிருக்கிறார். படமானது இந்த மாதம் வெளியாகவிருக்கிறது. இதற்கு முன்பு வெளியான அரண்மனை படத்தின் மூன்று பாகங்களுமே டீசண்ட்டான வரவேற்பை பெற்றவை. இந்தச் சூழலில் அன்பே சிவம் படம் பற்றி சுந்தர்.சி பேசியிருக்கும் வீடியோ ட்ரெண்டாகியுள்ளது.
முறைமாமன் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் சுந்தர்.சி. அந்தப் படம் கடந்த 1995ஆம் ஆண்டு வெளியானது. முதல் படமே மெகா ஹிட்டானது. முக்கியமாக படத்தில் இடம்பெற்ற காமெடி காட்சிகள் அனைத்தும் இன்றுவரை அனைவரையும் சிரிக்க வைப்பவை. அந்தப் படத்தின் வெற்றிக்கு பிறகு முறை மாப்பிள்ளை, உள்ளத்தை அள்ளித்தா, மேட்டுக்குடி, அருணாச்சலம், நாம் இருவர் நமக்கு இருவர், உன்னைத்தேடி, உனக்காக எல்லாம் உனக்காக என அவர் இயக்கிய படங்கள் மெகா ஹிட்டடித்தன.

காமெடி ஜானர் கிங்: சுந்தர்.சியின் இயக்கத்தில் வெளியான படங்களில் காமெடி காட்சிகள் சிரிப்பு சரவெடியை பற்ற வைப்பவை. வின்னர்,உள்ளத்தை அள்ளித்தா, உனக்காக எல்லாம் உனக்காக, அருணாச்சலம் என அவர் இயக்கிய படங்களில் சுந்தர் எழுதிய காமெடி காட்சிகள் இன்றுவரை சிரிப்பு வரவைக்கக்கூடியவை. அதன் காரணமாகவே அவருக்கென்று தனி ரசிகர் பட்டாளம் இருப்பது குறிப்பிடத்தக்கது.
அரண்மனை சீரிஸ்: இடையே ஹீரோவாகவும் நடிக்க தொடங்கிய அவர் கலகலப்பு படத்தை இயக்கி தனக்குள் இருக்கும் இயக்குநர் இன்னும் இறக்கவில்லை என்பதை நிரூபித்தார். பிறகு அரண்மனை படத்தை இயக்கினார். அந்தப் படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. தொடர்ந்து அந்தப் படத்தின் இரண்டு மற்றும் மூன்றாவது பாகங்களை இயக்கினார். அந்தப் படங்களும் டீசண்ட்டான வரவேற்பை பெற்றன. தற்போது அவர் அரண்மனை படத்தின் நான்காவது பாகத்தை இயக்கியிருக்கிறார். படம் இந்த மாதம் வெளியாகவிருக்கிறது. படத்தின் ட்ரெய்லர் வெளியாகி நல்ல ரெஸ்பான்ஸை பெற்றிருக்கிறது.
அன்பே சிவம்: இதற்கிடையே அவர் கமல் ஹாசனை வைத்து அன்பே சிவம் படத்தை இயக்கினார். கமல் ஹாசன் கதை, திரைக்கதை, வசனம் எழுத; படத்தை சுந்தர்.சி இயக்கியிருந்தார். படம் அருமையாக இருந்தாலும் அந்த சமயத்தில் போதிய ரெஸ்பான்ஸை பெறவில்லை. விமர்சன ரீதியாக கொண்டாடப்பட்டாலும் வணிக ரீதியாக தோல்வியையே சந்தித்தது. ஆனால் இப்போது அனைவருமே அந்தப் படத்தை கொண்டாடிக்கொண்டிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
சுந்தர்.சி பேட்டி: இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட சுந்தர்.சி அன்பே சிவம் பற்றி பேசியிருக்கிறார். அந்தப் பேட்டியில் அவர், "அன்பே சிவம் படத்தை இயக்கியதுதான் நான் செய்த தவறு. அந்தப் படத்தால் ஒரு வருடம் நான் சும்மாவே வீட்டில் உட்கார்ந்திருந்தேன். அனைவரும் என்னிடம் அன்பே சிவம் படம் போல் ஏன் இன்னொரு படத்தை இயக்கவில்லை என்றே கேட்கிறார்கள். இப்போது அந்தப் படத்தை பலரும் கொண்டாடிக்கொண்டிருக்கிறார்கள் என்பது உண்மைதான்.
கோபம் வரும்: ஆனால் அதையெல்லாம் பார்க்கும்போது எனக்கு உச்சக்கட்டமாக கோபம்தான் வரும். ஏனெனில் அந்தப் படம் வெளியானபோது யாரும் கண்டுகொள்ளவில்லை. இப்போது கொண்டாடுவதை பார்த்தால், படம் ரிலீஸானப்போ கொண்டாடாம எங்கய்யா போயிருந்தீங்க என்றுதான் கேட்க தோன்றும்" என்றார்.


Click it and Unblock the Notifications











