14 வயதில் திருமணம்..10 பிள்ளைகளுக்காக உழைத்து தேய்ந்த அம்மா.. தங்கர்பச்சானின் உருக்கமான பதிவு!
சென்னை: இயக்குநர், தயாரிப்பாளர், ஒளிப்பதிவாளர், எழுத்தாளர், நடிகர் என பன்முகத் தன்மை கொண்ட தங்கர்பச்சன் தனது தயாரின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். மேலும், தனது அம்மாவின் வாழ்க்கையை ஆவணப்படமாக வெளியிட்டுள்ளார்.
அந்த ஆவணப்படத்தில் எத்தனை ஆயிரம் முறை உச்சரித்த சொல் அம்மா, அம்மாவின் முகத்தை முதன் முதலாக எப்போது பார்த்தோம் என்று யாருக்காவது நினைவு இருக்குமா. நாம் அதிகமாக பார்த்த முகமும், அதிகமாக சேமித்த நினைகளும் அம்மாவுடையது தானே. இந்த உலகில் பிறந்த அத்தனை மனிதர்களும் அம்மாவால் வந்தவர்கள் தான். வாழ்ந்து மறைந்த அத்தனை மனிதர்களும் அம்மாவை இழந்து இருக்கிறார்கள்.

வாழ்ந்து வருபவர்களும் ஒரு நாள் அம்மாவை இழக்கத்தான் போகிறார்கள் என்று என் மனதை தேற்றிக்கொள்ள முடிவில்லை என்று தொடங்கும் இந்த ஆவணப்படத்தில், அம்மா நடப்பது, பேசுவது உணவு உண்பது, அவருடன் திருமண வாழ்க்கை என அனைத்தையும் படம் பிடித்து ஆவணப்படமாக்கி இருக்கிறார் தங்கர் பச்சன்.
தங்கர் பச்சான்: மேலும், தனது அம்மா குறித்து முகநூல் பக்கத்தில் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ஒரு தாயின் வயிற்றில் பிறந்த பிள்ளைகள் இந்த பரபரப்பான இயந்திரத்தனமான பொருள் தேடும் உலகத்தில் ஆளாளுக்கு எதோ ஒரு ஊரில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஒவ்வொரு நாளும் கண்டு பிடிக்கப்படும்அறிவியல் தொழில் நுட்பங்களால் மனிதர்கள் பேசிக்கொள்வதற்குக் கூட நேரமில்லை. இந்த நிலையில் உறவுகளோடு உறவாடவும், உரையாடவும் யாருக்கும் நேரமில்லை.

பட்டினி கிடந்து வளர்க்கிறார்கள்: நம்மையெல்லாம் பெற்று, வளர்த்து, உருவாக்கி விட்டு நம் தாயும், தகப்பனும் நாம் நல்ல முறையில் வாழ்ந்தால் போதும் என ஏதோ ஒரு மூலையில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். பட்டினி கிடந்து, அவமானப்பட்டு தான் ஒவ்வொரு பெற்றோரும் தங்களது பிள்ளைகளை வளர்த்து படிக்க வைக்கிறார்கள். இறுதி காலத்தில் கூட அந்த பிள்ளைகள் அவர்களின் பக்கத்தில் இருப்பதில்லை. வெளி நாடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்ட எத்தனையோ நூற்றுக்கணக்கான பிள்ளைகள் வந்து இறுதிச் சடங்கை செய்வதற்காக நாள்கணக்கில் பிணவறையில் பிணமாக கிடக்கும் பெற்றோர்களின் எண்ணிக்கையும் அதிகமாகிக்கொண்டே இருக்கிறது.
ஆவணப்படம்: ஒவ்வொரு தாய் தகப்பனும் தங்களின் தலைமுறைகளுக்காக இரவு பகல் பாராமல் ஓடி உழைத்து பொருள் சேர்த்துக் கொண்டிருக்கிறோம். அந்த சொத்துக்களை எல்லாம் அனுபவிக்கும் தலைமுறைகளுக்கு அதனை உருவாக்கியவர்களைப் பற்றித் தெரிந்துகொள்ள விரும்புவதில்லை. எல்லோர் கையிலும் கைபேசி, எப்பொழுதும் யாருடனாவது பேசிக் கொண்டிருக்கிறார்கள். வாட்ஸ் ஆப், பேஸ் புக், டுவிட்டர் என விரல்கள் ஓய்வில்லாமல் பக்கங்களை புரட்டிக்கொண்டே இருக்கிறது. எதைக்கண்டாலும் கைப்பேசியிலுள்ள கேமராவால் படம் பிடிக்க தொடங்கிவிடுகிறார்கள். யாரை பார்த்தாலும் படம் பிடிக்கும் கேமராக்கள் இப்பொழுது செல்பி எனும் பெயரில் அவர்களையே படம் பிடித்துக் கொண்டிருக்கிறது.
பத்துபிள்ளைகளின் தந்தை: எத்தனையோ லட்சக்கணக்கான அடி பிலிம் சுருள்களில் யார் யாரையோ படம்பிடித்துக் கொண்டிருந்த நான் என் அப்பாவை பிடித்து வைத்த படம் ஒன்றே ஒன்றுதான். அது கூட கடைசி காலத்தில் காச நோய் வந்து மருத்துவமனையில் இருந்த போது எடுத்ததுதான். அந்த ஒரு கருப்பு வெள்ளைப்படமும் பதிவு செய்யாமல் போயிருந்தால் பத்துப் பிள்ளைகளை பெற்ற அவரின் எதிர்காலத் தலைமுறைகளுக்கு அவர் எப்படி இருப்பார் என்பதேத் தெரியாமல் போயிருக்கும். அப்பா எப்படி நடப்பார், எப்படி பேசுவார், கோபப்படுவார், அன்பு செலுத்துவார் என்பதை வீடியோவாக பதிவு செய்யாமல் விட்டுப் போனதை நினைத்து வருந்துகிறேன்.
முதலாம் ஆண்டு இன்று: அதனாலேயே நேரம் கிடைக்கின்ற போதெல்லாம், அம்மாவுடன் இருந்த போதெல்லாம் அம்மாவின் நடவடிக்கைகளையும், பேச்சுக்களையும் பதிவு செய்து வைத்திருந்தேன். பதினான்கு வயதில் தாலி கட்டிக்கொண்டு பத்து பிள்ளைகளை பெற்று வளர்த்து கரைசேர்த்து இறுதிவரை எந்த ஒரு மருந்து மாத்திரைகளையும் உட்கொள்ளாமல் மருத்துவரிடமே செல்லாமல் 91 வயது வரை தனி அடையாளத்துடன் வாழ்ந்து மறைந்த என் அம்மா லட்சுமி அம்மாளின் முதலாமாண்டு நினைவு நாள் இன்று. நான் எதைப் பேசினாலும், எதை எழுதினாலும், எதற்காக கோபப்பட்டாலும் எல்லாமே அம்மாவிடமிருந்து பெற்றவைகள்தான் என தங்கர்பச்சன் அதில் பதிவிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











