அதை விட்டுவிட்டு கந்தசஷ்டி கவசத்திற்குப் போராடுவதில் அர்த்தமில்லை.. தங்கர் பச்சான் பாய்ச்சல்!
சென்னை: தமிழ்க் கடவுள் முருகனுக்குக் கூட தமிழில் திருமந்திரம் சொல்லத் தயங்குபவர்கள், தமிழை விலக்கி வைத்திருக்கிறார்கள் என்று இயக்குனர் தங்கர்பச்சான் கூறியுள்ளார்.
Recommended Video
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: எஞ்சியிருக்கும் நம் மாநில உரிமைகளும், நம் உரிமைகளும் நாளுக்கு நாள் பறிபோய்க் கொண்டிருக்கின்றன.
இதைப் பற்றியெல்லாம் சிறிதும் கவலை கொள்ளாமல் நமது சிந்தனைகளைச் சிதறடிக்கும் தமிழ்ப் பகைவர்களின் சூழ்ச்சி செயல்களுக்குத் தொடர்ச்சியாகப் பலியாகி வருகின்றோம்.

கவலையும் வேதனையும்
இத்தகையவர்களை கண்டு கொள்ளாமல் புறக்கணித்தாலே அவர்கள் காணாமல் போய்விடுவார்கள். தன்னைத் தமிழன் என உணரும் ஒவ்வொரு தமிழனும் தாய்மொழியான தமிழைக் காப்பாற்றிக் கொள்வதில் அக்கறை கொள்ளாமல் மேலும் மேலும் தேய்ந்து போவது மிகுந்த கவலையையும் வேதனையையும் அளிக்கிறது. பிறமொழி சொற்களின் கலப்பினால் சிதைந்து தேய்ந்து கொண்டிருக்கும் நம் மொழியை தக்க வைத்தால் மட்டுமே நாம் தமிழர்கள்.

தமிழில் திருமந்திரம்
நம் தமிழ் நமது நாவிலும் எழுத்திலும் நின்றால் மட்டுமே நாம் தமிழர்கள். அதற்கான வழிகளில் தான் ஒவ்வொரு தமிழனும் இனி இயங்க வேண்டும்.
ஆலயங்களுக்கு வழிபடச் செல்பவர்கள் தமிழில் திருமந்திரம் சொல்ல அரசாணை பிறப்பிக்கப்பட்டிருந்தும் 'மந்திரத்தை எங்களுக்கு புரியும்படி தமிழில் சொல்லுங்கள்' என ஒரே ஒரு தமிழன் கூட கேட்பதில்லை.

தமிழ்க் கடவுள்
நமக்குப் புரியாததைக் கேட்டுவிட்டு மகிழ்ச்சியுடன் திரும்பி விடுகிறீர்கள். பிற கடவுள்கள் இருக்கட்டும். ஆலயங்களில் தமிழ்க் கடவுள் முருகனுக்குக் கூட தமிழில் திருமந்திரம் சொல்லத் தயங்குபவர்கள், நாக்கு கூசுபவர்கள்தான் தமிழை விலக்கி வைத்திருக்கிறார்கள். அதற்குத் துணைபோகும் தமிழனாகிய நாமும் தமிழன் என கூறிக் கொள்வதை அவமானமாகக் கருதவில்லையா?

ஒவ்வொரு தமிழனும்
இனியாவது ஒவ்வொரு ஆலயங்களிலும் தமிழில் தான் வழிபாடு செய்ய வேண்டுமெனக் கூறுங்கள். அவர்கள் கூறித்தான் ஆகவேண்டும். அது கூறாத வரை கந்த சஷ்டி கவசத்திற்கு மட்டும் போராடுவதில் எந்தப் பொருளும் இல்லை. இதனை ஒவ்வொரு தமிழனும் கடைபிடிக்க வேண்டும் .
அப்பொழுதுதான் நம் முருகனும் நம்முடன் இருப்பான்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











