மக்கள் கருத்தை மதிக்காத மக்களாட்சி…தங்கர் பச்சான் ஆவேசம் !
சென்னை : சூர்யாவின் கருத்தாக மட்டும் இருந்திருந்தால் தமிழகம் இந்த கொதிநிலையை அடைந்திருக்காது. மக்கள் கருத்தை மதிக்காத மக்களாட்சி என்று இயக்குனர் தங்கர் பச்சான் ஆவேசமாக கூறியுள்ளார்.
நீட் தேர்வு அச்சத்தால் தமிழகத்தில் 4 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டனர். இந்த தற்கொலைகள் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தின. இதுகுறித்து நடிகர் சூர்யா காட்டமான கருத்தை பதிவிட்டு இருந்தார். இந்த கருத்து நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் இருப்பதாக கூறி அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சூர்யாவுக்கு ஆதரவாக இயக்குனர் தங்கர் பச்சான் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

மாணவர்களுக்கு நீட் தகுதித் தேர்வு கட்டாயம் வேண்டும் எனக்கூறும் அரசியல் பிழைப்பு வாதிகளுக்கு இவ்வாறு கூறுவதற்கு என்ன தகுதி இருக்கிறது? இவர்களுக்கான தகுதித்தேர்வை யார் நடத்துவது? என்று பல கேள்விகளை எழுப்பி உள்ளார் தங்கர் பச்சன் .
கிராமப்புறங்களிலும், பொருளாதாரத்திலும் பின்தங்கியவர்களின் பிள்ளைகள் தான் முதல் தலைமுறையாக கல்வி பெற்று மருத்துவர்களாக உயர்ந்தார்கள். அத்தகையவர்களால்தான் இன்று மருத்துவ சேவை அனைவருக்கும் வழங்கப்படுகிறது. இதனை ஒழிப்பதற்காக திட்டமிட்டு உருவாக்கப்பட்ட நீட் தேர்வு எனும் அநீதி தேர்வு முறையை தமிழகத்திலுள்ள அனைத்துக் கட்சியினரும் ஒன்றிணைந்து ஒரே இடத்தில் நின்று போராடி தீர்வை கண்டிருக்க முடியும்! ஆனால் அதை செய்யத் தவறிவிட்டார்கள்.

எதிர்வரும் தேர்தல் கூட்டணியை மனதில் கொண்டு தனித்தனியாக எதிர்ப்புகளை தெரிவித்து ஆழ்ந்த இரங்கல் செய்திகளை தெரிவிப்பதாலும், பண உதவியும் அளிப்பதாலும் மாணவர்களை இந்த சதியில் இருந்து காப்பாற்ற முடியாது.
ஏழைப் பிள்ளைகள் 12 பேர்களை இதுவரை நீட் தேர்வு பலி கொண்டிருக்கிறது! உள்ளக்குமுறலில்,வேதனையில், கோபத்தின் உச்சத்தில் உள்ள தமிழக மக்களின் மனங்களுக்கு திரைப்பட நடிகர் சூர்யா அவர்களின் அறிக்கை ஆறுதலையும் நம்பிக்கையும் அளித்திருக்கின்றது.

தமிழகத்தின் அரசியல்வாதிகள் செய்ய வேண்டிய வேலையை ஒரே அறிக்கையில் சூர்யா செய்திருக்கிறார் என மக்கள் நினைக்கிறார்கள். இக்கருத்து சூர்யாவின் கருத்தாக மட்டும் இருந்திருந்தால் தமிழகம் இந்த கொதிநிலையை அடைந்திருக்காது. அதில் உள்ள அனைத்து கருத்துகளும் மக்களின் மனதில் இருப்பவை என்பதுதான் மறுக்க முடியாத உண்மை! இந்நேரத்தில் நம் அரசியல் கட்சிகள் செய்யவேண்டியதெல்லாம் இதுதான்.
அனைத்துக் கட்சியினரும் எதிர்வரும் தேர்தல் கூட்டணி கணக்கை ஒதுக்கி வைத்துவிட்டு தன்னலம் மறந்து தங்கள் பகை மறந்து மக்களுக்காக ஒன்றிணைந்து இதில் உடனடியாக வெற்றி காண வேண்டும் என்று தங்கர் பச்சான் தன் ஆதங்கங்களை வெளிப்படுத்தி உள்ளார்.


Click it and Unblock the Notifications











