'ஒரு ஊர்ல ஒரு ராஜா..' புதிய முயற்சியில் பிரபல இயக்குனரின் மனைவி.. இப்படியும் கதை சொல்றாங்க!
சென்னை: பிரபல இயக்குனர் மனைவி, 'ஒரு ஊர்ல ஒரு ராஜா' என்ற புதிய கதை சொல்லல் நிகழ்ச்சியை தொடங்கியுள்ளார்.
Recommended Video
விஷால், நீதி சந்திரா, தனுஶ்ரீ தத்தா நடித்த 'தீராத விளையாட்டுப் பிள்ளை' படம் மூலம் இயக்குனர் ஆனவர் திரு.
இதையடுத்து, விஷால் நடித்த சமர், நான் சிவப்பு மனிதன், கவுதம் கார்த்திக் நடித்த சந்திரமெளலி ஆகிய படங்களை இயக்கினார். இவர் மனைவி கனி (கார்த்திகா).

ஒரு ஊர்ல ஒரு ராஜா
இயக்குனர் அகத்தியன் மகளான இவர், தனது புதிய பயணத்தை 'ஒரு ஊர்ல ஒரு ராஜா' நிகழ்ச்சி மூலம் தொடங்கியுள்ளார். யூடியூப்பில், தியேட்டர் டி (Theatre D) சேனலில் வெளியாகியுள்ள இந்நிகழ்ச்சி வரலாற்றை கதை சொல்லல் முறையில் தெரிவிப்பதில் வரவேற்பை பெற்றிருக்கிறது. இந்நிகழ்ச்சியை ஒளிப்பதிவு செய்து, படத்தொகுப்பு செய்து தயாரித்திருக்கிறார், இயக்குநர் திரு.

வரலாறு பிடிக்கும்
இதுபற்றி கனி கூறும்போது, ' சின்ன வயதில் இருந்தே வரலாறு எனக்கு பிடிக்கும். வரலாற்றை மற்றவர்களுக்கு எடுத்து சொல்வதும் பிடிக்கும். அந்த வகையில் மிகப்பெரும் கூட்டத்திற்கு, வரலாற்றை கதை வடிவில் சொல்ல முடியும் என்பது பெரிய வாய்ப்பு. இப்படித்தான் இந்த ஐடியா தோன்றியது. முன்பு பெரியவர்கள் எந்த ஒரு கதையையும் சிறுவர்களுக்கு சொல்லும் போது 'ஒரு ஊர்ல ஒரு ராஜா' என்றுதான் ஆரம்பிப்பார்கள்.

ஒழுக்கத்தை
அப்படித்தான் இந்நிகழ்ச்சியின் தலைப்பையும் வைத்துள்ளோம். நான் வரலாற்றின் வழி ஒழுக்கத்தை கற்றுத்தர நினைக்கிறேன். நம் நிலத்தின் வரலாற்றையும் மூதாதையர்களின் வரலாற்றையும் அறிந்து கொள்வதன் மூலம் நமது தென்னிந்திய கலாசாரத்தையும் பாராம்பரியத்தையும் தெரிந்து கொள்ளலாம்.

இந்திய வரலாறு
வரலாற்றின் மூலம் நமது கடந்த காலத்தை தெரிந்து கொள்வதன் மூலம், பல நல்ல விஷயங்களை கற்று எதிர்காலத்தை சிறப்பாக அமைத்து கொள்ளலாம். அதனால் நான் இந்திய வரலாற்றைத் தேர்ந்தெடுத்தேன். பேரழகு மிகுந்த தனித்துவமிக்க வளங்கள் நிறைந்த நம் இந்தியா, படையெடுப்பின் மூலம் எத்தகைய மாற்றங்களை சந்தித்திருக்கிறது என்பதை வரலாற்றின் மூலம் அறியலாம்.

தயக்கத்தில் இருந்தேன்
எல்லோரையும் போலவே இதை பார்வையாளர்கள் எப்படி எடுத்துகொள்வார்கள் என தயக்கத்தில் இருந்தேன். தற்போது நிகழ்ச்சியின் இரண்டு பகுதிகள் வெளியான பிறகு கிடைத்துள்ள பாராட்டு மகிழ்ச்சியையும் நம்பிக்கையையும் தந்திருக்கிறது. இன்னும் சிறப்பாக இதை வழங்கும் ஆர்வத்தைக் கொடுத்திருக்கிறது இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications