மீண்டும் சர்ச்சை கதையை கையில் எடுத்த ஜெய்பீம் இயக்குநர்..சரவணபவன் ராஜகோபாலின் வழக்கறிஞர் எச்சரிக்கை!
சென்னை : சரவணபவன் ராஜகோபால் குறித்து அவதூறு பரப்பும் வகையில் படமெடுத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என அவரது வழக்கறிஞர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தமிழ் சினிமாவில் மிகப்பிரபலமான இயக்குனராக திகழ்பவர் ஞானவேல். இவர் நடிகர் அசோக்செல்வன் நடித்த கூட்டத்தில் ஒருவன் என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகம் ஆனார்.
அதை தொடர்ந்து இவர் நடிகர் சூர்யாவை வைத்து ஜெய் பீம் படத்தை இயக்கி புகழில் உச்சிக்கே சென்றார்.

ஜெய்பீம்
ஜெய்பீம் திரைப்படம் 90 களில் தமிழ்நாட்டில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக் கொண்டு உருவாக்கப்பட்ட திரைப்படமாகும். இது இருளர் பழங்குடியினத்தைச் சேர்ந்த ராஜகண்ணு மற்றும் செங்கேனி ஆகியோரின் துயரை விவரிக்கிறது. ராஜகண்ணு உள்ளூர் காவல்துறையினரால் செய்யாத குற்றத்திற்கு காவல் நிலையத்தில் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு கொல்லப்படுகிறார்.

சர்ச்சை, பாராட்டு
இயக்குநர் ஞானவேல் எழுதி இயக்கியுள்ள இப்படத்தை 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் ஜோதிகா மற்றும் சூர்யா தயாரித்துள்ளனர். சூர்யா சந்துரு என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் லிஜோமோல் ஜோஸ் செங்கேனி கதாபாத்திரத்திலும், மணிகண்டன் ராஜகண்ணு கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். காலெண்டர் சர்ச்சை, பெயர் சர்ச்சை என பலவிதமான சர்ச்சைகள் இப்படத்திற்கு எழுந்த போதும் படம் பல விருதுகளை வாரிக்குவித்தது.

தோசா கிங்
ஜெய்பீம் இயக்குநர் ஞானவேல், சரவணபவன் ஓட்டல் உரிமையாளர் ராஜகோபால் கதையை இந்தியில் திரைப்படமாக எடுக்க உள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்திற்கு தோசா கிங் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. ஜங்கிலி பிக்சர்ஸ் என்ற பிரபல சினிமா நிறுவனம் இந்த திரைப்படத்தை தயாரிக்கவுள்ளது. சரவண பவன் ஹோட்டல் அதிபரை எதிர்த்து ஜீவஜோதி வழக்கு நடத்திய போது சந்தித்த பல இன்னல்களை மையமாக வைத்து தான் இந்த படம் தற்போது உருவாக உள்ளதாக கூறப்படுகிறது.

எச்சரிக்கை
இந்நிலையில் சரவணபவன் உரிமையாளர் ராஜகோபாலன் குறித்து அவதூறு பரப்பும் விதமாக படம் எடுத்தால் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என அவரது வழக்கறிஞர் கணேசன் அதிரடியாக எச்சரிக்கை விடுத்துள்ளார். தமிழகத்தையே உலுக்கிய இந்த சம்பவத்தை படமாக தொடங்குவதற்கு முன்பே சர்ச்சை கிளப்பி உள்ளதால், படம் வெளியாவதற்குள் நிச்சயம் பிரச்சனையை கிளப்பும்.


Click it and Unblock the Notifications











